சிறுவர் பாடல் - மு.மகேந்திர பாபு - முழுமையும்

 

சிறுவர் பாடல் - முழுமையும்


பூந்தோட்டம்.

வண்ண வண்ணப் பூக்களால்
எண்ண மெல்லாம் துள்ளுதே!
சின்னச் சின்னக் குழந்தைகள்
சிரித்து மகிழ்ந்து பார்க்குதே! 

மொட்டு விடும் ஒருசெடி
தொட்டு உண்ணும் தேனீக்கள்
விட்டுப் போக மனமில்லை
வீடாய் மாறாட்டும் பூந்தோட்டம்!

காலை மாலை வேளையில்
தண்ணீர் ஊற்றும் போதிலே
செடி குளிப்பது அற்புதம்
மனங் குளிர்வது நிச்சயம்.

ஊட்டி மலர்க் கண்காட்சி
கூட்டிப் போகும் போதிலே
உள்ள  மெல்லாம் பறக்குதே
நம்முள் புத்துணர்வு பிறக்குதே !


செடி வளர்த்திட விரும்பினோம்
மரம் வளர்த்திட விரும்பினோம்
சுற்றுச் சூழல் சிறந்திட
புது எண்ணத்தோட திரும்பினோம்!

********************************************


எங்கள் ஆசிரியர்


என்றும் அன்பு உள்ளவராம்

எழுத்தறிவிப்பதில் வல்லவராம்

சமூகம் வளர்ப்பதில் நல்லவராம்

அறியாமை இருளை அகற்றித்தான்

அகவொளி பாய்ச்சும் அறிஞராம்


இறைவன் என்றொரு பெயருண்டு

எங்கள் இதயத்தில் இடமுண்டு

பள்ளி என்னும் கலைக்கூடம்

துயரம் போக்கும் நல்மாடம்


நல்ல பழக்கங்கள் வளர்ந்திடவே

நாளும் கதைகள் சொல்பவராம்

காலை மாலை வேளையென

நாங்கள் கைதொழும் கடவுளாம்

கருணை நிறைந்த ஆசிரியராம்


எல்லை இல்லா வானமாய்

எங்கள் ஆசிரியர் விரிந்தவராம்

வானம் பாடியாய் மகிழ்ந்திருப்போம்

வாழ்க்கை முழுதும் நினைத்திருப்போம்

வாழையடி வாழையாய் நிலைத்திருப்போம்.


********************   **********************

காட்டிற்குள் செல்வோம்!


பசுமை நிறைந்த மரங்களைப்

பார்க்கப் பார்க்க ஆசைதான்!

குளுமை நிறைந்த காற்றிலே

கேட்கும் நல்ல ஓசைதான்!


வெள்ளி போல விழுகுது 

விரைந்து மலையில் அருவிதான் !

துள்ளி வந்து பார்க்குது

வியந்து நிற்கும் குருவிதான்!


வண்ண வண்ணப் பறவைகள்

வணக்கம் வந்து சொல்லுது !

சின்னச் சின்னக் குழந்தைகள்

சிரித்து மகிழ்ந்து செல்லுது !


சத்து நிறைந்த பழங்களும்

கொத்துக் கொத்தாய்த் தொங்குது !

கத்து கின்ற குரங்குகள்

பறித்துப் பறித்துத் திங்குது !


இயற்கை அன்னை மடியிலே

எல்லை இல்லா இன்பமே !

செயற்கை வந்து விட்டாலே

எங்கும் சேரும் துன்பமே !


பூச்சி முதல் யானைவரை

புதுசு புதுசாப் பார்த்தோமே !

பொழுது வந்து சாய்ந்ததாலே

வீடு வந்து சேர்ந்தோமே!

*****************   ***********************

புத்தகத் திருவிழா


புத்தகம் வாங்கலாம் வாருங்கள் !

புத்தியைத் தீட்டிடும் பாருங்கள் !

அறிவே ஆற்றல் கூறுங்கள் !

ஆதரவு நாளும் தாருங்கள் !


ஆண்டிற்கு ஒருமுறை வந்திடுமே !

ஆனந்தம் நமக்குத் தந்திடுமே !

சிறியவர் பெரியவர் அனைவரது

சிந்தையில் நிறைந்திட்ட புத்தகமே !


எண்ணும் எழுத்தும் சிறந்திடவே !

கண்ணும் கருத்தும் உயர்ந்திடவே !

மண்ணும் விண்ணும் நமதாகும் !

மனதைக் கவர்ந்த நூலாலே !


அன்பை வளர்க்கும் புத்தகமும்

அறிவைத் தீட்டிடும் புத்தகமும்

தேசத் தலைவரின் புத்தகமும்

தேடி நாமும் பெறுவோமே !


சிறுகச் சேமித்த பணத்தாலே 

சிறந்த புத்தகம் வாங்கித்தான்

பிறந்த நாளின் பரிசாக 

நண்பருக்குத் தந்து மகிழ்வேனே !

*******************  **********************

மகிழ்வித்து மகிழ்வோம் !


பிறக்கின்ற புத்தாண்டில்

பிரபஞ்சம் மகிழட்டும் !

சிறக்கின்ற செயல்களில்

சிந்தை நெகிழட்டும் !


உள்ளங்கள் கைகோர்த்து

உதவிகளைச் செய்யட்டும் !

இல்லங்கள் இன்பத்தை

இனிதே கொய்யட்டும் !


சுற்றுகின்ற பூமியெங்கும்

சுற்றுச்சூழல் சிறக்கட்டும் !

மகிழ்வித்து மகிழ்கின்ற

மனங்கள் பிறக்கட்டும் !


பண்பாடு நம்மோடு 

பயணித்து வரட்டும் !

அன்போடு அனைவருக்கும்

ஆன்றபெருமை தரட்டும் !

********************    ********************


பொங்குது பொங்கல் - தைத்திருநாள்


புத்தம்புதுப் பொங்கப் பானை பொங்குது !

தமிழ்ப் பூமிதனில் மகிழ்ச்சிதானே தங்குது !

புத்தம்புதுப் பச்சரிசி சத்தமிட்டு வேகுது !

வேளாண்மையின் சிறப்பை நன்றாய்க்  கூறுது !


ஏருதூக்கிப் போகின்ற விவசாயி கூட்டம் !

