11 ஆம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு 2 - இயல் 2 - வினாக்களும் விடைகளும் - முன்னுரிமைப் பாடத்திட்டம் - 2021 - 22 / 11th TAMIL - EYAL 2 - ASSIGNMENT 2 - REDUCED SYLLABUS - QUESTION & ANSWER

 

 

            மேல்நிலை முதலாமாண்டு -

                        பொதுத்தமிழ்

            ஒப்படைப்பு - 2 - இயல் - 2

    வினாத்தாள்  & விடைகள் 

     குறைக்கப்பட்ட பகுதி - 2021 - 22


( ஏதிலிக் குருவிகள் , காவியம், திருமலை முருகன் பள்ளு , யானைடாக்டர் ,  புணர்ச்சி விதிகள் )

                               பகுதி -அ

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

"வான் பொய்த்தது" - என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப் பொருள்

அ) வானம் இடித்தது. 

ஆ) மழை பெய்யவில்லை

இ ) மின்னல் வெட்டியது

ஈ.) வானம் என்பது பொய்யானது.

விடை : ஆ ) மழை பெய்யவில்லை 

2. 2003 - ஆம் ஆண்டில் தமிழகஅரசின் விருது பெற்ற அழகிய பெரியவனின் புதினம்

அ) தகப்பன்கொடி        ஆ) அதிசயப் பூ

 இ ) தொப்புள்கொடி   ஈ) மணிக்கொடி

விடை : அ ) தகப்பன்கொடி

3. பிரமிளின் கட்டுரைத் தொகுப்பு ------

அ) நக்ஷத்திர வாசி ஆ ) லங்காபுரி ராஜா 

இ ) வெயிலும் நிழலும்         எ) காற்று

விடை : அ ) நக்ஷத்திர வாசி

4. ' பிரிந்த ' என்பது  -------

அ ) பெயரெச்சம்      ஆ)வினையெச்சம்

இ ) பண்புத்தொகை    ஈ.) வினைத்தொகை

விடை : அ ) பெயரெச்சம்

5 . ' பள்ளு '  -------  வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று

அ)  100             ஆ ) 16

இ ) 96               ஈ ) 86 

விடை : இ ) 96

6. தொல்காப்பியம் குறிப்பிடும் ------  எனும் இலக்கிய வகையைச் சார்ந்தது  பள்ளு . 

அ) புலன்                ஆ ) கலம்பகம் 

இ ) அந்தாதி         ஈ) குறவஞ்சி

விடை : அ ) புலன் 

7 ) " யானை டாக்டர்" என்றழைக்கப்படுபவர்

அ ) வேணு மோகன்  

ஆ ) வி. கிருஷ்ணமூர்த்தி 

இ ) நாராயண மூர்த்தி

ஈ.) ஜெய மோகன்

விடை : ஆ ) வி.கிருஷ்ணமூர்த்தி

8 ) கயம் , வேழம் மாதங்கம் , கைம்மா என்ற  வேறு பெயர்களில் நிகண்டுகளில் குறிப்பிடப் படுவது

அ ) பறவை    ஆ) யானை 

இ )  டாக்டா் ஈ  )  குதிரை.

விடை : ஆ ) யானை

9 ) பதினெட்டு மெய்களுள் ------ மெய்கள் மட்டுமே உடம்படுமெய்களாகும்.

அ ) ழ் , ள்      ஆ ) ய் , வ் 

இ ) ஈ , இ       ஈ ) ர் , வ் 

விடை : ஆ ) ய் , வ்

10 ) பண்புப் பெயர் புணர்ச்சியில் இடம்பெறும் மொத்த விதிகள் -----

அ ) 8    ஆ ) 6   இ ) 3    ஈ ) 10

விடை : அ ) 8


                               பகுதி - ஆ

II ) குறுவினா

1 ) ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது ?

     * மரங்கள் வெட்டப்பட்டதால் காடுகள் அழிந்து போயின.

     * மழை பெய்யவில்லை.

     * மண் வளம் குன்றியது.

     * இயற்கைச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு  , வாழ்வதற்கான சூழல் இல்லாததால் குருவிகள் எங்கெங்கோ தம் இருப்பிடம் தேடி அலைந்தன.

2 ) காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது ? 

