மு.மகேந்திர பாபு - ஹைக்கூ கவிதைகள் - 3

 


கோடை விடுமுறைக்குப்பின்
திறந்தது பள்ளிக்கூடம்
மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.

உம்மனா மூஞ்சிகளாக இருந்த
வகுப்பறைகள் கலகலக்கத் தொடங்கின
மாணவர்கள் வரவினால் !

கவிதைப் பூங்கா - பாக்யா வார இதழுக்கு

பெருக்கெடுத்து ஓடும் வைகை
துள்ளிக் குதிக்கும் மீன்கள்
மகளின் ஓவியத்தில் .

சிறுவர் புத்தக தினம்
ஏக்கத்தில் புத்தகங்கள்
கணினி முன் சிறுவன்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
வாசிக்கும் பள்ளிச் சிறுமி
விவாகரத்தில் பெற்றோர்கள்.

ஓய்வெடுக்கிறது மின்விசிறி
எல்லார் வீடுகளிலும்.
மின்தடை.

பெரிதாய் இருக்கிறது
கோவிலில் சாமியை விட
உண்டியல்.

கடவுளை வணங்கச் செல்பவர்கள்
கடவுளாக மாறிவிடுகிறார்கள்
திருவோட்டில் காசிடும்போது !

ஆண்டு முழுவதும் எதிரே இருந்தும்
வாழ்க்கையில் முன்னேறவில்லை யாசகன்
கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்.

தொட்டுத் தொட்டு
சிரித்துச் சிரித்துப் பேசுகிறான்
ஆன்ட்ராய்டு போனில் மனிதன்
உறவுகளிடமிருந்து விலகி !

காட்டாற்று வெள்ளமென
கவலை கொண்டது
புற்றிலிருந்து வெளியே வந்த எறும்பு
முதல் மழைத்துளி பட்டவுடன் !

கவிச்சூரியன் மின்னிதழ் - 36

சிட்டுக்குருவிகள் எங்கும் பறக்கின்றன
சிட்டுக்குருவிகள் தினத்தில் மட்டும்
நாளிதழ்களிலும் , முகநூலிலும் !

ஒலிக்கிறது திரையிசைப்பாடல்
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு ?
இப்போது தட்டுப்பாடு மட்டுமே !

கை நிறையப் பணம்
ஏங்குகிறது மனம்
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக !

நீண்டு கிடக்கும் நதிகள்
மாண்டு கிடக்கின்றன
நீரின் ஓட்டமின்றி !

அணுகவும்
தண்ணீர் தேவைக்கு மனிதா !
இனி வேற்று கிரகங்களை.

மனிதனின்  சோகம் ்
தீர்த்த திரையரங்குகள்.
இப்போது சோகத்தில் !

மக்களை மாற்றிய திரையரங்குகள்
மாறிவருகின்றன
வணிக அங்காடிகளாய் !

துளிப்பாக்கள்.

@  செருப்பைக் கழட்டிவிட்டு
      உள்ளே நடந்தார் அப்பா.
      கோவிலானது வயல்.

@   பாகப்பிரிவினை இல்லை 
      தொடர்கிறது கூட்டுக்குடும்பம்
       மரங்களில் பறவைகள்.

@   நெருப்போடு புகைகிறது
      கையில் சிகரெட்டும்
       புகைப்பவர் வாழ்க்கையும் .

@    விளையாத காடு
       வராத பறவைகள்.
       வருத்தத்தில் சோளக்காட்டுப் பொம்மை.

@    குறை மாதம்தான் பிப்ரவரி
       நிறைமாதமாகியிருந்தது
       காதலர் தினத்தால் .

கோடை காலம்தான்
குளிர்காலமாக மாறியது
நீ ஊருக்குள் வந்து சென்ற பின்பு.

புல்தரையில் நடக்கிறாய்
தலை நிமிர்ந்து பார்க்கின்றன புற்கள்.
தன்னை வருடியது யாரென்று !

விதைக்குள் அடைபட்டிருக்கும்
மரத்தைப் போல்தான்
என் கவிதைக்குள் அடைபட்டிருக்கிறாய் நீ !

மரமும் மனமும்

@  ஒவ்வொரு பூக்களாகச் சென்று
      வகுப்பெடுக்கிறது வண்ணத்துப் பூச்சி
     தேனைக் கட்டணமாகப்பெற்று !

@   மகிழ்ச்சியில் மரம்
     புதிதாய்ப் பிறந்திருக்கின்றன
     கூட்டில் பறவைக் குஞ்சுகள்.

@   பயணம் பற்றிப் பேசி மகிழ்கின்றன
     மாலையில் கூடடைந்த பறவைகள்.
     சத்தமாகத் தங்கள் மொழியினில் !

@   வெட்டாதீர்கள் எங்களை !
     வருத்தத்தை வெளிப்படுத்தின மரங்கள்.
     இலைகளை உதிர்த்து !

@    புத்தனின் எதிர்ப்பை மீறி
      வெட்டப்பட்டுக் கிடந்தது
      போதி மரம்.

மு.மகேந்திர பாபு

துளிப்பாக்கள்

@  முயற்சியே முதல் வெற்றி
மண்முட்டி முளைத்து வருகிறது
வயலில் விதை.

@  கோவில் திருவிழா
கொண்டாட்டத்தில் மக்கள்.
வருத்தத்தில் ஆடுகள்.

@  வறண்டு போன நதியினைத்
தின்று கொண்டிருக்கிறது
மதிய வெயில்.

@  வீட்டைச் சுற்றிலும் மரங்கள்
அழகிய நீரோடை
மகிழ்கிறாள் மகள் ஓவியம் வரைந்தபின்பு.

@  தூங்கும் மாணவன்
தாளைப்புரட்டிப் படிக்கிறது
மின் விசிறி.

மக்கள்தொகை விளம்பரம்
சிறப்பாக நடித்ததற்குப் பாரட்டு.
சோகத்தில் விளம்பர முதிர்கன்னி.

முதுமொழிக்கு முக்கியத்துவமாம்
கல்லூரியில் காதல்.
பருவத்தே பயிர்செய்.

ஆசிரியரின் அதட்டல் இல்லை.
வரிசையில் செல்கின்றன
வானத்தில் பறவைகள்.

கரும்பலகையில் எழுதி எழுதி
சாக்பீஸ் கரைந்தது.
மாணவர்களிடத்தில் நிறைந்தது கல்வி.

இறக்கை இருந்தும்
இடத்தைவிட்டுப் பறக்க முடியவில்லை.
மின்விசிறி.

வெட்டப்பட்டன மரங்கள்
இறந்து போனது
பருவ மழை.

ஹைக்கூ கவிதைகள்.

1 ) பின்தொடரவில்லை யாரும்.
பாதை போட்டுச் சொல்கிறது
பயணத்தில் நத்தை.

2 ) பின்னணி இசையில்லை
முன்னணியில் இருக்கிறது
அம்மாவின் தாலாட்டு.

3 ) நிர்ணயிக்கப்பட்டது இலக்கு
எளிதில் கிடைத்தது வெற்றி.
டாஸ்மாக் வருமானம்.

4 ) விசா இல்லை.
     உலகைச் சுற்றுகின்றன
    வலசைப் பறவைகள்.

5 ) அந்தரத்தில் கருப்புத் தேனடை.
கல்லெறிந்தவர் யார் ?
கொட்டுகிறது அடைமழை.

6 ) சாலைப் பெண்ணின் தலையில்
உச்சி வகிடு.
வெள்ளைக் கோடு.

மு.மகேந்திர பாபு , மதுரை.
செல் - 97861 41410 


1 ) குருவியின் தாகம்
கலைந்தது தெளிந்த வானம்.
குளத்து நீர்.

2 ) மண்ணைத் தொட்டபின்பு
மழையில் நனைந்தது
முதல் மழை.

3 ) இறந்த பின்பும்
எழுந்து நிற்கின்றன
நாற்காலிகளாக மரங்கள்.

4 ) கோடை வெயில்
குளிக்கும் குருவிகள்.
நீச்சல் குளமானது வாளித்தண்ணீர்.

5 ) சித்திரைத் திருவிழா
கோடை வெயிலில் பக்தர்கள்.
குளிர்ச்சியில் இளநீர் வியாபாரி

6 ) சுமை தூக்கிச் செல்லும்
வண்ணத்துப் பூச்சிகள்.
பள்ளிக் குழந்தைகள்.

7 ) வீரர்களைப் பந்தாடிய காளை
அன்பிற்குக் கட்டுப்பட்டது
சின்னக் கயிறில்.

8 ) விடிந்தும் எரியும் தெருவிளக்கு
அணைக்கவில்லை யாரும்.
அணைத்தது மின்தடை.

9 ) மூச்சு வாங்கியபடி
சுற்றிக் கொண்டிருக்கிறது.
குழந்தையுடன் ஓலைக்காத்தாடி

10 ) வீதிக்கு வீதி மதுக்கடை.
மயங்கிக் கிடக்கும் குடிமகன்.
வளர்ச்சியில் நாடு.


1 ) நெல் வயலில் நிறைந்தன
     நிரந்தரக் களைகள்.
     அடுக்குமாடி வீடுகள்.

2 ) பார்த்து நாட்கள் பலவாகின.
     நலம் விசாரிக்கும் நண்பர்.
     பக்கத்து வீட்டுக்காரர்.

3 ) மகள் வரைந்த கோடுகள்
     உயிர்த்தெழத் தொடங்கின.
    கண்கவரும் ஓவியம்.

4 ) குனிந்து நிமிர்ந்து நடுகிறோம்.
நிமிரவே இல்லை
விவசாயிகளின் வாழ்க்கை.

5 ) கோடையில் வற்றிய
    குளத்து நீரென இருக்கிறது.
     மாதக் கடைசியில் பணப்பை.

6 ) ஆறறிவு மனிதன்
      ஐந்தறிவு ஒப்பீடு.
      சிங்கம் போன்ற நடை.

மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை - 20.
செல் - 97861 41410.

