எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சி - செயல்பாடு - 3 , எதிர்ச்சொல் அறிதல் - வினா & விடை / 8th TAMIL - AVTIVITY 3 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 3

3 . எதிர்ச்சொல் அறிதல்

வினாக்களும் விடைகளும் 

****************   ************   ************

திறன்/கற்றல் விளைவு

சொற்களஞ்சியம் பெருக்குதல்.

7.10. பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.

கற்பித்தல் செயல்பாடு

       மொழியில் உள்ள முரண் சொற்களை அறியச் செய்வதன் மூலம் மொழியின் வளம் மற்றும் நயங்களைப் பயன்படுத்துவது சொற்களஞ்சியம் பெருக உறுதுணையாக அமையும்.

அறிமுகம்

மாணவர்களே! எதிர்ச்சொல் என்றால் என்னவென்று தெரியுமா?

     ஒரு சொல் தொடர்பான, எதிர் அல்லது எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும்   பொருளை வெளிப்படுத்தும் சொல்லே எதிர்ச்சொல்லாகும். சுருக்கமாகக் கூறினால், ஒரு சொல்லின் பொருளுக்கு நேர் எதிரான பொருளைக் கொண்ட சொல் எதிர்ச்சொல் எனப்படும்.

(எ.கா.) 'பெரிய' என்பதன் எதிர்ச்சொல் 'சிறிய' என்பதாகும்.

நன்மை X தீமை

மேடு X பள்ளம்

மேல் X கீழ்

பகல் X இரவு

மேதை X பேதை

பிறப்பு X இறப்பு

இவ்வாறு கொடுக்கப்பட்ட சொற்களுக்கு முரணான (எதிரான) சொற்களை   எதிர்ச்சொற்கள் என்கிறோம்.

      இங்கு ஒரு பாடலைப் படிக்கலாம். பாடலில் இருந்து சொல்லையும் அதற்கான எதிர்ச்சொல்லையும் கண்டுபிடிப்போம் வாருங்கள்.

கோழையாய் இருக்காதே! வீரனாய் இருந்திடு!

நட்பைப் பெருக்கிப் பகையைக் குறைத்திடு!

இருளை விலக்கி ஒளியை ஏற்றிடு!

இன்பம் வந்திட துன்பம் சென்றிடும்!"

                          - கவிஞர் நளினா கணேசன்.

         பாடலில் உள்ள சொற்களை முதலில் தேர்ந்தெடுத்து எழுதுவோம்.

     கோழை, இருக்காதே, வீரன், இருந்திடு, நட்பு, பெருக்கு, பகை, குறை, இருள்,
விலக்கி, ஒளி, ஏற்றி, வெற்றி, இன்பம், வந்திட, துன்பம், சென்றிடும் -

             இப்பொழுது இதில் எந்தச்சொல் எந்தச்சொல்லிற்கு எதிரானது என்பதைக்
கண்டறிந்து எழுதுவோமா?

          அச்சொல்லினை எழுதும்பொழுது சொல்லிற்கு எதிர்ச்சொல் எனத்
தெரிவிக்கும்விதமாகப் பெருக்கல் குறி (X) இடவேண்டும் என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

கோழை  x  வீரன்

இருக்காதே X இருந்திடு

நட்புx பகை

பெருக்கு X குறை

இருள் X ஒளி 

 இன்பம் X துன்பம்

வந்திடும் X சென்றிடும்

                எதிர்ச்சொல்லினை எவ்வாறு கண்டறிந்து எழுதுவது என்பதை அறிந்து
கொண்டீர்களா?

பின்வரும் மதிப்பீட்டு வினாக்களுக்குச் சரியான விடைகளை அளிக்க முயற்சி
செய்யுங்களேன்.

*****************   **************   ***********

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

     கீழ்க்காணும்பத்தியைப் படித்து அதில் உள்ள சொற்களுக்கான எதிர்ச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

   
       மூத்த தமிழ்மொழி இளமையானது;
எளிமையானது; இனிமையானது;
வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்
கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது; தொன்மையான தமிழ்மொழியின் சிறப்பை அறியலாம், வாருங்கள்.

மூத்த X இளமை 

இளமை  X மூத்த 

எளிமை X ஆடம்பரம்

இனிமை X கசப்பு 

வளமை X வறுமை 

தன்னை X பிறரை 

பிறரை  X தன்னை

கொள்வது X கொடுப்பது 

நினைக்கும் X மறக்கும்

இனிப்பது X கசப்பது 

வாழ்வு X தாழ்வு 

தொன்மை X புதுமை 

சிறப்பு X இழிவு 

வாருங்கள் X தாருங்கள் 


மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

      கீழ்க்காணும் பாடலைப் படித்து அதில் அமைந்துள்ள நேரெதிர் சொற்களைக்
கண்டறிந்து எழுதுக .

நற்சொல் நவிலாது தீச்சொல் நவின்றால்
இனியன நடவாது இன்னாதன நடந்திடும்
நல்லன நேராது அல்லாதன நேர்ந்திடும்
பகையது பெருகி நட்பது குறையும்!

                           கவிஞர் நளினா கணேசன்.

நற்சொல் X தீச்சொல்

இனியன X இன்னாதன

நல்லன X அல்லாதன

நேராது X நேர்ந்திடும்

பகை X நட்பு 

பெருகி X குறையும் 

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

கட்டத்தில் கலைந்துள்ள நேர் எதிர்ச் சொற்களில் எது எதற்கு எதிரானது எனத்
தேர்ந்தெடுத்து எழுதுக.

நீதி   X அநீதி

ஆக்கம்  X அழிவு

ஆதி  X  அந்தம்

செயற்கை X  இயற்கை

சிற்றூர்  X பேரூர்

அகம் X புறம்

***************   *************   ***********


விடைத்தயாரிப்பு :

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

***************   ***************   ************

Post a Comment

0 Comments