ஏற்றமுடன் தொடங்கிடுமே தைத்திருநாள் ஆட்டம் !

மண்ணும் விண்ணும் மக்களுக்குக் கண்ணாகும் !

எண்ணம் என்றும் உயர்ந்து பொன்னாகும் !


அமிழ்தான தமிழாலே அகம் மகிழும் !

அன்பான உறவாலே அகிலம் புகழும்!

காளைகளை அரவணைக்க வீரம் விளையும் !

காண்கின்ற கண்களுக்கு விருந்தாய் அமையும் !


வண்ணக் கோலம் வாசலிலே பூத்திருக்குதே !

கட்டிக் கரும்பு வாசலிலே காத்திருக்குதே !

மஞ்சள் செடி மங்களத்தைக் காட்டுதே !

நமது  வீட்டில் இன்பந்தனைக் கூட்டுதே !


உழவிற்கு வந்தனை செய்து வாழும்

தமிழர் மனங்களைத் தைத்திருநாள் ஆளும் !

நிலவிற்கு நாமும் சென்று வந்தாலும்

நிலம் ஒன்றே மக்களின் நலமாகும் !


நண்பர்களைக் கண்டு நாமும் மகிழ்ந்திடுவோம் !

வள்ளுவரின் குறளைப் பாடி புகழ்ந்திடுவோம் !

இருக்கின்ற பொருள் கொடுத்துச் சிறந்திடுவோம் !

இன்று புதிதாய் நாமும் பிறந்திடுவோம் !

***********************   ******************


படியில் பயணம் வேண்டாம் தம்பி - பாடல். இந்து தமிழ் - வெற்றிக்கொடி நாளிதழுக்கு.


படியில் பயணம் வேண்டாம் தம்பி !

நொடியில் எதுவும் நடக்கலாம் தம்பி !

காலை மாலை பேருந்தில் தினமும்

கவனமாகப் பயணித்திட வேண்டும் தம்பி !


கூட்டம் உள்ள பேருந்து வந்தால்

ஒதுங்கி நீயும் நின்றிடு தம்பி !

தொங்கிக் கொண்டு படியில் சென்றால் 

தொலைந்து விடுமே வாழ்க்கை தம்பி !


பள்ளி அருகில் இருந்தால் நீயும்

துள்ளி நண்பருடன் நடந்திடு தம்பி !

நடக்க நடக்க உடலும் உள்ளமும் 

நலத்தை உனக்குத் தந்திடும் தம்பி !


அறிவியல் உலகில் அவசரம் வேண்டாம் !

ஆசிரியர் பேச்சினைக் கேட்டிடு தம்பி !

ஆயிரம் ஆயிரம் கனவுகள் கொண்டு 

அனைவருக்கும் செய்வாய் சமூகத் தொண்டு !

 ********************  **********************


         கடிகாரம்


கடிகாரம் நல்ல கடிகாரம்!

காலம் காட்டும் கடிகாரம்!

அப்பா தந்த கடிகாரம்!

அழகாய் ஓடும் கடிகாரம்!


சின்ன பெரிய முள்கள்

சுறுசுறுப்பாய் ஓடும்!

இரவு பகல் ஓய்வின்றி

டிக்டிக் என்றே பாடும்!


தினமும் பள்ளி செல்லவும்

நண்பர் கேட்டால் சொல்லவும்

தேர்வு விரைவாய் எழுதவும்

எனக்கு நன்கு உதவிடும்!


அதிக மதிப்பெண் பெற்றதால்

அன்புப் பரிசாய்க் கிடைத்தது!

அன்புத் தம்பி தங்கைகளே!

முயன்றால் நீங்களும் பெறலாமே!


*******************     *********************

மழை 


விண்ணில் இருந்து வருகுது !

மண்ணில் ஆறாய்ப் பெருகுது !

காணும் உள்ளம் உருகுது !

தேனும் பாலும் தருகுது !


ஆறு குளங்கள் நிறைக்குது !

ஓடி மண்ணைக் கரைக்குது !

பசுமை எங்கும் படருது !

வளமை மீண்டும் தொடருது !


நெல்லும் புல்லும் வளருது !

உள்ளம் எல்லாம் மகிழுது !

காட்டில் செடிகள் அரும்புது !

வீட்டில் செல்வம் திரும்புது !


உயிர்கள் எங்கும் தங்குது !

உயர்வு நம்மில் பொங்குது !

வானம் தந்த செல்வத்தைக்

காத்து நாமும் மகிழ்வோமே !

*******************   ***********************

சிறுவர் பாடல் - மழை 


மழைக் காற்று வீசுது !

மண்ணின் வாசம் பேசுது !

வானம் மெல்ல இருட்டுது !

இடியும் கொஞ்சம் மிரட்டுது !


மின்னல் வந்து வெட்டுது !

மண்ணில் மழை கொட்டுது !

ஆறாய் வெள்ளம் ஓடுது !

ஆனந்தமாய் மனம் பாடுது !


குளங்கள் நீரால் நிரம்புது !

செடியில் பூக்கள் அரும்புது !

மழையும் மண்ணில் பொழியவே !

மரங்கள் நாமும் வளர்ப்போமே !

******************   ************************

தாலாட்டும் மரங்கள் 


பச்சை மரத்தைப் பாருங்கள் !

பாடி ஆடிட வாருங்கள் !

குழந்தைகள் ஒன்றாய்க் கூடுங்கள் !

மரங்களை நன்றாய்ப் பேசுங்கள் !


அணில்கள்  கிளைகளில் தாவிடுமே !

அழகாய்க் குயிலும் கூவிடுமே !

மயில்கள் தோகை விரித்திடுமே !

மனங்கள் மெல்லச் சிரித்திடுமே !


கிளைகளில் பழங்கள் தொங்கிடுமே  !

கிளிகள்  எங்கும் பேசிடுமே !

ஆந்தைகள் இரவினில் தங்கிடுமே !

ஆனந்தம் மனதினில் பொங்கிடுமே !


சுற்றிச் சுற்றி வரலாமே  !

சுகமாய்க் காற்றைப் பெறலாமே !

குழுவாய் நாமும் படிப்போமே !

குறைகள் களைந்து முடிப்போமே !


மரங்கள் இருக்கும் இடமெல்லாம் 

மகிழ்ச்சி நிலைத்திடும் பாருங்கள் !

கரங்கள் ஒன்றாய்க் கூடியே

காத்திட இன்றே வாருங்கள் !

***********************    *******************


எங்கள் தேசம்


உலகம் போற்றும் தேசம்

எங்கள் இந்திய தேசம்

நாட்டின் மேலே பாசம்

தென்றல் காற்றாய் வீசும்


புத்தொளி பறக்கும் கொடிதான்

புரட்சிகள் செய்திட்ட கொடிதான்

தாமரை மலர்களைப் போல

முகம் மலர்ந்தே சிரித்திடுவோமே !


தேசம் எங்கள் உயிராகும்

தேசிய கீதம் உணர்வாகும்

அசோகத் ஸ்தூபி சின்னம்தான்

அதிலே இருக்குது எண்ணம்தான்


மொழிகள் பலப்பல இருந்தாலும்

இனங்கள் பலப்பல இருந்தாலும்

இந்திய ரென்றே சொல்லிடுவோம் !

அன்பால் நாங்கள் வென்றிடுவோம் !


வீரமங்கை வேலு நாச்சி

மாவீரன் சுந்தர லிங்கம் என

தேசம் காத்த தலைவர்களை

தினமும் நாங்கள் நினைத்திடுவோம் !


காந்தியும் திலகரும் பகத்சிங்கும்

கப்ப லோட்டிய தமிழனும்

கொடியைக் காத்த குமரனும் 

எங்கள் மனதில் இருக்கின்றார் !


நல்லோர் செய்த தவத்தாலே

நாடு விடுதலை பெற்றதே !

நாங்கள் நாட்டின் கண்கள்தான்

நாட்டை வீட்டை நேசிப்போம் !


********************    ***********************

எங்கள் நாடு 


எங்கள் நாடு இந்திய நாடு

எங்கும் வளங்கள் நிறைந்த நாடு

காஷ்மீர் குமரி எல்லை களாம்

கண்ணியம் மிகுந்த பிள்ளைகள் நாம்


 பாரத மாதா  நம் அன்னை

பண்புடன் தொழுவோம் நம் மண்ணை

மூன்று புறமும் நீருண்டு

தீப கற்பம்  பேருண்டு 


அண்ணல் காந்தித் தாத்தாவும்

அகிம்சை வழியில் சென்றிட்டார்

அந்நியர் ஆட்சி முறையினயே

கைத்தடியாலே வென்றிட்டார் !


தியாகிகள் பிறந்தது நம்நாடு

தேசம் புகழும் நம்நாடு

ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோமே !

உலகை அன்பால் ஆள்வோமே !

*******************   *********************

போட்டி போடலாம் வாங்க !


போட்டி போடலாம் வாங்க !

நமக்குள்ள போட்டி போடலாம் வாங்க !


அறிவை வளர்க்கனும்

அதோடு அன்பையும் வளர்க்கனும்

நட்பை வளர்க்கனும் 

நாளும் நன்றாய் உயர்ந்திடவே -  போட்டி 

மனப்பான்மையை வளர்க்கனும் !


வகுப்பில் முதல் மதிப்பெண் 

நான்தானு போட்டி போடனும்

ஆசிரியர் சொல்லும் கட்டளையை உடனே  முடிப்பேன்

வீட்டுப் பாடம் என்றாலே 

உடனே படிப்பேன்

பேச்சா எழுத்தா விளையாட்டா 

எல்லாமும் நான்தான் என



போட்டி போடலாம் வாங்க!


போட்டியும் உண்டு பொறாமையும் உண்டு !

வெற்றி பெற்றா வாழ்த்தவும் செய்வோம் !

அவர் வெற்றிக்குத் தலை வணங்கவும் செய்வோம் !

குறையைக் களைந்து நிறைவைத் தந்திட 


போட்டி போடலாம் வாங்க !


வாழ்வில் உயரம் அடைந்திட

வளமை நம்மில் நிறைந்திட

ஆக்கம் நம்மில் தோன்றிட 

தூக்கம் நம்மில் அகன்றிட

போட்டி போடலாம் வாங்க!

நல்லா போட்டி போடலாம் வாங்க !

******************   ;***********************

செல்போன் விழிப்புணர்வுப் பாடல்


உள்ளங்கையில் உலகம் இந்த செல்லுதானுங்க

நல்ல உள்ளங்களை உருவாக்குவதும்  செல்லுதானுங்க

நாட்டு நடப்பு தெரியனுமா செல்லப் பாருங்க

வீட்டு வேல செய்திடவும் செல்லப்பாருங்க ( உள்ளங் ... )


பள்ளிப் பாடங்களைத் தினமும் நாமும் கற்கலாமே !

பண்புடனே வாழ்வில் நாமும் நிற்கலாமே !

தேவையென்றால் மட்டும் செல்லைப் பாருங்க !

வாழ்க்கையிலே உயர  வழி கூறுங்க   !             ( உள்ளங் ...)


எப்போதும் பாத்தாலே கண்ணும் கெட்டுப் போயிரும்

தப்பான   செயல்களுக்கு   வழிவகுத்துக் கொடுத்திடும்

 அறிவியலில் ஆக்கம் இருக்கு அழிவும் இருக்குதே !

ஆக்கம் மட்டும் எடுத்துக் கொண்டு ஊக்கம் பெறுவமே !

                   ( உள்ளங் ... )


நண்பரோடு ஆடிப்பாடி அனுதினமும் மகிழலாம் !

அன்புடனே பெற்றோரிடம் அளவளாவி மகிழலாம் !

செல்லமாகச் செல்லைக் கொஞ்சம் ஓரங்கட்டுங்க !

சிந்தையெலாம் மகிழ்ச்சிதானே நடையக் கட்டுங்க !          ( உள்ளங் ... )


********************  ***********************

அறிவாயுதம் 


ஆயுதம் வாங்குங்கள் ! - அறி

வாயுதம் வாங்குங்கள் !

அகத்தை வாழ்த்தும் - அறி

யாமையை வீழ்த்தும்

ஆயுதம் வாங்குங்கள் !


புத்தகம் புரட்டுங்கள் ! - தினம்

புத்தகம் புரட்டுங்கள் !

புத்தியில் உள்ள 

பூசலை விரட்டுங்கள் - தினம்

பூசலை விரட்டுங்கள் !


நூலகம் செல்லுங்கள் ! - தினம்

நூலகம் செல்லுங்கள் !

நுண்மான் நுழைபுலம் கொண்டே

மேடையை வெல்லுங்கள் ! - பேச்சில்

மேடையை வெல்லுங்கள் !


தாளெனும் வயலில் - தினம்

விளையும் சொற்கள் ! 

வாசக விவசாயிக்கு

தாகம் தீர்க்கும் 

எழுத்து நெற்கள் !


பக்கம் புரட்ட - தினம்

பக்கம் புரட்ட - நம்

பக்கம் வந்திடுமே !

பக்குவப் படுத்தி

பகுத்தறிவைத் தந்திடுமே !


மானம் காப்பது 

நூலாடை என்றால் 

மனித மனம் காப்பது

காகிதம் சேர்ந்த

புத்தமன்றோ ?


பூங்கொத்தைத் தவிர்த்து

வாழ்த்தும் போதெல்லாம்

புத்தகம் வழங்கலாம் !

புத்தகமே தனிமையின்

துணையென முழங்கலாம் !


புத்தகத்தைக் காதலிபோல

கையில் தூக்குங்கள் !

புன்னகை பூக்க

மேனியைத் தடவி

இணையென ஆக்குங்கள்  !


**********************   ******************


இயற்கையைப் பாதுகாப்போம் !


சின்னச் சின்னக் குழந்தைகளே கேளுங்க !

இயற்கையோடு சேர்ந்து நீங்க வாழுங்க !

மண்ணின் வளம் காக்க வேணும் நாமதான் !

மகிழ்வோடு இருக்கும் நம்ம பூமிதான் !


பூமிச்சாமி தந்த வரம் மரங்கள்தான் - அதைப் 

பொக்கிஷமாய்க் காக்க வேணும் மனிதர்தான்

மண்ணில் இருக்கும் மரங்கள் நமக்கு தாயடா !

மரங்களோடு வாழ்ந்திடவே ஓடிடும் நோயடா !


உறவு போல பறவைக் கூட்டம் வருகுது !- பழம்

உண்ட பின்னே பாடல்களைத் தருகுது !

எச்சத்தாலே மரங்களைத் தினம் பெருக்குது !

மனித இனம் மரங்களைத்தான் சுருக்குது !


வீடிருக்கும் நண்பர்களே வாருங்கள் !

வீதியெங்கும் மரம் நடவே வாருங்கள் !

பிறந்த நாளில் நட்டிடலாம் வாருங்கள் !

பிள்ளை போல மரங்களைப் பாருங்கள் !


**********************  ******************1


கோடை விடுமுறை


கோடை விடுமுறை வந்ததே !

குதூகலம் நமக்குத் தந்ததே !

பள்ளி நினைவு மறந்ததே !

விளையாட ஆசை பிறந்ததே !


தினுசு தினுசா விளையாடி 

புதுசு புதுசா மகிழ்ந்தாடி

திசைகள் நான்கும் பறந்தோடி

திரிவோம் நாங்கள் வானம்பாடி !


காலை மாலை வேளைகளில்

கவலை இன்றிச் சுற்றிடுவோம் !

நேரம் போவதே தெரியாமல்

பசியைக்கூட மறந்திடுவோம் !


இளநீர் பதநீர் நுங்குமே

கோடையை இதமாய் மாற்றிடுமே !

கோலி கிட்டிப்புள் பம்பரமே

மகிழ்ச்சியில் நம்மை ஏற்றிடுமே !


பல்லாங்குழியும் பாண்டியும்

குதூகலம் தரும் விளையாட்டே !

தாயம் போட்டு விளையாட

காயம் ஏதும் இல்லையே !


உறவைத் தேடிச் சென்றிடுவோம் !

உள்ளம் மகிழப் பேசிடுவோம் !

தாத்தா பாட்டி சொல்லும் கதைகளை

கேட்டே வாழ்வில் வென்றிடுவோம் !


                                         

**********************   -******************

பள்ளிக் கூடம் திறந்ததே !


பள்ளிக் கூடம் திறந்ததே !
கோடை விடுமுறை மறந்ததே !
துள்ளிக் கொண்டு வந்தோமே !
நண்பர்களுக்கு இனிப்பு தந்தோமே !

புத்தம் புதிய ஆடைகளும்
புத்தம் புதிய புத்தகங்களும்
சத்தம் நிறைந்த வகுப்பறையும்
சந்தோசத்தைத் தினமும் தந்திடுமே !

வரிசை முறையில் சென்றிடுவோம்
வழிபாட்டுக் கூடம் நோக்கித்தான் !
ஆசிரியர் கூறும் கருத்துக்களை
ஆர்வமாய் மனதில் தூக்கித்தான் !

சின்னச் சின்னக் குழுக்களாக
சிரித்தே தினமும் விளையாடுவோம் !
வண்ண வண்ணப் பூக்கள்மலர
விரும்பிச் செடிகள் நட்டுவைப்போம் !

ஆடல் பாடல் செயல்களாலே
ஆனந்தம் வகுப்பறையில் பொங்கிடுமே !
ஆண்டு முழுவதும் ஆசிரியரால்
கல்வி மனதில் தங்கிடுமே !

நன்மை பலவும் செய்திடவே
கல்வி கற்று உயர்ந்திடுவோம் !
மாணவர் நாங்கள் முயற்சித்தே
வீட்டையும் நாட்டையும் உயர்த்திடுவோம் !


*******************************    ******************************


புத்தாண்டே வருக ! ( குழந்தைப் பாடல் )

புத்தாடை அணிந்து நாமும்
புத்தாண்டை  வரவேற்போம் !
பூமிப் பந்து நாளும் வளம்பெறவே
மரம் நட கரம்கோர்ப்போம் !

மனித நேயம் மலரச் செய்த
மாமழையைப்  போற்றுவோம் !
மனமெங்கும் மகிழ்ச்சி நிறைந்திட
நேயக் கரங்கள் நீட்டுவோம் !

இயற்கை தந்த கொடைகளை
இன்பமாய் காப்போம் !
இயன்றவரை மனிதர் பிடியிலிருந்து
உடனடியாய் மீட்போம் !

புத்தாண்டில் புதுப்பயணம் தொடங்கிட
சபதங்களை எடுப்போம் !
மனக்குளத்தில் நிறைந்திருக்கும்
மாசுகளைத் துடைப்போம் !

புத்தாடை போலவே மனமும்
புதிதாக  வைப்போம் !
புத்துணர்வால்  ஆண்டுமுழுதும்
இதயங்களைத் தைப்போம் !

++++++++++++++++++   ++++++++++++++++++

அகிம்சை வீரரைப் போற்றுவோம் ! ( அக்.2 காந்தி ஜெயந்தி )

அகிம்சை கொள்கை கொண்டவராம்
அகிலம் போற்ற வாழ்ந்தவராம்
பொய்யே பேசா வாழ்க்கையினை
அரிச்சந்திர நாடகத்தால் கற்றவராம் !

அடிமையில் இருந்த தேசத்தை
அன்பு நெறியில் மீட்டவராம் !
துப்பாக்கி பீரங்கி ஆயுதங்களை
கைத்தடி கொண்டு வென்றவராம் !

உழைக்கும் வர்க்கத்தின் அரையாடை
உடுத்த வைத்தது கதராடை !
மதுரை மண்தான் மகாத்மாவின்
மனதை மாற்றிய மாநகராம் !

ஓங்கி மிதித்த வெள்ளையனும்
உள்ளம் நெகிழ்ந்து திருந்தவே
காலணி ஒன்றைத் தன்கையாலே
சிறைக் காவலனுக்குத் தந்தாராம் !

குழந்தைகள்  மகிழ்ந்து அன்பாலே
தாத்தா என்று அழைத்தனரே !
உலகம் என்றும் தழைக்கவே
அகிம்சை வழியில் செல்வோமே !

மு.மகேந்திர பாபு ,


*******************************    *******************************


மரம் வளர்ப்போம் தம்பி !

பள்ளி செல்லும் தம்பியே !
பசுமை எங்கும் நிறைந்திட
வீட்டில் வீதியில் பள்ளியில்
விரும்பி மரம் நடுவாய் !

சுற்றுச் சூழல் சிறந்திடுமே !
சோம்பல் எல்லாம் பறந்திடுமே !
மண்ணின் மைந்தன் மரங்களினால்
விண்ணின் மழைத்துளி கிடைத்திடுமே !

புவியின் வெப்பம் குறைந்திடுமே !
குளங்கள் எல்லாம் நிறைந்திடுமே !
தூய காற்று கிடைத்திடுமே !
இயற்கை இன்பம் பெற்றிடுமே !

பிறந்த நாளில் நட்டிடலாம்
அரசு விழாக்களில் வைத்திடலாம்
நினைவுப் பரிசாய் தந்திடலாம்
நீங்கா இன்பம் பெற்றிடலாம் !

***********************   *************************


தேர்வுக்காலம்

அன்புத் தம்பி தங்கைகளே !
அருகில் வந்தது தேர்வுநாள் !
ஆண்டு ஒன்று நிறைந்திட
உன்னறிவை அறிவது தேர்வுத்தாள் !

கற்ற கல்வி யாவையும்
கவனமாய் மனத்தில் கொண்டே
கேட்கும் வினாக்கு விடைதனை
நன்றாய் நீயும் எழுதிடுவாய் !

விளையாட்டைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
வீதியில் நடமாடுவதை விட்டுவிட்டு
வீட்டில் அமர்ந்தே இனிநீயும்
விருப்பத்தோடு பாடம் படித்திடுவாய் !

குருட்டு மனனம் தவிர்த்தே
மனத்தில் நன்கு பதிந்தபின்னே
மகிழ்வோடு பாடம் படித்தே
மதிப்பெண் பெற்றே வென்றிடுவாய் !

எதிர்காலம் இனிதே வளமாகும்
ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவாய்
மாற்றம் செய்வது மதிப்பெண்ணாம்
மகிழ்ந்தே நீயும் கற்றிடுவாய் !


********************   ******************************

புத்தாண்டே வருக!

புத்தாண்டு வருகுது
புத்துணர்வு  பெருகுது
வாணவெடி வெடிக்குது
வண்ணமாகச் ஜொலிக்குது !

வாழ்த்துக்களைச் சொல்லுவோம்
வாழ்க்கையிலே வெல்லுவோம்
மகிழ்ச்சிதனை அள்ளுவோம்
மாணவராய்த் துள்ளுவோம் !

நல்லதையே செய்திட
உறுதிமொழி எடுப்போம் !.
தீயதைக் கைவிட
தீர்க்கமாய் இருப்போம் !

அனைவரையும் நினைத்திடுவோம்
உற்றார் உறவினராக  !
அன்பினால் நனைத்திடுவோம்
தோழர் தோழியராக !

சுற்றுச்சூழல்  நலமாக
மரங்களையே நட்டிடுவோம் !
இயற்கையை அழிக்கின்ற
நெகிழிப்பையை  விட்டிடுவோம் !

வீட்டையும் நாட்டையும்
வளம்பெறச் செய்திடுவோம் !
வெற்றிகளைக்  குவித்து
மகிழ்வாய் வாழ்ந்திடுவோம் !


*********************     ****************************


மரம் நடுவோம் நண்பர்களே !
------- ------------ ----------------

மனம் போல வாழ்ந்திடவே
மரம் நடுவோம் நண்பர்களே !
வனம் போன்ற காட்சிக்கு
கரம் கொடுப்போம் நண்பர்களே !

பசுமை எங்கும் நிறைந்திடவே
இனிமை தானே எங்கும் !
பறவைக் கூட்டம் பாடிடவே
மகிழ்ச்சி என்றும் தங்கும் !

தளிர்த்து வரும் செடியினாலே
தன்னம் பிக்கை வளரும் !
மொட்ட விழ்ந்து விரிகையிலே
முகத்தில் மகிழ்ச்சி மலரும் !

மரமும் மனித நேயமும்
இப்போது நமதிரு கண்கள் !
வளரும் குழந்தை கற்றிட
பாடணும் இசைப் பண்கள் !

வீடு பள்ளி வீதியென
பசுமை கொண்டு வாழ்வோம் !
விருப்பங் கொண்டு உலகினை
மரங் களாலே ஆள்வோம் !


