குழந்தை

 குழந்தை 


@     வண்டிச் சத்தம் 

        கேட்டவுடன் 

        ஆவலோடு வந்து 

        காத்திருக்கிறது 

        வாசலில் குழந்தை .


@    ''அப்பா என்னையும் நாளைக்கு 

         டூட்டிக்கு கூட்டிட்டுப் போ ''

         செல்லப் பேச்சில் 

         கைதூக்கி  நின்று  

         தூக்கச் சொல்கிறது .


@     அப்பா  குளித்து  வந்தவுடன் 

         தூக்குகிறேன்  எனச் சொல்லி ,

         பொம்மைகளோடு உறவாட  

         விட்டுச்  செல்கிறேன் .


@     குளித்து  வந்த உடன் 

         குழந்தை  வருகையில் ,

         தவிர்க்க  முடியாத 

        அலைபேசி  அழைப்புகள் .


@     தொடர்  பேச்சில்  

         ஏக்கத்தோடு   என்னைப் 

         பார்த்துக் கொண்டிருக்கிறது  குழந்தை .

   

@      உறவினரின்  அழைப்பு .

          ' 'உடனே வா ''

           கடைக்குச்  செல்ல வேண்டும் .

           தவிர்க்க  முடியாமல் 

           புறப்படும்  போது,

           என்னையும் கூட்டிட்டுப்  போ 

           கெஞ்சுகிறது  .


 @     '' இருட்டில்  பூச்சி  

            கண்ணில்  பட்டு விடும் ''

            அப்பா உடனே வந்திருவேன்  

            சமாதானம்  சொல்லி  புறப்பட்டு ,


 @        நள்ளிரவில்  வீடு  வந்து  சேர்கையில் ,

             பொம்மையைக்  கட்டிப்  பிடித்துக்  கொண்டு ,

             பொம்மையோடு  

             பொம்மையாக  குழந்தை .


@          ஆழ்ந்து   பெருமூச்சு  விடுகையில் 

             தெறிக்கிறது 

             குழந்தையின்  மீதான 

             என்  ஏக்கப்  பெருமூச்சு 


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments