பனையேறியின் வாழ்க்கை

 


பனனயேறியின் வாழ்க்கை



பதனித் தண்ணி இனிக்கும் - பனையேறி

வாழ்க்க மட்டும் கசக்கும்

பத்துப் பனை ஏறணும் - பக்குவமா

பாளையத் தினமும் சீவணும்.


கலயம் போலதான் நாங்க - கைநழுவ

தகனம் செய்யணும் நீங்க

காய்ச்சுப் போன கைதான் - நெஞ்சில்

காணலாமே  சிராய்ப்புகளின் புண்தான்.


மாடிப்படி ஏறத்தான் முடியல -  உங்களால

மசமசனு நிக்கறிங்க படியில

காலுரெண்ட பிணைச்சிருக்கு தனநாரு - இடுப்புல

பளபளக்குது கேள்விக்குறியா அருவா பாரு.


குட்டப் பனை நெட்டப் பனை - நித்தம்

உடன் பிறப்பா அதுதானே துணை

பனங் காடெங்கும் மணக்கும் - கருப்பட்டி

வாசம் வந்து மூக்கத் துளைக்கும்.


கல்லுப் போல உடம்பிருக்கு - நாங்க

காட்டுக் குள்ள வாழ்வதால !

உங்க சொல்லுக்குள்ள உசிரிருக்கு - ராசா

நாட்டை நீங்க ஆள்வதால !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments