மேல்நிலை இரண்டாம் ஆண்டு - ( 12 )
பொதுத்தமிழ்
இயல் - 1 - உயிரினும் ஓம்பப்படும் - மொழி
கற்றல் நோக்கங்கள்
* கவிஞரின் மொழிப்பற்றைத் தாமும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்துதல்
** மரபுக் கவிதையினைப் பொருளுணர்ந்தும் சீர்பிரித்தும் படிக்கும் ஆற்றல் பெறுதல்.
********************** *********************
கவிதைப்பேழை
இளந்தமிழே ! - சிற்பி பாலசுப்பிரமணியம்
வணக்கம் மாணவ நண்பர்களே ! இன்று நாம் 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்தில் முதலாவது இயலாக உள்ள உயிரினும் ஓம்பப் படும் பகுதியில் இருந்து கவிதேப்பேழையாக அமைந்துள்ள இளந்தமிழே ! என்ற கவிதையை நாம் காண உள்ளோம். இக்கவிதைக்கான விரிவான , இனிமையான விளக்கத்தை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் காட்சிப் பதிவாகத் தருகிறார். மாணவர்கள் கண்டு மகிழலாம்.
நுழையும்முன் என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள செய்தியினைக் காண்போம்.
தமிழ்மொழி நம் அடையாளம் ; பண்பாட்டின் நீட்சி ; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு , எழுதப்பட்டு உயிர்ப்போடும் இளமையோடும் இருப்பது. இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. அத்தகைய தமிழின் பெருமையைப் போற்றும் மரபுக்கவிஞர்கள் இலர் எனலாம். தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவிஞர்களின் அவா.
நண்பர்களே ! இளந்தமிழே ! என்ற கவிதையை எழுதிய ஆசிரியரைப் பற்றிய செய்திகளை நூல்வெளி பகுதியில் கண்டு , அதன் பின் கவிதையைக் காண்போம்.
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்;
மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி,இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒருகிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்; இலக்கியச்சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்;
மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
நண்பர்களே ! இப்போது நாம் பாடலைக் காண்போம் .
செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!
தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்
விம்முகின்ற தோள்மீதில் முத்து முத்தாய்
வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட
எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே!
மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்
பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்!
பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா,வா!
கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்
குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!
நண்பர்களே ! மேலே உள்ள அற்புதமான பாடலுக்கான விளக்கத்தை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் கண்டு மகிழ்வோம்.
நண்பர்களே ! காட்சிப் பதிவைக் கண்டு மகிழ்ந்தீர்களா ?
இலக்கணக் குறிப்பு
செந்தமிழே , செந்நிறம் , செம்பரிதி - பண்புத்தொகைகள்
சிவந்து - வினையெச்சம்
வியர்வை வெள்ளம் - உருவகம்
முத்துமுத்தாய் - அடுக்குத்தொடர்.
உறுப்பிலக்கணம்
சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன்
சாய் - பகுதி
ப் - சந்தி
ப் - எதிர்கால இடைநிலை
ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
விம்முகின்ற = விம்மு + கின்று + அ
விம்மு - பகுதி
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
வியந்து - விய + த் ( ந் ) + த் + உ
விய - பகுதி
த் - சந்தி ( ந் ) ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
இருந்தாய் = இரு + த் ( ந் ) + த் + ஆய்
இரு - பகுதி
த் - சந்தி ( ந் ) ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி.
செம்பரிதி = செம்மை + பரிதி
விதி : ஈறு போதல்
செம் + பரிதி = செம்பரிதி
வானமெல்லாம் = வானம் + எல்லாம்
விதி - உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவந்து இயல்பே - வானமெல்லாம்.
உன்னையல்லால் = உன்னை + அல்லால்
விதி : இஈஐ வழி யவ்வும்
உன்னை + ய் + அல்லால்
விதி : உயிர்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே .
செந்தமிழே = செம்மை + தமிழே
விதி : ஈறுபோதல் = செம் + மொழி
விதி : முன்னின்ற மெய் திரிதல்
செந்தமிழே .
*********************** ********************
மாணவ நண்பர்களே ! ஆசிரியத் தோழர்களே ! இனிமையாகப் பாடம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். பாருங்கள். கருத்துகளைக் கூறுங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
*********************** *********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
1 Comments
S
ReplyDelete