புத்தாண்டு சபதங்கள்.

புத்தாண்டில் புதுசா , பெருசா சபதம் எல்லாம் எடுக்க வேணாம்ங்க.


போகிற போக்கில் , வண்டியில எப்பவும் ஒரு மஞ்சப்பையோ , கட்டைப்பையோ வச்சிக்கோங்க. கூடுமானவரை பாலித்தின் பையைத் தவிர்க்கப் பாருங்க. அஞ்சு ரூவாய்க்கு மல்லி , கருவப்பில வாங்கிட்டு , அண்ணே ! ஒரு கவர் கொடுங்கனு கேக்காம இருந்தாலே போதும்ங்க.

நம்ம பிள்ளைங்க பிறந்த நாளுக்கு , சாக்லேட்டுக்குப் பதிலா கடல மிட்டாய வாங்கிக் கொடுங்க. முடிஞ்சா ஒரு மரக்கன்ற பிள்ளைகள நடவையுங்க. நம்ம பிள்ளைகளும் வளர , மரமும் வளரும் . வீட்லெ இடமில்லைனா வீதியில வைங்க.

மக்குனு எந்தப் பையனும் ஓரங்கட்டாம , அவன நாலுவரி மனப்பாடப் பாட்ட எழுதவச்சி ப்ரேயர்ல அவனப் பாராட்டி , ஒரு பேனா கொடுப்போம்.

பத்து தடவ இதுவரைக்கும் புகைய விட்ருக்கேன். இந்த புத்தாண்டுல இது பதினோராவது தடவயா சபதம் எடுக்கிறேனு சொல்லி , சபதத்தையே சஞ்சலப் படுத்தாம நம்ம உடம்பு நம்ம ஆரோக்யம்னு நெனப்போம்.

காலையில எழுந்து , நடக்கும் போது எதிர் வருபவரிடம் ஒரு புன்னகைப் பூவை உதிர்த்துச் செல்வோம். நட்பை உரமாக்கும்.

கிச்சன் கில்லாடிகளாக இல்லாவிட்டாலும் , நேரம் கிடைக்கும் போது மனைவிக்கும் , குழந்தைகளுக்கும் ஒரு சுவைநீர் போட்டுக் கொடுத்து , சுதந்திரம் கொடுப்போம்.

வாட்சாப்பே வாழ்க்கையென எண்ணாமல் பிள்ளைகளின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிப்போம் .

லைக்கையும் , கமெண்ட்டையும் எதிர்பாராமல் , மனதில் பட்ட நல்ல விசயங்களைப் பதிவு செய்து லைப்பை மகிழ்ச்சிப் படுத்துவோம். 

அப்புறமென்ன ? புத்தாண்டில புத்துணர்வு பொங்கட்டும்.
வாழ்த்துகளுடன் ,

மு.மகேந்திர பாபு.
31 - 12 - 17.


Post a Comment

0 Comments