ஹிரோஷிமா நினைவு தினம் - ஆகஸ்ட் - 6
ஆக்கத்திற்கு பயன்படுத்திய அறிவியலை மனித குல நாசத்திற்குப் பயன்படுத்திய கொடுமை நிறைந்த நாள் வரலாற்றில் இன்று . படைக்கும் ஆற்றலும், அழிக்கும் ஆற்றலும் ஒன்றிணைந்து உலகத்தை உலுக்கி கொலைக்களமான நாள். ஆகஸ்ட்- 6 - 1945 ஆம் ஆண்டு கொடுமையின் உச்சக்கட்ட தினம். இந்த நிகழ்வு உலக வரலாற்றின் பாதையை திசைமாற்றிய தினம் என்பது துரதிர்ஷ்டம்.
இரண்டாம் உலகப் போர் முடிவுறும் தருணத்தில் இரக்கமற்ற வர்களால் ஈடேற்றப்பட்ட செயல் . ஜப்பான்மீது அணுகுண்டு வீசப்பட்டது. போர் மேகங்கள் அற்ற வெற்றிட வானில் ஒரு விமானமும் , இரண்டு பாராசூட்டும் இணைந்து ஏதோ விந்தை செய்வது போல பிரகாசத்துடன் ஒரு பெரிய வெடியை நிகழ்த்தியது. உலகைப் பிளக்கும் மரண ஓலம் , செவிப்பறை அறுக்கும் சத்தமும், கண்களைப் பறிக்கும் வெளிச்சமும் கதிரியக்க காயங்களும் ஏராளம், ஏராளம். இவற்றின் நிலையை யாரும் யோசிக்க வில்லை, இனி வேண்டவே வேண்டாமென யாசிக்கிறோம் .
கொடூர வரலாற்றின் குருதி சிந்திய சாட்சி.
*****************
ஒரு ஜப்பானிய குடிமகனின் ரத்த வரலாறு எழுதப்பட்ட தின நாயகன்" சுடோ யமகுச்சி" என்பவர் ஆவார். 1939 ஆம் ஆண்டில் இவரின் வயது 39. இவர் வேலை பார்த்த நாகசாகி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார் . எனவே மூன்று மாத காலம் அலுவல் நிமித்தமாக ஹிரோஷிமாவில் தங்கியிருந்தார். ஆகஸ்ட்-6- நாள் அன்று காலை ஹிரோஷிமாவை விட்டுப் புறப்படுவதாகத் திட்டம். அவ்வேளை தனது சகாக்களுடன் இரயில் நிலையம் சென்றார்.அப்போது தனது அடையாள அட்டையை மறந்து வந்ததால் அவற்றை எடுப்பதற்காகத் திரும்பியபோது அவர் பார்த்த அதிர்ச்சியும், ஆச்சரியமும் அரண்டோடச் செய்தது. வானில் தோன்றிய ஒளியும்,ஒலியும் காண்பவர்களுக்கு கலக்கம் அடையச் செய்யும் மாறுதல்கள் நடந்தேறின. இதுவரை அறிந்திராத பிரகாசத்துடன் பெரும் சப்தமும்,பேரொளியும் மரணபீதியை ஏற்ப்படுத்தியது. யமகுச்சி தூக்கி வீசப் பட்டார். எங்கெங்கும் மரண ஓலம் விண்ணை , கண்ணீர் சிந்த வைத்தது அமில மழையாக.
குண்டு வெடித்த இடத்தில் இருந்து 3 -மைல் தூரத்தில் யமகுச்சி இருந்ததால் உயிர் தப்பினார். இதில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் மரணித்தனர். எனவே நீண்ட நாட்களாக " நாகசாகியின் " வாழும் நினைவாக யமகுச்சி பாதுகாக்க ப் பட்டார். இவர் இரட்டை குண்டு வெடிப்பில் தப்பித்த ஒரு கொடூர வரலாற்றுக்கு வாழும் சாட்சியாக எஞ்சிய நாட்களை கழித்தார். அணுஆயுதங்களின் பேராபத்தை எண்ணி கலங்கிய மனதுடன் கனலாக பேசிக்கொண்டே யிருந்தார்.
அணுகுண்டு தொடக்கத் திட்டம்.
