தீக்குச்சி
@ ஓ.....
ஒளிதரும் தீக்குச்சியே !
மனிதனிலிருந்து நீ
முரண் படுகிறாய் .
@ தலைக்கனம் இழந்த பிறகுதான்
மதிக்கப் படுகிறான் மனிதன் .
நீயோ ....
உன் தலையின் கனம்
இழந்த பிறகு எரிக்கப் படுகிறாய் .
@ தீப்பெட்டி காதலனோடு
பக்கவாட்டில் உரசும்போது
நீ மட்டும் ஏன் மரித்துப் போகிறாய்
காதலனை விட்டுவிட்டு ?
@ நீ இல்லா விட்டால்
எங்களின் அடுப்புகள்
சோம்பலாகி இருக்கும் .
நீ இருக்கப் போய்தான்
விறகுகுகள் சாம்பலாகின்றன .
@ மனிதனின் கைகள்
விழா மேடைகளில்
உன்னைக் கொண்டு
குத்து விளக்கேற்றும் போது
புதிய சமத்துவம் உருவாக்குகிறாய் .
@ ஆனால் ....
ஆளில்லா இரவு நேரங்களில்
குடிசை வீடுகளோடும்,
வைக்கோல் படப்புகளோடும்
நீ உறவாடும்போது
பல உறவுகள் அறுந்து விழுகின்றன .
@ உணர்ச்சி வேகத்தில்
நீயும் , பெட்ரோலும்
உடனே சங்கமமாகி விடுகிறீர்களே ?
@ நீ சாதி ,மதம் பார்க்காமல்
அனைவரின் சிதைகளையும்
சிதைக்கிறாய் .
மனிதன் தான்
சாதி,மதம் பார்த்து
தனக்குள் சிதைந்து கொள்கிறான் .
@ நீ வெளிச்சம் தந்து நிறைகின்றாய் .
பின் மறைகின்றாய் .
இருள் நிறை எண்ணத்தோடு
இருக்கின்றானே மனிதன் என்றும் .!
1 Comments
Super sir
ReplyDelete