மு.மகேந்திர பாபு - இயற்கை ஹைக்கூ கவிதைகள்

 


மு.மகேந்திர பாபு , ஹைக்கூ கவிதைகள்.


1 ) செருப்பைக் கழட்டிவிட்டு

உள்ளே நடந்தார் அப்பா.

கோவிலானது வயல்.


2 ) பாகப்பிரிவினை இல்லை 

தொடர்கிறது கூட்டுக்குடும்பம்.

மரங்களில் பறவைகள் .


3 ) மொட்டை மாடி

முளைத்தது முடி

மாடித் தோட்டம்.


4 ) பெருக்கெடுத்து ஓடும் வைகை.

துள்ளிக் குதிக்கும் மீன்கள்.

மகளின் ஓவியம்.


5 ) சிட்டுக்கள் எங்கும் பறக்கின்றன

தினத்தில் மட்டும்.

நாளிதழ்களிலும் முகநூலிலும்.


6 ) ஒலிக்கிறது திரைப்பாடல்.

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு.

இப்போது தட்டுப்பாடு.


7 ) கைநிறையப் பணம்.

ஏங்குகிறது மனம்.

தட்டுப் பாட்டில் குடிநீர்.


8 ) நீண்டு கிடக்கும் நதிகள்

மாண்டு கிடக்கின்றன.

இல்லை நீரின் ஓட்டம்.


9 ) தண்ணீர் தேவைக்கு அணுகவும் .

இயற்கையை அழித்த மனிதா !

அழைக்கின்றன வேற்றுக் கிரகங்கள்.


10 ) ஒவ்வொரு பூக்களாகச் சென்று

வகுப்பெடுக்கிறது வண்ணத்துப் பூச்சி.

தேனே கட்டணம்.


11 ) மகிழ்ச்சியில் மரம்.

புதிதாய்ப் பிறந்திருக்கின்றன

கூட்டில் பறவைக் குஞ்சுகள்.


12 ) பயணம் பேசி மகிழ்கின்றன

கூடடைந்த பறவைகள்.

தங்கள் மொழியில் சத்தமாக.


13 ) வெட்டாதீர்கள் எங்களை !

வருத்தத்தை வெளிப்படுத்தின மரங்கள்.

உதிரும் இலைகள்.


14 ) புத்தனின் எதிர்ப்பை மீறி

வெட்டப் பட்டுக்கிடந்தது

போதி மரம்.


15 ) முயற்சியே முதல் வெற்றி.

மண்முட்டி முளைத்து வருகிறது

வயலில் விதை.


16 ) வறண்டு கிடக்கும் நதி.

தின்று கொண்டிருக்கிறது 

மதிய வெயில்.


17 ) ஆசிரியரின் அதட்டல் இல்லை.

வரிசையாகப் பறக்கின்றன

வானில் பறவைகள் .


18 ) வெட்டப் பட்டன மரங்கள்.

இறந்து போனது 

பருவ மழை.


19 ) பின் தொடரவில்லை யாரும்.

பாதை போட்டுச் செல்கிறது

பயணத்தில் நத்தை.


20 ) விசா இல்லை.

உலகைச் சுற்றுகின்றன

வலசைப் பறவைகள்.


21 ) அந்தரத்தில் கருப்புத் தேனடை.

கல்லெறிந்தவர் யார் ?

கொட்டுகிறது அடைமழை.


22 ) குருவியின் தாகம்.

கலைந்தது தெளிந்த வானம்.

குளத்து நீர்.


23 ) மண்ணைத் தொட்ட பின்பு

மழையில் நனைந்தது

முதல் மழை.


24 ) இறந்த பின்பும் 

எழுந்து நிற்கின்றன

நாற்காலிகளாக மரங்கள்.


25 ) கோடை வெயில்.

குளிக்கும் குருவிகள்.

நீச்சல் குளமானது வாளித்தண்ணீர்.


26 ) சித்திரைத் திருவிழா.

கோடை வெயிலில் பக்தர்கள்.

குளிர்ச்சியில் இளநீர் வியாபாரி.


27 ) வீரர்களைப் பந்தாடிய காளை

கட்டுப்படுத்தியது கட்டுத்தரையில்

சிறிய கயிறு.


28 ) நெல் வயலில் நிறைந்தன.

நிரந்தரக் களைகள்.

அடுக்குமாடி வீடுகள்.


29 ) குனிந்து நிமிர்ந்து நடுகிறோம்.

நிமிரவே இல்லை.

விவசாயிகளின் வாழ்க்கை.


30 ) ஆறறிவு மனிதன்.

ஐந்தறிவு ஒப்பீடு.

சிங்கம் போன்ற நடை.


31 ) மழை பெய்தபின்

மகிழ்ந்து பார்த்து மறைந்தது

வானில் வானவில்.


32 ) இடி , மின்னல்

தகவல் தந்த பின்னரே 

வந்தது பெருமழை.


33 ) இரண்டு மணிநேர மழை

எளிதில் நுழைந்தது

மாடியில் மழைநீர்.


