கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் ( ஜூலை 15 ) கல்வி வளர்ச்சி நாள் - சிறப்புப் பதிவு - மு.மகேந்திர பாபு.

 

கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் 

( ஜூலை  - 15 - கல்வி வளர்ச்சி நாள் )



**************    **************   ************


கல்வி தந்த வள்ளல் பெருந்தகை     


        கதராடைக்குள் மறைந்திருந்த கருப்பு நிற மேனிக்குள் , கரிசல் காட்டின் பருத்திப் பூவாய்ப்   பூத்திருந்தது அவரது உள்ளம். பட்டிதொட்டி எங்கும் அவரது பாதம்பட  , கரை புரண்டு ஓடியது கல்வி வெள்ளம்.காட்டு மல்லி வாசமென மணத்தது அவரது பாசம் . விரிசல் விழுந்த கரிசல் நிலத்தை இணைக்கும் தண்ணீர்போல வாழ்ந்தவர்.படிக்காத மேதை என்றழைக்கப் பட்டவர் பின்னாளில் பல்கலைக்கழகமாக உயர்ந்து நின்றார்.  மக்கள் மனங்களை கல்விக் கூடங்களால் வென்றார். மக்கள் கொடுத்த பதவி மக்களுக்கு உதவி செய்வதற்கே என தன்னை அர்ப்பணித்தவர்.நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலத் தமிழகத்தின் தேவையையும் தன் ஞானத்தால் அறிந்து , ஞாலத்தில் தமிழகத்தை உயர்த்தியவர். அணைகள் பல அமைத்து ஓடும் நீரைத் தேக்கி , மக்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சியைத் தேக்கியவர். அவரது நீளமான கை கல்வியைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதற்காக நீண்டது. அறியாமை இருள் மாண்டது. யார் அவர் ? அவர்தான் தந்தை பெரியாரால் ' பச்சைத்தமிழன் ' என்றழைக்கப்பட்ட கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் , ஏழைகளின் பங்காளர் , கர்மவீரர் காமராசர் அவர்கள்.

விருதுப்பட்டி பெற்ற விருது.

           விருதுப்பட்டி என்னும் கரிசல் மண்ணில் உதித்த கருப்பு வைரம். அன்றைய விருதுப்பட்டியான இன்றைய விருது நகர் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில்  தொடர்ந்து மாநில முதன்மை பெற்றுச் சரித்திர சாதனை படைத்து வந்தது. வருகிறது. காரணம் , கல்வி பிறந்த ஊரல்லவா அது ? சாதனைகள் தொடரத்தானே வேண்டும் ? 

' நிமிர்ந்தால் தலையிடிக்கும்

நிற்பதற்கே இடமிருக்கும் 

அமைவான ஒரு குடிலில் 

ஐயா நீ வந்துதித்தாய் ' 

- என்று கர்மவீரரின் எளிமையான இல்லத்தை வார்த்தையில் வடித்தார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

          ஒவ்வொரு நாளும் , மாதமும் , ஆண்டும் ஏதேனும் ஒரு விதத்தில் எதிர்காலத்தில் மறக்க முடியாத நிலையைப் பெற்றுவிடுகிறது. அந்த வகையில் 1903 ஆம் அண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதியை வரலாறு தன் பக்கங்களில் கல்வி பிறந்த நாளாக , கல்வி  வளர்ச்சி நாளாக எழுதி வைத்துக் கொண்டது. ஆம் ! அன்றுதான் கர்மவீரர் , குமாரசாமி - சிவகாமி தம்பதியினர்க்கு குழந்தையாக வந்துதித்தார். பள்ளி  வயதில் தந்தையை இழந்து , பின்னாளில் பள்ளி செல்லும்  குழந்தைகளுக்கு கல்வி தந்த தந்தையாக மாறினார். மணமேடை ஏறிடாத அவரை , மக்கள் மனமேடை நிரந்தர சிம்மாசனமிட்டு அமர்த்திக் கொண்டது.

