மழை இரவு


மழை இரவு

வேலித்தூரில்
அண்டும் ஆடுகள்.
ஆடுகளின் காலடிக்குள்
அடையும் கோழிகள்.
கூரை வீட்டுக்குள்
தாரை தாரையாய்
கண்ணீரெனச் சொட்டும்
தண்ணீர்த் துளிகள்.
அண்டாவோ
குண்டாவோ
வாய்திறந்து வாகாக
ஏந்திக் கொள்ளும் அழகு.

ஈரம் தோய்ந்த
விறகோடு தீப்பற்ற
மல்லுக்கட்டும் தாய்மார்கள்.
குளிருக்கு இதமாய் கொறிக்க
அரிசியோ , பாசிப்பயறோ
வறுக்கச் சொல்லும் வாண்டுகள்.

அம்மாவின் சேலையை
போர்வையாக்கும் அக்காக்கள்.
கைலிக்குள் மூட்டிப்படுக்கும்
தம்பிகள்.
ரோக்கர் பாட்டிலில்
மண்ணெண்ணெய் நிரப்பி
ஒளி பரப்பும் பாவாடை நாடாத் திரிகள்.

சாணம் மொழுகப்பட்ட
தரையில்
சமத்துவமாய் திரியும்
பூனைக்குட்டிகள் .
மழைத்துளிகளின் ஓசை
அதிகரிக்கையில்
அகல கைகளை விரித்து
ஓலையில் வடியும் நீரை
உள்ளங்கையில் ஏந்தும் உள்ளங்கள்.

என் கிராமத்தின்
மழை இரவு இப்படியாகத்தான்
நனைத்துச் செல்கிறது
மக்களையும் , மண்ணையும்.

மு.மகேந்திர பாபு.


Post a Comment

0 Comments