பள்ளிக்குப் போறோம் !

காத்தோடு கை வீசி
நட்போடு கதை பேசி 
நடப்பதே தினமும் சுகந்தான்.
இப்பப் பூத்த பூவென
மலரும் எங்க முகந்தான்.

சைக்கிளயும் தேடல
பஸ்ஸயும் மனம் நாடல.
செருப்பில்லா காலுதான் .
ஆனாலும் நாங்க
செருக்கா நடக்கும் ஆளுதான்.

அடையாள அட்டை 
ஆடிக்கொண்டே தொங்கும்.
ஆண்டு பல கடக்கும் போது 
எங்க ஊருக்கு அடையாளம் நாங்கதானு
எங்க மனசு பொங்கும்.

காட்டுவழி கடந்தாலும் 
ரோட்டு வழி நடந்தாலும் 
வெயில் , மழ வந்தாலும் 
விரக்தியுமில்ல , வேதனையுமில்ல
நாங்க நடப்பதற்கு இவை சோதனையுமில்லை.

எங்கூர்ல எந்த 
இரைச்சலுமில்லை.
ஏழை , பணக்காரனு 
மன உளைச்சலுமில்லை.

பள்ளிக்கூடம் வரப்போகுது
பண்ப நல்லா தரப்போகுது.
பாத்துக்கிட்டே இருங்க...
பட்டணத்த ஆள 
நாள எங்க பயணம் வரும்ங்க.

மு.மகேந்திர பாபு.

புகைப்படம்  - திரு.குணா அமுதன் சார் Guna Amuthan அவர்கள். நன்றிகள் சார்.

Post a Comment

0 Comments