9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , உள்ளத்தின் சீர் - நெடுவினா / 9th TAMIL - EYAL 3 . NEDU VINA - QUESTION & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 3 , உள்ளத்தின் சீர்

நெடுவினா

1 ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

      பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது தமிழர் வரலாறு. இயற்கையைச் சார்ந்தும்,பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர். இதற்குச் சங்க இலக்கியங்களில் ஏராளமானசான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, ஏறு தழுவுதல் நிகழ்வாகும்.

          ஏறுதழுவுதல் என்பது, சீறிப்பாயும் முரட்டுக் காளையைத் தழுவி அடக்குதல் ஆகும். ஏறுகளின் கொம்புகளைக் கூர்மையாய்ச் சீவிப் பரந்தவெளியில் விடுவர். இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏறுகளைத் தழுவுவர்.

          முல்லைநில மக்களின் பண்பாட்டு அடையாளமாக ஏறுதழுவுதல் திகழ்கிறது. ஏறுதழுவுவதற்குமுன் தெய்வங்களை வழிபடுவர். திமில் பெருத்த காளைகள், நிலத்தின் நீரை வெளிக்கொண்டு வருவதுபோல் முட்டின. சில தம்முள் முரண்பட்டு ஒன்றையொன்று எதிர்த்துப் போரிட்டன.

            மிடுக்குடன் போர்க்களம் செல்லும் மருதநில வீரர்கள் போல், இந்தக் காளைகள் இருந்தன எனக்   கலித்தொகை கூறுகிறது. ஏறுகோள் குறித்துச் சிலப்பதிகாரமும், புறப்பொருள் வெண்பாமாலையும் குறிப்பிடுகின்றன.

          கண்ணுடையம்மன் பள்ளும், மாடு தழுவுதல் நிகழ்வைப் பதிவு செய்துள்ளது. ஏறு தழுவியோர் குறித்த நடுகற்கள், தமிழகமெங்கும் தொல்சான்றுகளாகக் காணப்படுகின்றன. தமிழரின் வீரத்தையும் நாகரிகத்தையும் உணர்த்தும் வீர விளையாட்டாகவும், அறச்செயலாகவும் ஏறுதழுவுதல் போற்றப்படுகிறது. இன்றும் ஏறுதழுவுதல், தமிழர்களின் அடையாளமாக நிறுவப் பட்டிருக்கிறது.

******************   *********   *************


2 ) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க, நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

         தமிழர், பண்டைக் காலத்திலேயே நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்திருந்தனர். மொழிக்கு இலக்கணம்
வகுத்த தமிழர், மனித வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்துள்ளனர். தமிழர்தம் வாழ்வை அகவாழ்வு,
புறவாழ்வு என இரண்டாகப் பிரித்து இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை, அவர்தம் பண்பாட்டின் சிறப்பாகும்.

      நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பேணிக்காப்பது, நமது கடமையாகும். தமிழர், காதலைக் களவு, கற்பு என இரண்டாகக் கொண்டனர். இக்காதல் வாழ்க்கை, அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பட்டதாக அமையவேண்டும் என்பர். வீரத்தைப் புறத்திணை என்பர்.

                புறத்திணை நிகழ்வுகளும் அறவழியில் நடைபெறவேண்டும் என்பர்.
வேளாண் பொருள்களை விளைவித்து வாழ்தலும், அதன் பயனாக ஈகை, கொடை நிகழ்தலும் வேண்டும்
என்பர். ஏறுதழுவுதல் வீரத்தின் அடையாளம் என்பர். வேளாண் தொழிலில் துணைநின்ற மாடுகளுக்கு
நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல்விழா எடுத்து மகிழ்வர். காதல், வீரம், கொடை, ஒருமைப்பாடு
முதலிய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.





Post a Comment

0 Comments