வகுப்பு 11 - தமிழ்
இயல் 1 - இலக்கணம்
இலக்கணத் தேர்ச்சிகொள்
**************** ************ ************
1 ) தவறான இணையைத் தேர்வு செய்க.
அ) மொழி + ஆளுமை - உயிர் + உயிர்
இ) கடல் + அலை - உயிர் + மெய்
ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
(விடை: (இ) கடல் + அலை - உயிர் + மெய்)
2. கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.
அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர். (3)
விடை - அண்ணா
ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர். (10)
விடை: கல்யாண சுந்தரனார்
இ) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர். (6)
விடை: பாரதிதாசன்
ஈ ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர். (2)
விடை: ஜீவா.
3 ) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அ) காலங்காத்தால எந்திரிச்சிப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
விடை: காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது.
விடை: முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.
இ) காலத்துக்கேத்த மாரிப் புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்.
விடை: காலத்திற்கேற்றபடி புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்.
ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாப் பதிய வைக்கனும்.
விடை: ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கவனமாகப் பதிய வைக்க வேண்டும்.
உ) தேர்வெழுத வேகமாகப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
விடை: தேர்வெழுத வேகமாகச் செல்லுங்கள். நேரம் கழித்துச் சென்றால் பதற்றமாகிவிடும்.
4. வினாக்கள்
அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
(i) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் - 22.
(ii) உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். (அ முதல் ஔ வரை )
(ii) மெய்யெழுத்துகள் மெய் வடிவிலேயே சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன.
(iv) மெய்களில் க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் சொல்லின் முதலில் வரும்.
ஆ ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.
(i) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் - 24.
(ii) உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.
(ii) மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினோரெழுத்தும் சொல்லின் இறுதியில் வரும்.
(iii) பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.
எ.கா. : பல, பலா, கரி, தீ, கொடு, பூ, சே, நகை, நொ, கோ, கௌ, உரிஞ், கண், வெறிந், அறம், பொன், தாய், பார், கால், தெவ், வாழ், கேள்.
இ) உயிரீறு. மெய்யீறு - விளக்குக.
(1) உயிரீறு: நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது உயிரீறு' எனப்படும்.
எ.கா. : மணி(ண் + இ] + மாலை = மணிமாலை. - உயிரீறு.
(ii) மெய்யீறு: நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது 'மெய்யீறு' எனப்படும்.
எ.கா. : பொன் + வண்டு = பொன்வண்டு - மெய்யீறு.
ஈ) உயிர்முதல், மெய்ம்முதல் - எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
(i) உயிர்முதல்: வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது உயிர்முதல்' எனப்படும்.
எ.கா. : வாழை + இலை = வாழையிலை - உயிர்முதல்.
(ii) மெய்முதல்: வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது மெய் முதல் எனப்படும்.
எ.கா. - தமிழ் + நிலம் ந் + இ = தமிழ் நிலம் - மெய் முதல்.
உ) குரங்குக்குட்டி - புணர்ச்சியை விளக்குக,
(1) குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி
(II) மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும் எனும் விதிப்படி 'க்' மிகுந்தது.
குரங்கு + க் + குட்டி = குரங்குக்குட்டி என்றானது.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
1 Comments
Keerthika
ReplyDelete