**********************
1939-ஆம் ஆண்டு முதல் உலகப் போர் தொடங்கியும், தொடங்காமலும் இருந்த காலக்கட்டம் ஜெர்மனியின் செயல் பாடுகள் உலகத்தை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டுச் சென்றன. அமைதியிழந்த உலகம் ஆழிப்பேரலையாய் அல்லலுற்ற காலம் அது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் ஒரு அணுவுக்குள் இருக்கும் பேராற்றலின் வலிமை என்ன என்பதை விளக்கியது ஐன்ஸ்டீன் கோட்பாடு. மேலும் இயற்பியலார் லியோ ஸில்லார்ட், அணுக்கரு தொடர் நிகழ்வை 1933 -ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.1930 - களின் இறுதியில் ஜெர்மனியின் அணுஆயுதத் தயாரிப்பு உலகை அச்சுறுதியது.
இந்த கொடூரச் செயலால் ஜெர்மனியை முந்துவது அவசியமென அமெரிக்கா ஆலோசித்ததன் படி " ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்" உடன் லியோ ஸில்லாரும் இணைந்து, அமெரிக்கா அதிபர் ஃப்ராங்க்கின் டி ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினர்.இதுவே அணுகுண்டுத் திட்டத்தின் தொடக்கம் ஆகும்.
மன்ஹாட்டன் திட்டம்.
*****************
அமெரிக்காவின் " மன்ஹாட்டன்" மாவட்டத்தில் 1942 - ல் அணுகுண்டு தயாரிக்கும் பணி கள் தொடங்கின. இத்திட்டம் மன்ஹாட்டன் திட்டம் என பெயர்ப் பெற்றன.
1945-ல் அமெரிக்க முதல் அணுகுண்டை வெற்றிகரமாக தயாரித்தது முடித்தது. அந்தக் குண்டின் தரப் பரிசோதனை 1945 -ஜுலை 16ல் நியூ மெக்ஸிகோவில் உள்ள பாலை வனத்தில் நடந்தேறின.
இறுதி எச்சரிக்கை
***********************
அணுகுண்டு பரிசோதனை முடித்த அடுத்த நாள் ரஷ்யாவின் ஸ்டாலின், அமெரிக்க அதிபர் ட்ரூமேன், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகிய மூவரின் சந்திப்பு ஜப்பானை சரணடைய எச்சரிக்க முடிவுசெய்தது. ஜப்பானோ அமெரிக்காவை வேறுகோணத்தில் சந்திக்க( பேச்சு வார்த்தை நடத்த) எண்ணியது. நெருக்கடியான சூழலில் ஜப்பான் தோல்வியின் விளிம்பைத் தொட்டது. ஏற்கனவே 60- க்கும் மேற்பட்ட ஜப்பானிய இடங்களில் சாதாரண வெடிகுண்டு வீசி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்தது. இந்த நிலையிலேயே அமெரிக்கா ஜப்பான் மீது குண்டு வீச முடிவு செய்தது.
அரங்கேறிய அநாகரீகம்
******************
வெய்யோன் புறப்பட்டு இளவெயில் படரும் தருணம் பசிபிக் மா கடலின் "டினியன்" தீவிலிருந்து ஆகஸ்ட் - 6 -ம் நாள் காலைவேளையில் B - 29 " சூப்பர் ஃபோர்ட் ரெஸ் " எனும்விமானம் இராட்சதனாக மாறிய வந்த " குட்டிப் பையனை " ( Little Boy )( அணுகுண்டின் பெயர்) எடுத்துக்கொண்டு கிளம்பியது. அதன் உள்ளே 64- கிலோ மட்டுமே செறிவூட்டப்பட்ட " யுரேனியம் - 235 இருந்தது. இது இளங்காலை வேளையில் - 8. 15 -மணிக்கு ஹிரோஷிமா நோக்கி கீழிறங்கி சுமார் 45- நொடிகள் பயணித்து தரையிலிருந்து 1950 அடிகள் இருக்கும் போது வெடிக்கச் செய்தது.குண்டை வீசிய விமானம் வெகு வேகமாக அவ்விடம் விட்டு 11 - மைல் தொலைவு நகர்ந்த போதும் வெடிப்பின் கோர அதிர்வை உணர்ந்தது.
ஹிரோஷிமா கண்ட அலங்கோலம்.