************************   **********************

புத்தகம்

புத்தகம் நல்ல புத்தகம்
புத்தியை வளர்த்திடும் புத்தகம்
புதுமைகள் அடங்கிய புத்தகம்
வளமைகள் காட்டிடும் புத்தகம்

படங்கள் அடங்கிய புத்தகம்
பண்பை வளர்த்திடும்  புத்தகம்
கதைகள் சொல்லிடும் புத்தகம்
கருத்தால் கவர்ந்திடும் புத்தகம்

சிறியவர் பெரியவர் அனைவரது
சிந்தையைத் தூண்டிடும் புத்தகம்
வறியவர் பலரைத் தன்னாலே
வாழ வைத்திடும் புத்தகம்.

தடங்கல் இன்றிப் பேசிடவே
தயார் செய்திடும் புத்தகம்
பாதைகள் வகுத்துச் சென்றிடும்
படிப்பதால் பலரையும் வென்றிடும்

விதையாம் நீதிகளை உள்ளத்தில்
வேரூன்றி வளர்த்திடும் புத்தகம்
மேதைகள் பலரை உருவாக்கியதும்
மேன்மை தாங்கிய புத்தகமே !

*********************   ***************************

எங்கள் பள்ளி

பள்ளி எங்கள் பள்ளி
பள்ளி செல்வோம் துள்ளி
காலையில் தினமும் எழுந்து
கடவுளைத் தொழுவோம் விழுந்து.

மகிழ்வாய்ச் செல்வோம் வாராய்!
சீருடை அணிந்து ஜோராய்!
பாடல் படித்துக் கூறாய்!
பண்பால் நடப்பாய் நேராய்!

ஒன்றாய்ப் படித்திடும் தோழரிடம்
ஒற்றுமை உணர்வுடன் பழகிடுவாய்
நன்றாய்ப் பாடம் படித்து
நானிலம் போற்ற நடந்திடுவாய்.

*******************    *****************************


விடுமுறைக் கொண்டாட்டம் 


பாட்டி வீட்டிற்குப் போகலாம்!

பாட்டுப் பாடி ஆடலாம்!

மாமா வீட்டிற்குப் போகலாம்!

மழையில் நனைந்து ஓடலாம்!


வரப்பில் நடந்து செல்லலாம்!

வயலில் நெல்லைப் பார்க்கலாம்!

அலை அடிக்கும் கண்மாயில்

ஆசையாய் நீந்தி மகிழலாம்!


பறவை காட்டில் பறப்பதைப்

பார்த்து நாமும் பறக்கலாம்!

அம்மா என்றே அழைத்திடும்

பசுவிடம் பாலும் கறக்கலாம்!


கம்மங் கூழும் குடிக்கலாம்!

காலையில் கதையும் படிக்கலாம்!

விருப்பம் போல மகிழவே

திருப்பம் தந்திடும் விடுமுறையே!


*********************    ********************

குயிலண்ணா! மயிலண்ணா!


குயிலண்ணா! குயிலண்ணா!

எங்கே இருந்து பாடுகிறாய்?

குரலை மட்டும் தந்துவிட்டு

கிளைக்குள் என்ன தேடுகிறாய்?


மயிலண்ணா! மயிலண்ணா!

எங்கே இருந்து பறக்கிறாய்?

அழகுத் தோகை விரித்தேதான்

தேசியப் பறவையாய்ச் சிறக்கிறாய்!


முயலண்ணா! முயலண்ணா!

எங்கே இருந்து ஓடுகிறாய்?

வேட்டை நாய்கள் விரட்டிட

வேதனையில் நீயும் வாடுகிறாய்!


அணிலண்ணா!அணிலண்ணா!

அழகாய் மரத்தில் ஏறுகிறாய்!

கொய்யாப் பழத்தின் சுவையினைக்

குதித்துக் குதித்துக் கூறுகிறாய்!


மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர்,

இளமனூர், மதுரை.

97861 41410.

******************  ***********************

அதிகாலையில் எழுவோம் !

அதிகாலையில் தினமும் எழுவோமே!
ஆண்டவனை நாமும் தொழுவோமே !
பாடங்களை விரும்பிப் படிப்போமே !
படித்ததை எழுதியும் முடிப்போமே !

அமைதி எங்கும் நிலவிடுமே !
ஆற்றல் மனதில் உலவிடுமே !
இயற்கைக் காற்று வந்திடுமே !
இன்பம் நமக்குத் தந்திடுமே !

சேவலும் விடியலை அழைத்திடுமே !
சேர்ந்தே நம்முடன் உழைத்திடுமே !
கிழக்கில் சூரியன் உதித்திடுமே !
கீழ்வானம் விடியலைப் பதித்திடுமே !

பறவைகள் வானில் பறந்திடுமே !
பார்க்கக் கவலை மறந்திடுமே !
நாளிதழ் வந்து சேர்ந்திடுமே !
நாட்டு நடப்பும் தெரிந்திடுமே !

நண்பர் கூட்டம் சேர்ந்திடுமே !
நடந்தே பள்ளிக்குச் சென்றிடுமே !
அறிவு புகட்டும் ஆசானின்
வார்த்தை கேட்டு வென்றிடுமே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
செல் - 97861 41410

********************   *********************


சிறுவர் பகுதி - தமிழ்நாடு இபேப்பர்.காம்

   பச்சைக் குடை

பச்சைக் குடையைப் பாருங்கள் !
பரந்து விரிந்து நிற்பதை !
பறவைக் கூட்டம் வந்துதான்
பாடம் தினமும் கற்பதை !

இலைகள் காற்றில் அசைந்திடும்
இனிய இசையைத் தந்திடும் !
பூக்களின் வாசம் அழைத்திடும் !
மனமும் மணதில் திளைத்திடும் !

அறிவில் ஒன்று என்றாலும்
அழகாய் நம்மைக் காத்திடும்!
அருகில் இருந்து பார்த்திட
நீண்ட ஆயுள் சேர்த்திடும்!

பாதை எங்கும் வளர்த்திட
பயணம் என்றும் நலமாகும்!
பார்க்கும் இடத்தில் மரமென்றால்
நாடே செல்வ வளமாகும்!

******************** *********************


பள்ளி செல்வோம்!

