நீ
ஒவ்வொரு கோவிலாய்
சாமிதரிசனம் செய்தபோது ,
சாமிக்குத் தரிசனம் கிடைத்தது
உன்னைப் பார்த்தபோது.!

பூங்காவில்
பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற
வாசகம் கண்டு புலம்பின பூக்கள்.
நீ பறிக்காமல் சென்றபோது.!

மு.மகேந்திர பாபு

எப்போதும்
நீர்தேங்கியிருக்கும்
நெல்வயலைப் போல்தான்
என் இதயமும்.
உன் நினைவுகளைத்
தேக்கி வைத்திருப்பதால் !

மு.மகேந்திர பாபு ,

மழைக்குப் பின்னான
மாலைப் பொழுதினில்
வருகிறாய் நீ.
அதுவரை தன் வண்ணம் கண்டு
கர்வம் கொண்டிருந்த வானவில்
உன்னைக் கண்டு
மறைந்து போனது
கர்வம் தொலைத்து.

மு.மகேந்திர பாபு. -97861 41410,

பெண்ணே !

உன் விரல்களுக்கு மட்டும்
எப்படித் தெரிந்திருக்கிறது
கோடுகளை ஓவியமாக்கும் வித்தை ?

நீ வரைந்துவிட்டுப் போனபின்பு
மனந்திறந்து பேசத் தொடங்கியது
நீ வரைந்த ஓவியம்.

உன் தூரிகைக்குள்
அடைந்து கிடக்கிறார்கள்
அத்தனை அழகு தேவதைகளும் !

நினைவூட்டல்

இடையில் 
குடம் தூக்கி நடக்கும்போது
தளும்பும் நீரை
நினைவூட்டிச் செல்கிறது
சாலையில் செல்லும்
குடிநீர் லாரி.

மு.மகேந்திர பாபு

அலைபாயும் மனம்

மரங்களற்ற
தார்ச்சாலையின் வெம்மையாய்
தகிக்கிறது மனம்.
உனது
அழைப்புகளற்ற ,
குறுந்தகவல்களற்ற
அலைபேசியைப்
பார்க்கும் போதெல்லாம்.

மழை

பகல் இரவு
பார்க்காமல்தான்
வந்துகொண்டிருக்கிறது பெருமழை.
எனக்குள் வந்து செல்லும்
உன் ஞாபகங்களைப் போல.

மு.மகேந்திர பாபு ,

மு.மகேந்திர பாபு

இடையில்
குடம் தூக்கி நடக்கிறாய்.
உன் நடைக்கேற்ப
அலம்புகிறது தண்ணீர்க்குடமும் , என் மனமும் !

தண்ணீர் லாரியென
உன் நினைவுகளைச்
சிந்திச் செல்கிறேன் நான்.
பெட்ரோல் லாரியென
என் நினைவுகளைப்
பிடித்து வைத்திருக்கிறாய் நீ !


Post a Comment

0 Comments