வெற்றிக்கு வித்திடும் ஊக்கமும் பாராட்டும் - தன்னம்பிக்கைக் கட்டுரை - மு.மகேந்திர பாபு.

 


வெற்றிக்கு வித்திடும் ஊக்கமும் ,  பாராட்டும் .


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் 


' எடுத்த காரியம் யாவினும் வெற்றி 

எங்கு நோக்கினும் வெற்றி !' 

    - என்றான் மாகவிஞன் பாரதி . திடமான நம்பிக்கையுடன் திறமையும் , முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி நமக்கு வசப்பட்டு விடுகின்றது. வெற்றியை நோக்கிய பயணத்தில் சிலமுறை வாய்ப்புகள் நழுவுகின்றபோது நம் மனமேடையில் சோர்வும் , தயக்கமும் ஜோராக அமர்ந்து விடுகின்றன. தோல்விகள் மனதைச் சுடுகின்றன . அப்படிச் சோர்ந்து போகும்போதெல்லாம் ' உன்னால் முடியும் ' என்று யாரேனும் ஊக்கப் படுத்துகின்றபோது நம் மனம் உற்சாகம் பெற்று வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.


ஊக்கமும் பாராட்டும்.


' ஊக்குவிப்பவர் ஊக்குவித்தால்

ஊக்குவிப்பவரும்

தேக்கு விற்பார் '  - என்கிறது  வாலிபக் கவிஞர் வாலியின் கவிதை. ஆம் நண்பர்களே ! நாம் தரும் ஊக்கம் ஒவ்வொன்றும் மற்றவரின் ஆக்கத்திற்கு அடித்தளமிடும். ஊக்கமும் , பாராட்டும் வெற்றி என்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. பிறரை ஊக்கப்படுத்தும் போதும் , பாராட்டும் போதும் ஒரு நல்ல செயல் நடைபெறுவதற்கான முயற்சியில் நாமும் சிறுதுளியாக இருக்கின்றோம். ஊக்குவிக்கும் போது பிறர் மனம் உற்சாகம் அடைகின்றது. பாராட்டுகின்ற போது நம் மனம் பக்குவம் அடைகிறது. செயலுக்கு முன்னான ஊக்கமும் , செய்த பின்னான பாராட்டும் ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும்.

திருமந்திரம் தந்த திருமூலர்  ' யாவர்க்குமாம் பிறர்க்கு ஓர்  இன்னுரை தானே ' என்று சொல்கிறார். நாம் சொல்கின்ற இன்னுரை பலருக்கு முன்னுரையாகி ,  எழுச்சிப்படுத்தி இன்பம் கொடுக்கும். அந்த இன்னுரை ஊக்குவிப்பதாக , பாராட்டுவதாக இருக்கலாமே !


குழந்தைகளுக்கு ஊக்கம்.


       எங்கள் வீட்டுச் சுவரில் சின்னச்சின்ன கிறுக்கல்கள் ஏதும் இல்லை. புத்தம் புதிதாய் இருக்கிறது என்று சொல்வதில் பெருமையில்லை. கைக்கு எட்டும் உயரம் வரை எங்கள் வீட்டுச் சுவரில் பிள்ளைகளின் கைவண்ணம்தான். இடைவெளி இல்லாமல் வரைந்துள்ளார்கள். எழுதியுள்ளார்கள் . புள்ளி வைக்கும் அளவிற்கு இடம் கிடைத்தாலும் அதிலும் சிறு ஓவியம் ஒன்றை வரைந்து விடுவார்கள். பார்க்கப் பார்க்க ஆனந்தம்தான் என நீங்கள் சொல்வீர்கள் என்றால் , பிள்ளைகளை ஊக்குவிக்கும் பெற்றோர் நீங்கள்.