பள்ளிக் கூடம் செல்வோமே!
பாடம் படித்துச் சொல்வோமே!
பண்பால் நாமும் வெல்வோமே!
அன்பால் மனதில் இணைவோமே!

புதிய புத்தக வாசமே!
புதுமை செய்யத் தூண்டுமே!
புதிய நண்பரின் பாசமே!
என்றும் நமக்கு வேண்டுமே!

பாடம் நன்கு படிப்போமே!
பாங்காய் எழுதி முடிப்போமே!
ஆசான் சொல்தான் அமிர்தமே!
மனதைச் செம்மை செய்யுமே!

ஆடிப்பாடி மகிழ்ந் திடலாமே!
ஆர்வமாய் விளை யாடிடலாமே!
ஆண்டின் இறுதியில் வென்றிடலாமே !
ஆசிரியர் சொல்படி நின்றிடலாமே!

*******************    **********************

சுறுசுறுப்பாய் இருப்பாய் !

சோம்பல் இருக்கும் நெஞ்சிலே
சோகம் மட்டுமே தங்கும் !
சுறுசுறுப்பு இருக்கும் நெஞ்சிலே
சுகமே என்றும் பொங்கும் !

நாளை நாளை என்றுநீயும்
நாளைத் தள்ளிப் போடாதே !
நம்பிக்கை இழந்து நீயும்
நாணம் கொண்டு வாடாதே !

எடுக்கும் செயலை இனிதாக
இன்றே செய்தால் நலமாகும் !
எல்லை இல்லா மகிழ்வாலே
இல்லம் என்றும் வளமாகும் !

தூங்கித் தூங்கிக் காலத்தை
துயரில் நீயும் வீழ்த்தாதே !
ஏங்கித் திரியும் நாளானால்
எல்லார் மனமும் வாழ்த்தாதே !

விரும்பி எதனைச் செய்தாலும்
வெற்றி உனது வசமாகும் !
அரும்பும் பள்ளிக் காலத்தில்
கனவு எல்லாம் நிசமாகும் !

*******************   ********************


பச்சை மரமே ! 

பச்சை மரமே ! பச்சை மரமே !
பரந்து விரிந்த பச்சை மரமே !
காயும் கனியும் தந்திடும் மரமே !
நோயும் நொடியும் நீக்கிடும் மரமே !

பறவையின் கூட்டைத் தாங்கிடும் மரமே !
உறவாய் விலங்குகள் தங்கிட வருமே !
பூமியின் வெப்பம் குறைத்திடும் மரமே !
சாமிகள் இருந்திடும் சாதனை மரமே !

விழுதுகள் வேரினைத் தொட்டிட வருமே !
விரும்பிச் சிறுவர் ஆடிடும் மரமே !
மனித குலத்தின் மூன்றாம் கரமே !
மண்ணின் மகனும் நீயே மரமே !

வாசனைப் பூக்களை உதிர்த்திடும் மரமே !
வாழ்ந்தபின் இருக்கையாய் மாறிடும் மரமே !
ஏணியாய் மாறி உயர்த்திடும் மரமே !
ஞானியாய்ப் புத்தனை மாற்றிய மரமே !

மழையைத் தந்திடும் வள்ளல் மரமே !
மானம் காத்திட வருவதும் மரமே !
தானம் சிறந்திட இருப்பதும் மரமே !
தலையைத் தாழ்த்தி வணங்குது கரமே !

*******************   ********************


சுட்டிக் குழந்தை 

சுட்டித் தனங்கள் செய்கின்ற
குட்டிக் குட்டிக் குழந்தையே !
கட்டித் தங்கம் போலவே 
நித்தம் நீயும் ஜொலிக்கிறாய் !

தவழும் போதும் அழகுதான் 
மகிழும் போதும் அழகுதான் !
மழலைப் பேச்சுக் கேட்கையில்
மகிழ்ந்து போகும் உலகுதான் !

கள்ளம் இல்லா முகத்திலே 
கடவுள் தானே தெரிகிறார் !
இல்லம் எங்கும் உன்னாலே
இனிய நடனம் புரிகிறார் !

பிஞ்சுக் கால்கள் நெஞ்சிலே 
பஞ்சு போல நடக்குதே !
கொஞ்சிப் பேசும் போதிலே
சோகம் எல்லாம் கடக்குதே !

பிள்ளை மனம் இருந்தாலே 
தொல்லை என்றும் இல்லையே !
நல்ல வாழ்வு வாழ்ந்திட
பிள்ளை மனம்தான் எல்லையே !


******************   ********************



 பள்ளிக் காலம்

துள்ளித் திரியும் பள்ளிக் காலம்
சொல்லி மகிழ்வோம் எல்லா நாளும் !
நட்பை இணைக்கும் அன்புப் பாலம் !
முதுமை வரையில் மனதை ஆளும் !

வண்ணம் நிறைந்த வகுப்பில் தான்
எண்ணம் எங்கும் கல்வித் தேன் !
கதையும் பாட்டும் சிரிக்க வைக்கும் !
கவலை நீங்கிப் பறக்க வைக்கும் !

எண்ணும் எழுத்தும் எழுதிடப் புரியும் !
கண்ணும் கருத்துமாய் மனதினில் விரியும் !
பென்சிலும் பேனாவும் ஏட்டினை நிறைக்கும் !
பெற்றோர் கவலையைக் காலம் குறைக்கும் !

சின்னச் சின்ன விளையாட்டில் மனம்
சேர்ந்தே  நட்புடன் மகிழ்ந்திடும் தினம்!
கூடி வாழும் அன்பைப் பெற்றோம் !
குழந்தைப் பருவத்தில் நல்லதைக் கற்றோம் !

நாள்கள் பலப்பல விரைந் தோடும்
பள்ளிக் காலத்தை மனமும் தேடும் !
மீண்டும் மீண்டும் அசை போட
பள்ளிக் கால நினைவுகள் வேண்டும் !


********************   *********************




இயற்கையைப் பாதுகோப்போம்!

சின்னச் சின்னக் குழந்தைகளே கேளுங்க!
இயற்கையோடு சேர்ந்து நீங்க வாழுங்க!
மண்ணின் வளம் காக்க வேணும் நாமதான்!
மகிழ்வோடு இருக்கும் நம்ம பூமிதான்!

பூமிச்சாமி தந்த வரம் மரங்கள்தான்!
பொக்கிசமாய்க் காக்க வேணும் மனிதர்தான்!
மண்ணில் இருக்கும் மரங்கள் நமக்குத் தாயடா!
மரங்களோடு வாழ்ந்திடவே ஓடிடும் நோயடா!

உறவுபோலப் பறவைக் கூட்டம் வருகுது!
பழம்உண்ட பின்னே பாடல்களைத் தருகுது!
எச்சத்தாலே மரங்களைத் தினம் பெருக்குது!
மனித இனம் மரங்களைத்தான் சுருக்குது!

வீடிருக்கும் மனிதர்களே விரைந்து வாருங்கள்!
வீதியெங்கும் மரம் நடவே வாருங்கள்!
பிறந்த நாளில் நட்டிடலாம் வாருங்கள்!
பிள்ளைபோல மரங்களைத்தான் பாருங்கள்!

******************  **********************


மரியாதை 

துள்ளித் திரியும் தம்பியே!
துடுக்குடன் எங்கே செல்கின்றாய்?
அன்னை உன்னை அழைக்கின்றார்
அவரிடம் சென்று வினவிவிட்டு
அதன்பின் நீயும் மகிழ்ந்தாடு!
அம்மா அப்பா பேச்சிற்கு 
அன்பாய் நீயும் பணிந்துவிடு
சொல்லும் வேலை கேட்டே நீ
சுறுசுறுப்பாய் உடன் செய்துவிடு!
அண்ணா அக்கா அனைவரிடம்
அன்பாய் நீயும் நடந்துவிடு!
வயதில் மூத்தோர் அனைவரையும் 
வணக்கம் சொல்லி மதித்துவிடு!
மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்
மதிப்பை நீயும் பெற்றுக்கொள்!

***********************   ******************


பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்புவோம்!

பள்ளி செல்லும் வயதிலே
பிள்ளைகளை மகிழ்வாய் அனுப்புவோம்!
துள்ளி மகிழ்ந்து செல்வதை
கண்டு நாமும் களிப்போம்!

சின்னஞ் சிறிய வயதிலே
சிறை வேண்டாமே வீட்டிலே!
வண்ணப் பென்சில் பிடித்துதான்
எழுதட்டும் தினமும் ஏட்டிலே!

களை எடுக்க அனுப்பவும்
கைக்குழந்தை சுமக்கவும் விடலாமோ?
கல்வி கல்லா அவர்களை
அறியாமை இருள் தொடலாமோ?

குழந்தை நன்கு பயின்றால்
எதிர்காலம் இன்பமாய் விளங்குமே!
இன்னும் இன்னும் முயன்றால்
வாழ்க்கை நெறிகள் விளங்குமே!

பள்ளி தினமும் செல்லட்டுமே!
படித்ததை வீட்டில் சொல்லட்டுமே!
பண்பாய் வளர்ந்து வெல்லட்டுமே!
பயனாய் உலகில் நில்லட்டுமே!

******************    **********************


கருணைப் பார்வை

அன்புத் தம்பி அருகில் வா!
அகன்ற உலகில் அன்பாய் வா!
பண்பு நலன்களைப் போற்றி வா!
பாசமாய் மகிழ்ந்து பேசி வா!

திசைகள் தோறும் சாதிச்சண்டை
தினமும் உடைகிறது மக்கள் மண்டை
கொஞ்ச நாள்கள் நிம்மதி பூத்தால்
நஞ்சை விதைக்கும் மதத்தின் போர்வை

மனித உயிர்கள் இன்று எங்கும்
மளிகைக் கடைப் பொருளாய் ஆனதோ?
மனிதம் என்பது மண்ணில் மாண்டு
மரணம் என்பது வேடிக்கையாய்ப் போனதோ?

வாழும் வரைக்கும் தியாக மண்ணில்
வளர வேண்டும் கருணைப் பார்வை
நாளும் பொழுதும் நன்மைகள் விளைந்திட
நடந்திட வேண்டும் சகோதர நோக்கில்!

எந்தன் தம்பி இனிய தம்பி
உந்தன் காலம் உயர்வாய் ஆகிட
சாதி மதத்தினை அடியோடு அழித்து
சமத்துவப் பூக்களின் வாசனை நுகர்வாய்!

******************   ***********************

 
பள்ளிக்கூடம் திறந்தாச்சு!

கொளுத்தும் கோடை விடுமுறை போயாச்சு!
கொஞ்சும் பள்ளிக் கூடம் திறந்தாச்சு!
விடுமுறை நாள்களில் விளையாடி மகிழ்ந்தாச்சு!
மேல்வகுப்பு சென்றிட விளையாட்டையும் மறந்தாச்சு!

படித்த வகுப்பினில் தேர்ச்சி பெற்றாச்சு!
பலருக்கும் இனிப்புகள் மகிழ்வாய் கொடுத்தாச்சு!
அடுத்த வகுப்பிற்கு ஆயத்தம் எடுத்தாச்சு!
அன்பாய் அனைவரிடமும் பழகிட நினைச்சாச்சு!

புத்தம்புதிய ஆடை உடுத்திச் சென்றிடுவேன்!
புதுப்புது நண்பர்களைக் கண்டிடுவேன்!
நித்தம் ஆசிரியர் சொல் கேட்டு
நினைவில் நிறுத்திச் செயல் படுவேன்!

திட்டம் போட்டுத் தினமும் படித்திடுவேன்!
நல்ல மாணவனாய் நானும் நடந்திடுவேன்!
பட்டம் பலவும் படிப்பினில் பெற்று
பாரினில் உயர்ந்து பாரினை உயர்த்திடுவேன்!

**********************     ********************


நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
விழிப்புடன் இருப்பதில் படுசுட்டி
வாலை வாலை ஆட்டிடும்
விசுவாசத்தைக் காட்டிடும்

வேற்று ஆள்கள் வந்தாலே
விரட்டி விரட்டிக் குரைத்திடும்
மாற்றுக் குறையா அன்பாலே
மனதில் இன்பம் நிறைத்திடும்

காலை மாலை வேளையென
நடக்கக் கூடவே வந்துவிடும்
வாழும் காலம் முழுமையும்
நன்றி உணர்வைத் தந்துவிடும்






 

Post a Comment

0 Comments