                காற்றின் தீராத பக்கங்களில் சிறகிலிருந்து பிரிந்த இறகு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது.

3 ) வளருங் காவில் முகிற்தொகை ஏறும் - பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் வண்ணமிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன ?

* தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். 

* அந்த அளவிற்குத் தென்கரை நாட்டின் சோலை வளமுடன் செழித்து , வானளாவ நீண்டு வளர்ந்து காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

4 ) பள்ளு - குறிப்பு வரைக.
   
     * 96 வகைச்சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
    
     * இது ' உழத்திப்பாட்டு ' எனவும் அழைக்கப்படும்.

     * தொல்காப்பியம் குறிப்பிடும் ' புலன் ' என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.

5 ) புணர்ச்சி விதி தருக - செங்கயல்

       செங்கயல் - செம்மை + கயல்

 * ' ஈறுபோதல் ' விதிப்படி ' மை ' கெட்டு          செம் + கயல் என்றானது.

* ' முன்னின்ற மெய் திரிதல் ' எனும் விதிப்படி ' ம் ' - ' ங் ' ஆனது. செங்கயல் என்று புணர்ந்தது.


                          பகுதி - இ

III ) சிறுவினா

1 ) காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது ?

* தூக்கணாங்குருவிக்கூடு 

* தூக்கணாங் குருவிக்கூடுகள் காண்பதற்குக் காற்றில் ஆடும் புல்வீடுகள்  போன்று இருப்பதாக ஒப்பீடு கூறியுள்ளார் ஆசிரியர் அழகிய பெரியவன்.

* காற்றில் ஆடும் புல்லைக் கொண்டு கரங்கள் இல்லாமல் தன் அலகால் புல் வீடு கட்டும் தூக்கணாங் குருவியின் அழகைக் கண்டால் மெய்சிலிர்க்கும். அந்தக் கூடுதான் தூக்கணாங் குருவியின் வீடு.

* அதனால்தான் கவிஞர் தூக்கணாங் குருவி கூட்டை காற்றில் ஆடும் வீடுகள் என்றார்.

2 ) சலசல வாவியில் செங்கயல் பாயும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

இடம் : பெரியவன் கவிராயர் இயற்றிய ' திருமலை முருகன் பள்ளு ' என்ற சிற்றிலக்கிய நூலில் வடகரை நாட்டின் வளத்தைக் குறிக்க , 

'சலசல வாவியில் செங்கயல் பாயும் '  என்று பாடியுள்ளார்.

பொருள் :  வடகரை நாட்டிலுள்ள தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப்பாய்ந்து விளையாடும்.

விளக்கம் :  வடகரை நாட்டிலுள்ள தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள் ' பெய் ' என்றால் மழை பெய்யும் . முனிவர்கள் கூறும் வார்த்தை ' மெய் ' ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலையில் புலவர்கள் போற்றுகின்ற திருமலைச்சேவகன் வீற்றிருக்கின்றார் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


3 ) தென்கரை நாட்டின் வளம் குறித்து பெரியவன் கவிராயர் குறிப்பிடுவன யாவை ?

* தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும் . 

*  நாட்டிலுள்ள பொன்னாலான மாட மாளிகைகளில் அகில்புகையின் நறுமணம் பரவிக்கொண்டே இருக்கும்.

*  இம்மாளிகைகளை " மஞ்ஞையும் கொண்டலும் " காக்கும்.

*  செங்கோலைக் கொண்ட மன்னர் நீதி தவறாது காப்பர்.

* இளைய பெண்கள் பொன்னாலான அரங்கில் நடித்து , விளையாடி மகிழ்ந்திருப்பர்.

*  குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகள் கரைகளில் மோதும் பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும்.

* இத்தகைய சிறப்பு கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் வீற்றிருக்கின்றார்.


4 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக.

     i )  ஈன்ற   ii )  அலர்ந்து 

  i ) ஈன்ற  -  ஈன் + ற் + அ

ஈன் - பகுதி 

ற்  - இறந்த கால இடைநிலை

அ - பெயரெச்ச விகுதி.

ii ) அலர்ந்து - அலர் + த் ( ந்  ) + த் + உ 

  அலர்  -  பகுதி 

  த்   -  சந்தி - த் - ந் ஆனது விகாரம் 

  த்    - இறந்த கால இடைநிலை

  உ  - வினையெச்ச விகுதி.


