மு.மகேந்திர பாபு - ஹைக்கூ கவிதைகள் - புதியது

 



மூன்றாம் உலக ஹைக்கூ மாநாடு - மதுரை - சிறப்பிதழுக்கான கவிதைகள்


1 ) வெம்மையிலும் குளிர்ந்தது

சம்சாரியின் வயிறு

மண்பானைக் குடிநீர்.


2 ) காளியாய்த் தொங்கும் நாக்கு

யாருக்குச் சிவப்பு அதிகம் ?

மௌனமாய் ரசிக்கும் கள்ளி.


3 ) கிளையில் குயில்

தலையாட்டும் இலைகள்

தொடரும் பாட்டு.


4 ) மரணம் தழுவும் மரங்கள்

சுட்டெரிக்கும் வெயில்

கோரமாய்க் கோடை.


5 ) வாழ்ந்து கெட்ட வீடு

வாழ்க்கை தந்தது

வளரும் அரசமரம்.


6 ) ஐந்திலிருந்து ஆறு

பாவாடையிலிருந்து சுடிதார்

பூரிப்பில் கிராமத்துத் தாய்.


7 ) நெய் விற்கும் பெண்

வீதியில் கூவுகிறாள்

மணக்கவில்லை வாழ்க்கை.


8 ) வயல் நடுவில் வேப்பமரம்

சுகம் தந்தது காற்று

வியர்வையில் விவசாயி.


9 ) கொட்டப்படும் விசம்

உண்ணும் மாடுகள்

பாலித்தீன் இலைகள்.


10 ) கருப்பு வான்

வெள்ளை நிலா

தோசைக்கல் .


11 ) ஆனந்தச் சிறை

கலகலக்கும் காசுகள்

பாட்டியின் சுருக்குப்பை.


12 ) வயலில் அறுவடை

சிந்தும் நெல்மணிகள்

பறவைகளின் மகிழ்ச்சியில் விவசாயி.


13 ) அடைத்து வைத்த கோபம்

சுத்தம் செய்தே ஓடுகிறது

கால்வாயில் தண்ணீர்.


14 ) தலை சீவினான்

ஒற்றைக் கண் திறந்தது

கண்ணீருடன் இளநி.


15 ) வயலெங்கும் வெண்சிரிப்பு

வெடித்தும் வேதனையில்லை

மானம் காக்கும் பருத்தி.


16 ) தாத்தாவின் இடுப்பில்

முதலுதவிக் கருவி

முள்வாங்கி.


17 ) இற்றுப்போன உடல்

பயணத்தை நிறுத்தவில்லை

நகரப் பேருந்து.


18 ) நீர் நிறைந்த குளம்

விழுதுகளில் தொங்கும் குழந்தைகள்

துள்ளலில் ஆலமரம்.


19 )குளக்கரையில் கொக்கு

பலத்த யோசனை

மீன் பிடித்திருவிழா


20 )வெயிலுக்கு ஒதுங்கிய

மரவெட்டிகள்

ஒற்றை மரம்.


மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை - 20.

செல் - 97861 41410

Post a Comment

0 Comments