9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , உள்ளத்தின் சீர் - குறுவினா & விடை / 9th TAMIL - EYAL 3 , KURUVINA - QUESTION & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 3 , உள்ளத்தின் சீர்

மதிப்பீடு - குறுவினா 

1 ) நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

        மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, ஏறுவிடுதல், சல்லிக்கட்டு என்றெல்லாம் ஏறுதழுவுதல் எங்கள் பகுதியில் அழைக்கப்படுகிறது.


2 ) தொல்லியல் ஆதாரங்கள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்யவேண்டும். - ஏன்?

* அகழாய்வுகளின்மூலம் கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

* நிகழ்காலத்தைச் செம்மையாக ஆக்கிக்கொள்ளலாம்,

* எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.

* ஆதலால், தொல்லியல் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்யவேண்டும்.


3 ) ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

* ஏறுதழுவுதல் நிகழ்வினைக் கலித்தொகை, ‘காளைகளின் பாய்ச்சல்' எனக் குறிப்பிடுகிறது.

* சிலப்பதிகாரமும் புறப்பொருள் வெண்பாமாலையும், ‘ஏறுகோள்' எனப் பேசுகின்றன.

* பிற்காலச் சிற்றிலக்கியமான பள்ளு, 'எருதுகட்டி நிகழ்வு' எனப் பாடுகிறது.


4 ) பழமணல் மாற்றுமின் ; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.


இடம் : மணிமேகலையின் முதல் காதையாகிய விழாவறை காதையில், புகார் நகரை விழா நிகழ்வுக்காக அழகுபடுத்துமாறு முரசு அறைந்தவன் கூறியது.

பொருள் : பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்.

விளக்கம் : புகார் நகரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் வபரப்புங்கள் என்று, அரசு ஆணையைத் தெரிவித்தான்.


5 ) பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? வெவ்வேறா? விளக்குக.

பட்டிமண்டபம் : 

    சமயவாதிகள் ஒன்றுகூடி, அவரவர் சார்ந்த சமயத்தின் உயர்கருத்துகளைக் கூறி, வாதிட்டு விவாதம் செய்யும் வித்யா மண்டபம்.

பட்டிமன்றம் :

 பேசுவோரை அணிபிரித்து, கொடுக்கப்பட்ட தலைப்புச் சார்ந்த கருத்துகளை ஒட்டியும் வெட்டியும் பேசுதலாகிய விவாத மன்றம்.


6 ) ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

சேலம் மாவட்டம் கருவந்துறை, நீலகிரி மாவட்டம் கரிக்கையூர், மதுரை மாவட்டம் கல்லூத்து மேட்டுப் பட்டி, தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகிலுள்ள சித்திரக்கல் புடவு, சிந்துசமவெளி   அகழாய்வுக் கல்முத்திரை ஆகியன, ஏறுதழுவுதல் குறித்த தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்கள்.


*******************     ***********   **********

Post a Comment

1 Comments