ஓலைக்கொட்டானும் ஓசோன் ஓட்டையும் !

 ஓலைக் கொட்டானும்,ஓசோன்  ஓட்டையும் !


ஊருக்கு மாமா வருகிறார் 

என்றாலே மகிழ்ச்சிதான் 

காரணம் ,

மாமாவின் இரண்டு கைகளிலும் 

ஐந்தடுக்கு டிபன் கேரியரைப்போல் 

ஓலைக்கொட்டானில் 

தின்பண்டங்கள் வாங்கி வருவதால் .


கீழ் அடுக்கிலிருந்து 

சேவு ,மிச்சர் ,சீவல் ,

கருப்பட்டி மிட்டாய் ,

சீனி மிட்டாய் என 

ஒவ்வொரு அடுக்கும்  நிறைந்திருக்கும் 

மாமாவின் மனசைப்போல் .


பல நாள் கொட்டனுக்குள் 

இருந்தாலும் 

நமத்துப் போகாமல் 

மொருமொருப்பாகவே இருக்கும் .


தின்று முடிக்கப்பட்டபின் 

கொட்டான்கள்

கடைக்குச் சென்று பொருள் வாங்கவும் 

விதைப்பு நேரத்தில் 

விதைப் பெட்டியாகவும் ,

வீட்டில் பொருள் போட்டு வைக்கவும் 

பல நாட்கள்  கழிந்த பின் ,

ஓட்டையாகி விட்டால் ,

அடுப்பெரிக்கவும் ,

என பல அவதாரங்கள் எடுக்கும் .


இன்றெல்லாம் கொட்டான்களை 

காண்பதே 

அரிதாகி விட்டது .


ஒரு ரூபாய்க்கு 

மல்லித்தழை வாங்கினாலும் ,

பாலித்தின் கவர் கொடுங்க 

எனக் கேட்கும் மனநிலை .


மஞ்சள் பை 

தூக்கிச் செல்வது 

கௌரவ குறைச்சலாகி விட்டது .  


இயற்கையோடு 

நம்மையும் தின்று கொண்டிருக்கிறது 

பாலித்தின் தாள்கள் .


வாழ்வு தந்தது கொட்டான்,

மனிதன் அதை விட்டான் ,

மாசினால் கெட்டான்,

சாகும் வரை 

துன்பப் பட்டான் .


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments