சிறுவர் பாடல் - வானொலி

 

சிறுவர் பாடல் - வானொலி


வானின் வழி வீட்டிற்குள்

வந்து விடும் சாதனம்! 

தேனின் சுவையாய் நிகழ்ச்சியைத் 

தந்து விடும் சீதனம்!


உழவர் களின் குரலாக 

ஓங்கி ஒலிக்கும் கருவிதான்!

புலவர் களின் கருத்தினை

தாங்கி வரும் அருவிதான்!


நாட்டு நடப்பைத் தெரிந்திட

நாளும் தரும் செய்திதான்!

பாட்டுச் சத்தம் கேட்டிட

பாலும் தேனும் காதில்தான்!


வீட்டுக் குள்ளும் இருந்திடும்!

வீதி யெங்கும் திரிந்திடும்!

காட்டுக் குள்ளும் சென்றிடும்!

கவலை மறந்து வென்றிடும்!


உழைக்கும் மக்கள் வாழ்விலே

களைப்பை நீக்கும் தோழனாம்!

காலம் மாறிப் போனதால்

கைப் பேசியிலும் கேட்கலாம்!


மு.மகேந்திர பாபு, 

தமிழாசிரியர், இளமனூர், மதுரை.

Post a Comment

0 Comments