************************
இச்சம்பவத்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப் பட்டன. 15 சதுர கிலோ மீட்டர் தூரப்பரப்பில் இந்நகரம் அழிக்கப்பட்டது. இந்தக் குண்டின் வெடிசக்தி இரண்டுகோடி கிலோ TNT - வெடிப் பொருளுக்கு இணையானது.
உயிர் துறக்கும் மரண ஓலமும்,குடும்ப நபர்களைத் தேடும் ஓலமும் சேர்ந்து விண்ணை அதிரச் செய்தது. ஹிரோஷிமா நகரில் கை,கால்,தலையற்ற குழந்தைகளை ஏந்தி வருந்திய அன்னையின் துயரம் அளவிட முடியாத கொடுமை.
நாகசாகி
***********
ஹிரோஷிமாவில் வீசிய குண்டின் கொடூரம் குறையும் முன்னே மற்றொரு படுகொலை ஆரம்பம் .குண்டு வீசப்பட்ட மூன்றாம் நாள் " கொக்குரா " நகரின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்த திட்டம் ஆனால் அங்கு மேகமூட்டம் சூழப்பட்ட தால் நாகசாகி மீது வீசப்பட்டது. இந்த அணு குண்டின் பெயர் " குண்டு மனிதர்" ( Fat Man ) .இதன் எடை 4• 670-KG இதன் உள்ளே 64 kG" புளுட்டோனியம் " இருந்தது. குட்டிப் பையனைவிட இதன் திறன் மிகுந்தது.இரு நகரங்களும் பெரும் அழிவைச் சந்தித்தது அழிவின் உச்சம்.கதறும் மக்களை அல்லாமல் காயம்பட்ட வர்களைக் காக்கும் மருத்துவர்களும்,செவிலிய ர்களும் கூட மிஞ்ச வில்லை. இதில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் இறந்தவர்கள் என்பது கள ஆய்வு,அடுத்த சில வார,மாதங்களில் ஒரு இலட்சம் பேர் உயிர் இழந்தனர். மேலும் கதிர் வீச்சின் தாக்கத்தால் பல வகையான புற்று நோய்கள், உடல்நல குறைப்பாடுகளுடன் பிறந்த குழந்தைகள் கோரத்தாண்டவத்தின் காணும் சாட்சியாக வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர்.
அணுஆயுத போட்டியில் வெற்றியைக் கொண்டாடும் நிலையைக் கண்ட உலகம் ஜப்பானிய மக்களின் மன உணர்வுகளில் அன்றோ ஒன்றியுள்ளோம். அணுஆயுத த்தை உருவாக்கிய அறிவியலாளர் களே அழியும் நாளுக்கும் வழிகாணுகின்றனர். அதாவது "அழிவு கடிகாரம் " என்ற கோட்பாட்டை உருவாக்கியுள்ளார் கள் .
இக்கடிகாரத்தில் நள்ளிரவு 12 - மணிக்கு இன்னும் 2- நிமிடங்களே உள்ளன என எச்சரித்து உள்ளனர். இந்த இரண்டு நிமிட வாழ்க்கையில் எத்தனை,எத்தனை போட்டிகள்,கலவரங்கள்.நள்ளிரவு 12 - மணியை நோக்கிய முதல் நகர்வாக ஹிரோஷிமா தொடங்கின. அடுத்தடுத்து உலகில் நடந்தேறும் போர்கள்,அணுஆயுதப் போட்டிகள்,இயற்கைப் பேரழிவுகள் ,கொரோனா பெருக்கம் போன்றவை நள்ளிரவு கடிகார முட்களை விரைவாக நகர்த்துகிறதோ என்ற பேரச்சப் பிரம்மை ஏற்படுகின்றன.
மனித இனத்தின் மேன்மை உணர்ந்து இது போன்ற அழிவுச் செயல்களில் ஈடுபடாமல், போட்டிகளற்ற உலகை உருவாக்கி,
அன்பை அணியாக்கி..
வேற்றுமையை வேரறுத்து...
வம்பெனும் வழக்கொழித்து..
ஒற்றுமையே உருகொண்டு..
ஒப்பற்ற உலகமதை
ஒளி கொண்டு சுழலச் செய்வோம்..!!
0 Comments