11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - உரைநடை உலகம் - பேச்சுமொழியும் கவிதைமொழியும் - காட்சிப் பதிவு & எழுத்தில் பாடமே படமாக !

 

                 வகுப்பு - 11 - தமிழ் 

        இயல் 1 - உரைநடை உலகம்

பேச்சுமொழியும் கவிதைமொழியும்



************    **************    *************

           வணக்கம் நண்பர்களே ! இன்று நாம் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 ல் உரைநடை உலகமாக இருக்கக்கூடிய பேச்சு மொழியும் கவிதைமொழியும் பாடத்தைக் காண உள்ளோம்.  இக்கட்டுரைய எழுதியவர் இந்திரன் என்பவர். அவரைப்பற்றிய செய்திகளை நூல்வெளிப் பகுதியில் காண்போம்.

நூல்வெளி 

                 இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் "பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக, 2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளார். முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் உள்ளிட்ட கவிதை நூல்களையும் தமிழ் அழகியல், நவீன ஓவியம் உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். வெளிச்சம், நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.

.

பாடப்பகுதிக்கான கவிதை மொழிபெயர்ப்புகள்

வால்ட் விட்மன் - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சங்கர் ஜெயராமன்

* மல்லார்மே - பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் : வெ. ஸ்ரீராம்

பாப்லோ நெரூடா - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : ஆ.இரா. வேங்கடாசலபதி

நுழையும்முன்

                கலைகளின் உச்சம் கவிதை என்பர். அக்கவிதையினை, இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி. கவிதை எவ்வாறு நிகழ்கிறது; எழுத்துமொழியைக் கடந்து பேச்சுமொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை.

பாடப்பகுதிச் செய்திகளைப் பார்ப்பதற்கு முன்பு இப்பாடம் பற்றி நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவைக் காண்போம்.




நண்பர்களே காட்சிப்பதிவில் மிக இனிமையாக ஐயா அவர்கள் விளக்கினார்கள் . இப்போது பாடப்பகுதிச் செய்திகளைக் காண்போம்.

                    கவிதை என்பது எது? கவிதை
எழுதும் செயல்பாடு எப்படி நிகழ்கிறது?
எழுதுகிற போது எழுதிக் 
கொண்டிருப்பவனுக்குள் என்ன நிகழ்கிறது?
கவிதை எழுதி முடித்து விட்ட பிறகு
கவிஞனுக்கும் கவிதைக்கும் என்ன உறவு?
அதை யார் முடிவு செய்கிறார்கள்?

                தொடரும் இந்தக் கேள்விகளுக்கான
பதில்களை எண்ணற்ற அழகியல்வாதிகளும்
தத்துவ ஞானிகளும் கலை விமர்சகர்களும்
மொழியியல் அறிஞர்களும்
கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் நான்
இதுவரை கேட்டது, கண்டது, படித்தது ஆகிய
எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், நான் மொழியில் மிதந்துகொண்டுதான் பிறந்ததாகத் தெரிகிறது. மொழியில் மூழ்கியபடிதான் எனது விழிகள் இந்த உலகைக்
காணத் திறந்தன என்று உணர்கிறேன்.

என்னை விளக்கிய மொழி

                             எனக்கு மொழி என்பது அறிமுகமாவதற்கு முன்னால் பொருள்களும் விலங்குகளும் பறவைகளும் வானும் நிலவும் சூரியனும் மரங்களும் செடிகளும் இருந்திருக்கவே இல்லை. மொழி எனது உலகத்தை ஒவ்வொரு பொருளுக்கும் பெயர்களுடன் கட்டியெழுப்பியது. இதன்பிறகுதான் 'நான்' என்ற ஒன்று பிறந்தது. எனது உலகம் என்பது
மொழியினால் கட்டமைக்கப்பட்ட பிறகு அந்த உலகத்திலிருந்து தனித்துப் பிரிந்து நிற்கிற 'நான்' உதயமானேன்.

                          நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன் . மொழியின் பொருளை அறிந்துகொள்ளத் தொடங்கியது எந்த ஆண்டில்? எந்த நாளில்? எத்தனை மணிக்கு? இவை அனைத்திற்கும் என்னிடம் பதில் இல்லை. நான் உணர்ச்சியினால் நிரம்பியிருக்கிறபோது அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும் என்று எப்போது தோன்றத் தலைப்பட்டது?

மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்'

என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப்

பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை

நிறுத்திக்கொள்கின்றன.

                                                    எர்னஸ்ட் காசிரர்

             மொழி என்ற ஒன்று என்னுள் தோன்றியவுடன் தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது. எனது உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி. இதன் மூலமாக எனக்குள்  உலகத்தின் பல கதவுகள் திறக்கலாயின. மொழியின் சாவியைப் போட்டுத் திறக்கிறபோதெல்லாம் இது வரையிலும் பெயர் சூட்டப்பட்டிராத பலவற்றை நானே என் பண்களால் கண்டுபிடிக்கத் தொடங்கினேன். அவற்றிற்கு நானே எனக்குப் பிடித்தமான பெயர்களைச் சூட்டத் தொடங்கினேன். பெயர்களுக்குக் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய வண்ணங்களைப் பூசும் சக்தியை மொழி எனக்குக் கொடுத்தது. அவற்றை விதவிதமான அடுக்குகளில் ஒருமையாகவும்பன்மையாகவும் அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அடுக்கும் திறனை மொழி எனக்கு வழங்கியது.

வாளினும் வலிமை

              மொழிவழியாக ஒன்றைப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கியவுடன் அந்தப் பொருளின் மீது எனக்கொரு அதிகாரம் வந்துவிடுவதை உணர்கிறேன். குழந்தையாக இருந்தபோது, "அம்மா, அம்மா" என்று அழைப்பேன். வேலையில் மூழ்கிய அம்மா, என்னைக் கவனியாதபோது திடீரென்று அவரது பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன். அவர் திடுக்கிட்டுத் திரும்பி என்னிடம் வந்திருக்கிறார். அப்போதுதான் என்னுடைய மொழி, பெயர்கள் இட்டு அழைத்தவுடன் அவற்றின் மீது ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்ததை உணரத் தலைப்பட்டேன்.

                உடம்பின் ஒரு பகுதியாக இருக்கிற தொண்டையிலிருந்து சொற்கள் எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பொருள் வேறுபாடுகளை என்னால் ஏற்படுத்த முடியும் என உணர்கிறேன். இதுமட்டுமன்றி, கைகால் அசைவுகள், முகத்தின் தசைநார்ச் சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள் என்னுடைய மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன. ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைந்துவிடுகிறது. 

            இந்தத்திட நிலையை அடைந்த மொழி அதுஅச்சிடப்பட்ட ஒரு கவிதையாக மாறுகிறபோது என்னிலிருந்து பிரிந்துபோய்விட்ட ஒரு பொருளாக மாறிவிடுகிறது. உலகை, மொழி கட்டியெழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் கைப்பிடியிலிருந்து நழுவுவதற்குத் தொடர்ந்து முயல்வதாகவும் தெரிகிறது.

நேரடிமொழி

                எழுத்து மொழியைக் காட்டிலும்
பேச்சு மொழி உணர்ச்சிக்கு மிக அருகில்
இருக்கிறது. எனவேதான் இலக்கிய
வழக்கைக் கைவிட்டுப் பேச்சு மொழிக்குத்
திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின்
மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி
கொண்டதாக மாறிவிடுகிறது. எழுத்துமொழி
அப்படியன்று. எழுதுவதை மட்டும்தான்
மனிதனின் கை செய்கிறது. முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக
அமைந்துள்ளது. அதனால்தான், பேச்சுமொழி
எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

               எழுத்துமொழியில் பேச்சைக் கேட்க
எதிராளி என்கிற ஒருவன் கிடையாது.
எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால்
தனக்குத்தானே பேசிக்கொள்கிற பேச்சு.
ஆனால் பேச்சு என்பது அப்படிப்பட்டதன்று.
பேச்சு என்பது தன்னைத் திறந்துகொள்கிற ஒரு செயல்பாடு. உண்மையில் சொல்லப்போனால் பேச்சு என்பது மொழியில் நீந்துவது. பேச்சுமொழியின் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும்
நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன. இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவதுபோல அமைக்கின்றனர். இதையே
அவர்கள் நேரடிமொழி எனக் கருதுகின்றனர்.

                 நேரடி மொழி எனப்படும் பேச்சு மொழிக்கு ஒருபோதும் பழமை தட்டுவதில்லை. அது வேற்று மொழி ஆவதில்லை. அது எப்போதும் உயிர்ப்புடனும் மாறிக்கொண்டும் இருக்கிறது. இம்மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா.

                        பேச்சு மொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின் மேல்தோல்போல் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடை போல் போர்த்தி மூடிவிடுகின்றன. எனவே, கவிதை மரபான தனது செய்யுள் சந்தத்திலிருந்து விடுதலை அடைந்துவிட்டது. அடுத்ததாக, அது கவிதைக்கென இருக்கிற தனித்துவமான மொழிநடையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும்.

பெருங்கவிஞர்களின் வாய்மொழி

                      பேச்சு மொழியைக் கவிதையில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல் வகையினர், வால்ட் விட்மனைப் போன்றவர்கள். இவர்களுடைய கவிதைகளில் எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை. எழுத்துகள் எப்படிச் சொற்களில் கரைந்து போகின்றனவோ அதுபோன்று சொற்கள் கவிதைகளில் கரைந்து போவதில்லை. இவற்றில் சொற்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வதில்லை. இக்கவிதைகள் இறுக்கிச் சுற்றப்பட்ட கம்பிச்சுருளைப் போன்று அல்லாமல் பேச்சுமொழிக்கே உரிய தளர்வோடு கட்டப்பட்டவை. இதில் பல நேரங்களில் கவிதை என்பது நடனமாடிக் கொண்டிருப்பவன், அவ்வப்போது நடப்பதற்குத் தாவிவிடுவதுபோல வெறுமனே ஒரு பேச்சு என்ற நிலைக்கு நழுவிவிடும்.

                கவிஞர் மல்லார்மே போன்றவர்கள் இரண்டாம் வகையினர். இவர்களுடைய பேச்சு எதிராளியை விளித்துப் பேசுவது போன்றது அன்று. மின்சார ரயிலின் நெருக்கத்தில் படியில் தொங்கிக்கொண்டு போகிறபோது வெளியில் பரந்து கிடக்கும் தனிமையைச் சாட்சியாக வைத்துத் தங்களுக்குத் தாங்களே உதடு பிரித்துப் பேசிக்கொள்ளும் வகை.

              இவர்களுடைய கவிதைகளில் பேச்சு என்பது மூடிய நிலையில் செயல்படுகின்றது. தனிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் பிறிதொன்றைப் பேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னையே பேசிக்கொள்கிறது. குறியீடுகளின் கூட்டம் ஒரு முனையிலும் மொழி மறுமுனையிலும் இருக்கையில் கவிதையின் பேச்சு, இடையில் இருக்கும் வெளியில் புழங்குகின்றது. குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

                மூன்றாவது வகையினர் ஸ்பானிஷ் மொழிக் கவிஞராகிய பாப்லோ நெரூடா போன்றவர்கள். ஒரு கவிதை, ஒரு பொருளைப் பற்றியது என்று தோன்றினாலும் அஃது அப்பொருளைப் பற்றியது அன்று. அது வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றிப் பேசுகிறது. ஒரு வடிவம் கொள்ளுதல் என்பதை நோக்கி வாழ்க்கை தொடர்ந்து முயல்கிறபோதும் அது இந்த முயற்சியில் ஒரு போதும் வெற்றி கொள்வதில்லை.

                      இதுபோன்ற கவிதை, எந்தவித முன்கூட்டிய திட்டமோ, ஒழுங்கமைதியோ இன்றி ஒன்றைச் சுட்டுவதுபோலக் காட்டி உடனே எதையும் சுட்டாமல் முடிந்து போகிறது. அறியப்பட்டிராததை நோக்கி நகர்கிற அதே நேரத்தில் நெரூடாவின் கவிதை விரிந்ததாகவும் மையத்தை நோக்கி நகர்வதாகவும் இருக்கிறது.

                 கவிதை என்பது எது? என்ற இந்தக் கேள்விக்கு எனக்குத் தற்சமயம் கிடைக்கும் விடை இதுதான். கவிதை என்பது ஒரு பொருளன்று; அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு. எனவே, கவிதை என்பதே மொழிதான். கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது . எனவே, எத்தகைய மொழியை நாம் பயன்படுத்துகின்றோமோ அதன் குணாம்சங்களையும் பேச்சுவழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது.


****************      *************     ***********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

2 Comments