   கவிதை எழுதுவது , ஓவியம் வரைவது , பாடல் பாடுவது என ஏதேனும் ஒரு திறமை நம் குழந்தைகளிடம் நிச்சயம் இருக்கும். குழந்தைகளிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்வதுதான் பெற்றோரின் , ஆசிரியரின் தலையாயகடமை. அவர்களின் ஆர்வத்தை , திறமைகளைக் கண்டறிந்து முதலில் ஊக்குவிக்க வேண்டும் . செய்தபின்பு பாராட்ட வேண்டும். ' அடடா ! எவ்வளவு அழகாக இந்த ஓவியத்தை நீ வரைந்திருக்கிறாய் ! அருமையாக இருக்கிறது. உன்னை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் என்று நம் விழிகளில்  வியப்பைக் கலந்து சொல்கிறபோது குழந்தையின் மனச்சிறகு மகிழ்ச்சி வானில் பறக்கும். புதிதாய்ப் பிறக்கும். நீ ஓவியம் வரைவதற்காக அப்பா இந்த நோட்டினைத் தருகிறேன். நீ விரும்பும் போதெல்லாம் இதில் வரையலாம் எனச்சொல்கின்ற போது குழந்தை குதூகலமாகிவிடும். சின்ன வயதில் விதைக்கும் இந்த வார்த்தைகள் குழந்தைகளின் மனதில் வேர் விட்டு , விண் தொட்டு நாளை வெற்றியாளராய் மாற்றும் . புகழின் உச்சத்திற்கு ஏற்றும். 


பங்கேற்பே முதல் வெற்றி.


      பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள் என்றாலே மாணவர்களிடம் மகிழ்ச்சி நிரம்பும். பங்கேற்க மனம் விரும்பும் . படைப்புகள் அரும்பும். பேச்சு , பாட்டு , கவிதை , கட்டுரை , நடனம் , ஓவியம் என போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்றதும் , வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் என் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள் . சில மாணவர்கள் , ஐயா எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்கலாமா ? என்பார்கள். அந்தளவிற்கு ஆர்வம் அவர்களிடம் இருக்கும்.  எத்தனை மாணவர்கள் பங்கு பெற்றாலும் , வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் முதல் மூன்று மாணவர்கள்தான். இது அனைவருக்கும் தெரியும். அதையும் கடந்து என்னாலும் முடியும் என்று நம்பிக்கை கொண்டு மாணவர்கள் பெயர்களைக் கொடுக்கும் போதே வெற்றியாளர்களாக மாறிவிட்டார்கள். ஆம் ! போட்டியில் பங்கேற்பதே முதல் வெற்றி. அந்த வெற்றியாளர்களை ஊக்கப்படுத்தி , சாதனையாளராக்கிப் பாராட்ட வேண்டும். ' தம்பி இந்தப் போட்டியில் நீ பங்கேற்றமைக்காக உனக்கு இந்தப் புத்தகம் பரிசு என்றோ , பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நம் கரவொலியால் வாழ்த்துகள் என்றோ  இறைவழிபாட்டுக்கூடத்தில் சொல்கின்றபோது நாம் சாதனையாளர்களை உருவாக்கத் தொடங்கிவிட்டோம் என்றே அர்த்தம். நமது கைதட்டலும் , கைகுலுக்கலும் அவர்களுக்கு மாபெரும் அங்கீகாரம். உன்னை ஊக்குவிக்க நம் பள்ளி இருக்கிறது. நம் தலைமையாசிரியர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் அனைவரும் உன்னை வாழ்த்துகிறார்கள் . உன்னால் நம் பள்ளிக்குப் பெருமை என்று சொல்கின்ற போது மாணவர்கள் மனம் துள்ளும். போட்டிகளில் பரிசுகளை அள்ளும்.


ஆக்கம் தரும் ஊக்கம்


       படைப்பாற்றலை வெளிப்படுத்த இன்று நம் முன்னே பல களங்கள் இருக்கின்றன. நாளிதழ்கள் , வார , மாத இதழ்கள் , முகநூல் , புலனம் என ஒவ்வொன்றும் நம் திறமையை வெளிச்சப்படுத்துகின்றன. நமது படைப்பு வந்ததும் நண்பர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு , பாராட்டு மழையில் நனைத்து விடுவார்கள். ஊக்கத்தால் உள்ளம் தொடுவார்கள். நமது படைப்புகளுக்கு மற்றவர்கள் எவ்வாறு ஊக்கமும் , பாராட்டும் தருகிறார்களோ அதைவிடப்பன்மடங்கு மற்றவர்களின் படைப்புகளுக்கு நாம் வாழ்த்தும் , ஊக்கமும் தர வேண்டும்.  பதிவு இடுபவராக மட்டுமன்றி பாராட்டும் தன்மை உடையவராகவும் நாம் இருக்க வேண்டும். நண்பர்கள் மட்டுமன்றி புதியவர்களின் படைப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும். நமது கதையை , கட்டுரையைப் படித்துவிட்டு எங்கிருந்தோ முகம் தெரியாத ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லும் போது நம் மனம் மகிழ்கிறது. நெகிழ்கிறது. தொடர்ந்து எழுதவேண்டும் என்ற உற்சாகம் பிறக்கிறது. மற்றவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை நாம் தரவேண்டும். வான்புகழ் கொண்ட  வள்ளுவப் பேராசான் பொருட்பாலில் ' ஊக்கமுடைமை ' என்றொரு அதிகாரமே நமக்குத் தந்துள்ளார். ' உடைய ரெனப்படுவது ஊக்கம் ' என்கிறார். உடைமைகளில் எல்லாம் சிறந்து நிற்பது ஊக்கம் என்கிறார். 


மனம் திறந்த பாராட்டு.


      ' இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீங்கள் செய்த தீபாவளிப் பலகாரங்கள் சுவையாக இருந்தன ' என அம்மாவைப் பாராட்டலாம். நீங்கள் வாங்கித்தந்த உடையும் , தீபாவளி வெடியும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன என அப்பாவைப் பாராட்டலாம்.  அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னுடன் பணி புரியும் சக ஊழியர்களின் ஆற்றலையும் , அர்ப்பணிப்பு உணர்வையும் மாதாந்திரக் கூட்டத்தில் சொல்லிப் பாராட்டலாம். நமக்குக் கீழ் பணிபுரிபவர்தானே என எண்ணாமல் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுத்தலாம். உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பும் , ஈடுபாடும்தான் நமக்கு இந்த மாபெரும் வெற்றியைத் தந்தது என தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சொல்லும்போது சக ஊழியர்கள் மகிழ்ந்து போவார்கள். இன்னும் அதிக ஈடுபாட்டோடு பணி செய்வார்கள். 


              அதிகாரத்தில் இருக்கிறோம் என ஆதிக்கம் செலுத்தினால் சக ஊழியர்கள் நம்மிடமிருந்து ஒதுங்கிச் செல்வார்கள். உங்களில் ஒருவனாக நான் இருக்கிறேன் என நம் செயல்பாடு இருந்தால் அருகில் வந்து ஆலோசனை சொல்வார்கள். நான் சொல்வதைத்தான் நீங்கள் செய்யவேண்டும் என்று சொல்லும்போது நாம் தனித்து இருப்போம். சேர்ந்து செயல்படும் போது தனித்துவமிக்கவராக இருப்போம். சோர்வுடன் வரும் சக ஊழியரிடம் அவரின் சூழலைக் கேட்க செவி சாய்த்தால் சுறுசுறுப்பாகிவிடுவார்.  தேவையானபோது ஊக்கமும் , பாராட்டும் கொடுக்கும்போது வேலைகள் தடையின்றி நடைபோடும்.


வெற்றியை நோக்கி 


                 வாழ்க்கைப் பயணத்தில்  ஏற்றமும் , இறக்கமும் மாற்றத்தைத் தந்து கொண்டே இருக்கின்றன . தினந்தோறும் புதுப்புது நண்பர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் . நமது புன்முறுவல் ஒரு புது நண்பரை உருவாக்கும். நமது ஊக்கமும் , பாராட்டும் சோர்ந்து போன ஒருவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சிப் படுத்தி நாம் மகிழ்வது என்பார்கள். இருக்கும்  காலத்தில் இனிமை தரும் சொற்களைச் சொல்வோம் ! அன்பால் மனங்களை வெல்வோம் !


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , 

அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , 

இளமனூர் , மதுரை.

பேசி - 97861 41410.





 



Post a Comment

0 Comments