சிறுவர்.பாடல் - வள்ளுவர் வாழ்த்து
உள்ளம் நிறைந்த தமிழை
உலகம் எங்கும் சேர்த்தார்!
வெள்ளம் போலக் கருத்தை
இல்லம் எங்கும் வார்த்தார்!
அகரம் தொடங்கிக் குறளை
னகரம் நிறைவென முடித்தார்!
சிகரம் ஏறிட மனிதர்
சிந்தையில் நன்றாய்ப் பதித்தார்!
அறத்தின் வழியில் பொருளை
சேர்த்தால் இன்பம் பெறலாம்!
அன்பும் அறமும் கொண்டால்
அயலருக்கும் மகிழ்வைத் தரலாம்!
உனக்குப் பிடித்த குறள்தான்
ஊக்கம் தந்திடும் குறள்தான்!
மனதில் இருத்தி நீயும்
மகிழ்ந்தே ஒலித்திடும் குரல்தான்!
எல்லா மொழியிலும் குறள்தான்
ஏற்றம் பெற்றதைப் பாரீர்!
தினமும் குறளைக் கற்று
திசையெட்டும் புகழ்பெற வாரீர்!
மு.மகேந்திர பாபு - 12-12-2024
0 Comments