1 ) மழை பெய்தபின்
மகிழ்ந்து பார்த்து மறைந்தது
வானில் வானவில்.

2 ) புகை பிடிப்பது கேடுதரும்.
படத்திற்கு முன் பொதுநல விளம்பரம்.
படம் முழுவதும் புகை நாற்றம்.

3 ) இருக்கும் போது சிரிக்கவைக்கவில்லை.
இறந்த பின் சிரிக்கிறார்.
கண்ணீர் அஞ்சலியில் அப்பா.

4 ) இடி , மின்னல்
தகவல் தந்த பின்னரே
வந்தது பெருமழை.

5 ) திடமாய் நிற்கிறது 
நூறாண்டுப் பாலம்.
திகிலில் ஆறாண்டுப்பாலம்.

6 ) பெருமழையால் பள்ளிகள் மூடல்.
பள்ளி வாசல் திறப்பு.
மலர்ந்தது மதம் கடந்த நேயம்.

7 ) இரண்டு மணிநேர மழை.
எளிதில் நுழைந்தது
மாடியில் மழை நீர்.

8 ) முகம் சுழித்தது கடல்.
அசுத்தம் சுமந்து வந்தது
ஆறின் உடல்.

9 ) மரத்தில் மலர்ந்த நேயம்
பறக்க இயலா குயிலிற்கு
இரை ஊட்டியது மைனா.

10 ) வணங்கப் படவேண்டியவன்
வாசலில் நிற்கிறான் பாவமாக.
குறைதீர் கூட்டத்தில் விவசாயி.

1 ) பிறந்தது மார்கழி
     விதவிதமாய்ப் பூக்கிறது 
      வாசலில் கோலம்.

2 ) இயற்கை மழை
செயற்கைக் குளம்
குளித்து மகிழ்ந்தனர் சாலையில்.

3 ) வயலில் அம்மா
      ஊசலாடுகிறது மனம்.
     மரக்கிளைத் தொட்டிலில்      குழந்தை.

4 ) இரவின் நிசப்தம் குலைத்தது
சுற்றிச்சுற்றி வந்த
சுவர்க்கடிகாரத்தின் வினாடிமுள்.

5 ) முன்பு பாட்டிகள்
     இப்போது அனைவரும்
    புறணி.

மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை.
செல் - 97861 41410

1 ) மழைக்காக வேண்டியவன்
மழை வேண்டாம் என்கிறான்
வயலில் மிதக்கிறது நாற்று.

2 ) நெல் வயலில் பறவைகள்.
விரட்ட மனமில்லை
எத்தனை நாள்கள் காத்திருந்தனவோ ?

3 ) தூங்கிக் கொண்டிருந்தவனை
விழிக்கச் செய்தது
விழியற்ற நண்பனின் பாட்டு.

4 ) முதுமையில் தனிமை
சோகத்தைச் சுகமாக்கியது
புதிதாய்க் கூடுகட்டிய குருவி.

5 ) விளக்குகள் அணைந்தன
போர்வைக்குள் வெளிச்சம்
திறன்பேசியில் தேடல்.

6 ) மரம் எங்கும் பூக்கள்
தடுமாறுகிறது வண்ணத்துப்பூச்சி.
எந்த மலரில் தேனருந்த ?

7 ) மழை பொழிந்தபின்னும்
இலைகள் ஏந்திக்கொண்டன நன்றிக்கடனாய்த் துளிகளை !

8 ) சாதனைகள் தொடருது விண்ணில்
வேதனையில் சாகிறான்
விவசாயி மண்ணில் .

9 ) மீனைப்பிடித்த மீன்கொத்தி
தேடி அலைகிறது
அமர்ந்துண்ண கிளையை !

10 ) ஆளில்லா வீட்டில்
அலைந்து திரிந்த கொசு
ஆனந்தப்பட்டது எனது வருகையினால் .

சொட்டத் தொடங்குகிறது மழை.
வீட்டுக்குள் ஓடுகிறது குழந்தை.
அம்மாவின் அதட்டல்.


மகளின் கோட்டோவியங்களால்
புத்தம் புதிய வீடு
மாறியது பூந்தோட்டமாய் !

வருத்தத்தில் வலசைப் பறவைகள்.
வற்றிக்கிடக்கின்றன
நீர்நிலைகள்.

விடியல் சூரியனைக் கண்டதில்லை.
அதிகாலை ஆர்ப்பாட்டம்.
திரையரங்கில் புதியபடம்.

பள்ளி முடியும் நீண்டமணி.
மகிழ்வுடன் வருகிறான்
ஐஸ் விற்பவன்.

புத்தகத் திருவிழா
மகிழ்ச்சியில் புத்தகங்கள்
பக்கம் புரட்டுகிறது மழலை.

அன்று மலரும் நினைவுகளாய்
மலர்ந்தன புகைப்படங்கள்.
இன்றோ மரணமாய்.


மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை . 97861 41410


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
கருப்பாயூரணி , மதுரை - 20
பேசி - 97861 41410

Post a Comment

0 Comments