அழியாச் செல்வம் 

' வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது 

வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது 

கொடுத்தாலும்  நிறைவன்றிக் குறைவுறாது '  - ஆம் ! கொடுக்கக் கொடுக்க குறைவுறாத நிறைவான செல்வம் இந்த உலகில் உண்டென்றால் அது கல்விச் செல்வம் மட்டுமே ! மற்ற செல்வங்கள் எல்லாம் சில நாட்களில் நம்மை விட்டுப் போகும். அப்போது மனம் துன்பத்தில் வேகும் . ஆனால் கல்வி மட்டுமே நிரந்தரமாய் நம்மோடு வரும். வாழ்வில் இன்ப ஒளியைத் தரும் . ' கண்ணுடையர் என்பவர் கற்றோர் ' என்ற  வான் புகழ் வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை வளமாக்கினார் . கல்வி ஒளியே கண்ணின்  ஒளி என்பதை கர்மவீரர் தெரிந்திருந்தார். மக்களது வாழ்க்கை நிலையை நன்கு புரிந்திருந்தார். மிரட்சியோடு இருந்த தமிழகத்தில் , எத்தனையோ புரட்சிகளை கர்மவீரர் செய்திருந்தாலும் , அவர் செய்த கல்விப் புரட்சி என்பது உலகம் உள்ளளவும் உள்ளத்தில் உறைந்திருக்கக் கூடிய வரலாற்றுச் சாதனையாகும். குடிசையும் , கோபுரமாக முடியும் என்றால் அது கல்வி ஒன்றினால் மட்டுமே முடியும்  என்ற நம்பிக்கை கர்மவீரருக்கு இருந்தது. கையிலும் , பையிலும் காசு இருப்பதைவிட கல்வி ஒருவனிடம் இருந்தால் அவன் சந்ததியே நிம்மதியாக இருக்கும் என நினைத்தவர் பெருந்தலைவர்.பிறக்கும் இடம் கருவறையென்றாலும் , சிறக்கும் இடம் வகுப்பறைதான் என்பதை உலகுக்கே உணர்த்தியவர் கர்மவீரர்.பள்ளிகளைத் திறந்துவைத்து , கல்வியின்பால் மக்கள் மனங்களையும் திறந்து வைத்தார்.

கல்வி வளர்ச்சி

' கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை ' 

- என்ற வான் புகழ் கொண்ட வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை நன்கு உணர்ந்தவர் கர்மவீரர் அவர்கள். அறியாமை என்ற இருளை அகற்றிய ஞானதீபம். கல்வி ஒன்றே மக்களின் உயர்விற்கான ஒரே வழி என்பதை உணர்ந்திருந்தார் பெருந்தலைவர். அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதை சபதம் போலவே ஏற்றார். இருநூறு ஆண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் வழங்கியவர் கர்மவீரர் என்று கல்வித்துறை அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகிறார். ' கல்விக்கண் கொடுத்த வள்ளல் ' என்று புகழ்ந்தார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் . கர்மவீரரின் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கில் பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. முந்நூறு பேர் கொண்ட ஓர் ஊருக்கு ஒரு பள்ளி எனத் திட்டமிட்டார். இலவசக் கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் செயல் படுத்தப் பட்டன. சுமார் நான்கு இலட்சம் என்றிருந்த கற்றோர் எண்ணிக்கை , பதின்மூன்று இலட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. 

மதிய உணவு தந்த மாமனிதர்.

' வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு

வாழும் மனிதருக் கெல்லாம்

பயிற்றுப் பலகல்வி தந்து இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும் ' - என்றான் மாகவிஞன் பாரதி. பாரதியின் வார்த்தைகளை நன்கு உணர்ந்தவர் கர்மவீரர் அவர்கள். ஒட்டிய வயிறோடு ஒருசாண் உணவிற்காக காடுகரை நோக்கி ஓடும்  குழந்தைச் செல்வங்களைப் பள்ளிக்கு வரவைக்க என்ன செய்யலாம் என நினைத்தார்.

              பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மனதில் உதித்த மகத்தான திட்டம்தான்   ' மதிய உணவுத் திட்டமாகும் ' . வறுமை காரணமாக பள்ளிக்கு வராமல் , சிறுவயதிலேயே பிழைப்புக்காக வேலைக்குச் செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவைப்பதற்காகவும் , கல்வி வளர்ச்சிக்காகவும் இத்திட்டத்தை பெருந்தலைவர் தொடங்கினார். பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் எல்லாக் குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை.ஏழைப் பையன்களுக்கும் , பெண் குழந்தைகளுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு , மாடு மேய்க்கப் போய்த் தங்களது எதிர்காலத்தை கல்வி கற்காமலே இழந்து விடுகிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம். அதற்கு ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

குழந்தைகளின் குருநாதர்.