5 ) குற்றியலுகரப் புணர்ச்சி , முற்றியலுகரப் புணர்ச்சிகளைச்  சான்றுடன் விவரி.

i ) குற்றியலுகரப் புணர்ச்சி :

       குற்றியலுகரச் சொற்களில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும் போது ,  தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.

       பின்னர் , நிலைமொழி இறுதியிலுள்ள மெய் , வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.

எ.கா -  மாசற்றார் = மாசு + அற்றார்

ii ) முற்றியலுகரப் புணர்ச்சி : 

                 நிலைமொழியின் இறுதியிலுள்ள முற்றியலுகரம் , தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.

            பின்னர் நிலைமொழி இறுதியிலுள்ள மெய் , வருமொழி முதல் எழுத்தாகிய உயிருடன் புணரும்.

எ.கா - வரவறிந்தான் = வரவு + அறிந்தான் 


                               பகுதி - ஈ 

IV ) நெடுவினா

1 ) யானை டாக்டர் வாயிலாக இயற்கை , உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை:

              காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளைக் காட்டின் மூலவர்' என்பர். மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றைக் கொண்டதுமான யானைகள் நமது பண்பாடு, கலைகளில் பிரிக்க முடியாத அங்கமாக
விளங்குகின்றன. அவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நாம் பல்வேறு இன்னல்களை இழைக்கிறோம் என்பதையறிய ‘வானத்து நிலவும் மண்ணுலகத்துக் கடலும் போல்' என்றும் அலுக்காத யானைகளின்
பேருருக் காட்சியைக் காண அவற்றின் தடத்தைப் பின் தொடர்வோம்.

இயற்கைப் பாதுகாப்பு:

           இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. நில ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் நதி நீர் மாசுபட்டு வருகிறது. தட்பவெப்ப நிலையில்
உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழை வளம் குறைந்து விட்டது. நதிகள் இன்றைய சூழலில் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி
வருவதுதான் வேதனையானது.

                   பெருநகரங்களில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்காக பெருமளவில்
மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், நிழலில் ஒதுங்கும்
விலங்கினங்கள் தங்க இடமின்றி அழிந்துபோகின்றன. மரங்கள் குறைந்ததால் வெப்பம் அதிகரித்து உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் இன்று அளவுக்கு அதிகமான வெப்பத்தை உணருகிறோம். இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம்
சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை
தருகிறது. 

          இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள்,
விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.

உயிரினப் பாதுகாப்பு :

           இயற்கைச்  சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகளைப் பாதுகாப்பது அவசியம். மரங்கள் , தாவரங்கள் பெருக்கத்துக்கும், தட்ப வெப்பநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், மரங்கள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன.

           உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியாதான். 1972-ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. விலங்குகள் வாழ ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதியில் 25% ஒதுக்கப்பட வேண்டும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர். நமது மாநிலத்தில் மொத்த வனப்பரப்பில் 29.32 பரப்பளவில் வன உயிரின காப்பகங்கள் உள்ளன.

****************    **************   ************

2 ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை , தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.

  பள்ளு : 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.  இது ' உழத்திப் பாட்டு ' எனவும் அழைக்கப்படும். தொல்காப்பியம் குறிப்பிடும் ' புலன் ' என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.

வடகரை நாட்டின் இயற்கை வளம் : 

    i ) வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைகேட்டு வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை  வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.

(ii) தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.

(iii )  மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும்.

(iv) இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.

தென்கரை நாட்டின் இயற்கை வளம்:

 i )   தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாட மாளிகைகளில் அகில் புகையின் நறுமணம் பரவிக் கொண்டே இருக்கும்.
இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.

ii ) செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாத காவல் காப்பர். இளைய பெண்கள் பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.

(iii ) இங்குள்ள குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகள் கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும்.

iv ) இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரைச் சூடியதென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றால நாதர் வீற்றிருக்கின்றார்.

*************     **************     ************

வினா உருவாக்கம் & விடைத்தயாரிப்பு

திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,

 திண்டுக்கல்.

*************    **************    **************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************

Post a Comment

0 Comments