தன்னைத் தேடி வந்து உதவி கேட்பவர்கள் , உதவி பெறுவதற்குச்  சரியானவர்கள் என்றால் மறுக்காது , மறக்காது உதவி செய்வார் பெருந்தலைவர் அவர்கள். ஒருநாள் பெருந்தலைவர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க ஒரு சிறுவனும் , சிறுமியும் அழுக்காடைகளுடனும் , பரட்டைத் தலைகளுடனும் வந்தார்கள். அவர்களது தோற்றம் ஏழ்மையைப் பறைசாற்றியது. பணியாளர் அவர்களை உள்ளே விடாமல் விரட்டுகிறார். வாசல்  வரை ஓடிய குழந்தைகள் இருவரும் தயங்கித் தயங்கி நிற்கிறார்கள். தம்மைப் பார்க்க வந்தவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கண்களில் அந்தக் குழந்தைகள் பட்டுவிட்டார்கள். யாரைப் பார்க்க வந்தீங்க ? என்றார். சிறுமி தயக்கத்துடன் , உங்களைப் பார்க்கத்தான் வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரிட்சைக்கு பீஸ்கட்ட பணம் இல்லை. உங்களைப்பார்த்தா உதவி செய்விங்கனு எல்லோரும் சொன்னாங்க.அதான் வந்தோம் என்றாள் .


அவர்களை அன்போடு தட்டிக்கொடுத்தபடி , அம்மாதான் அனுப்பிச்சாங்களா ? என்றார். இல்லை , நாங்களாகத்தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடுவீடா விக்கிறாங்க. அந்த வருமானத்தில எங்கள படிக்க வைக்கிறாங்க என்று சொன்னதும் , வீட்டிற்குள் சென்று கையில் கவரோடு வந்தார்.சிறுமியிடம் கொடுத்து , இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டுங்க. அம்மா பேச்சைக்கேட்டு நல்ல பிள்ளைகளா நடக்கணும் என்றார். மறுநாள் மீண்டும் வந்த குழந்தைகள் , பரிட்சைக்கு பணம் கட்டிவிட்டோம் ஐயா. அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை பெருந்தலைவரிடம் சிறுமி நீட்டினாள். பெருந்தலைவர் கண்கலங்கி விட்டார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா என குழந்தைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

வாழும் வள்ளல்.

                 கர்மவீரர் காமராசர் என்றாலே எளிமையும் , இனிமையும்தான். வாழ்ந்த காலத்தில் தனக்கென தனிப்பாதை வகுத்தவர்.  பிரதமர்களை இந்தியாவிற்கு உருவாக்கியவர் என்பதை விட , பல்லாயிரம் பிள்ளைகளை பள்ளிக்கூடங்கள் அமைத்து  உருவாக்கியவர் என்பது பெருமிதத்திற்குரியது.


' அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம்கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் '


என்ற மகாகவியின் வரிகளுக்கு உரமூட்டியவர் பெருந்தலைவர். பள்ளிக்கூடம் சென்று அதிகம் படிக்காத அந்த மேதையின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த நாளை தமிழக அரசு ' கல்வி வளர்ச்சி நாளாகக் ' கொண்டாடி வருகிறது. நாமும் கொண்டாடுவோம் கர்மவீரரையும் , கல்வியையும் ! கல்விக்கூடங்கள் இருக்கும்வரை கர்மவீரர் காமராசர் வாழும் வள்ளல் , நம்மை ஆளும் வள்ளல்.

(  கர்மவீரர்  காமராசர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை 15 - 07 - 2020 )

( நன்றி - தினமலர் - மதுரை பதிப்பில் வெளியான கட்டுரை.)

மு.மகேந்திர பாபு ,   தமிழாசிரியர் ,

இளமனூர் , மதுரை .

பேசி - 97861 41410.

***************    *************   ************



***************    **************   ***********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

1 Comments

  1. பதிவு மிகவும் அருமை
    கர்மவீரருக்கு பெருமை

    ReplyDelete