34 ) முகம் சுழித்தது கடல்.

அசுத்தம் சுமந்து வந்தது

ஆறின் உடல்.


35 ) மரத்தில் மலர்ந்த நேயம்.

பறக்க இயலாக் குயிலிற்கு 

இரை ஊட்டியது மைனா.


36 ) பிறந்தது மார்கழி.

விதவிதமாய்ப் பூகுகிறது

வாசலில் கோலம்.


37 ) இயற்கை மழை.

செயற்கைக் குளம்.

குளித்து மகிழ்ந்தனர் சாலையில்.


38 ) இரவின் நிசப்தம் குலைத்தது.

சுற்றிச் சுற்றி வந்த

சுவர்க்கடிகார வினாடி முள் .


39 ) மழைக்காக வேண்டியவன்

மழை வேண்டாம் என்கிறான்.

வயலில் மிதக்கிறது நாற்று.


40 ) நெல் வயலில் பறவைகள்

விரட்ட மனமில்லை.

எத்தனை நாள்கள் காத்திருந்தனவோ ?


41 ) முதுமையில் தனிமை

சோகத்தைச் சுகமாக்கியது.

புதிதாய்க் கட்டிய குருவி.


42 ) மரம் முழுமையும் பூக்கள்.

தடுமாறும் வண்ணத்துப் பூச்சி.

எந்த மலரில் தேனருந்த ?


43 ) மழை பொழிந்த பின்னும்

இலைகள் ஏந்திக் கொண்டன.

நன்றிக் கடனாய்த் துளிகளை.


44 ) சாதனைகள் தொடருது விண்ணில்

வேதனையில் சாகிறான்

விவசாயி மண்ணில்.


45 ) மீனைக் கொத்திய மீன்கொத்தி

தேடி அலைகிறது

அமர்ந்துண்ண கிளையை.


46 ) ஆளில்லா வீட்டில் 

திரிந்த கொசுவிற்கு ஆனந்தம்.

புதியவர் வருகை.


47 ) வருத்தத்தில் வலசைப் பறவைகள்.

வற்றிக் கிடக்கின்றன

நீர் நிலைகள்.


48 ) சொட்டத் தொடங்குகிறது மழை.

வீட்டுக்குள் ஓடும் குழந்தை

அம்மாவின் அதட்டல்.


49 ) கதவிடுக்கில் சிக்கிய பல்லி.

வால் துண்டாகித் துள்ளியது.

வலியில் மனது.


50 ) காலாண்டு விடுமுறை

வயலில் களையெடுத்த நினைவுகள்.

இன்று கட்டடக்கலை.


51 ) கல்லூரிக் கல்வி 

படிக்க வைத்த காடு.

காட்டில் கல்லூரி.


52 ) பகல் இரவு பாகுபாடில்லை.

பறந்து பறந்து பணிசெய்கின்றன

மருத்துவமனைக் கொசுக்கள்.


53 ) வெட்டப்பட்ட மரம் வெதும்பியது.

வளமையின்றி வரும் சந்ததி

மரணிக்கும் என்று.


54 ) கையில் அரிவாளோடு

கோடையை வரவேற்கிறான்

இளநீர் வியாபாரி.


55 ) நேற்றைய மகிழ்ச்சி இன்றில்லை.

வீடிழந்த சோகத்தில் பறவைகள்

வெட்டப்பட்டன மரங்கள்.


56 ) எங்கே கண்மாய் ?

தேடிய பறவைகள் அமர்ந்தன

அடுக்குமாடி வீட்டில்.


57 ) மழை வந்ததும் மின்சாரம் போனது.

ஒவ்வொரு வினைக்கும் உண்டு

உடனே எதிர்வினை.


58 ) ஆண்டுக்கு ஆண்டு 

அதிக விளைச்சல் காடுகளில்.

வீட்டு மனைகள்.


59 ) சாலையில் செல்வது

புகைக்கூடமோ ?

நகரப் பேருந்து .


60 ) வாகனப் பயணம்

வருத்தத்தில் காளைகள்.

வரவேற்கிறது கேரளா.


61 ) தூக்கித் திரியாதே !

சுமையை இறக்கிவிடு.

வானில் கருமேகம்.


62 ) சண்டை சமாதானமில்லை 

கத்தியின்றி இரத்தமாய்

மாலைச் செவ்வானம்.


63 ) மழைக்கால இரவு

வீட்டைச் சுற்றி இசைமழை

தவளைகள்.


64 ) படுத்தே கிடக்கிறது

பிரியாத இரும்பு ஏணி.

இரயில் தண்டவாளம்.


65 ) தாவும் குரங்குகள்.

வீடாகிப்போன காடுகளில்

வீட்டுக்கு வீடு.


66 ) நெடுந்தொலைவு பறந்த பறவை

இறகைச் சிலிப்பியது.

உதிர்ந்தது வானம்.


67 ) பிடிபட்டது மான்

விடுவித்தது சிங்கம்.

வயிற்றில் தாய்மை.


68 ) உடம்பு முழுமையும் சுரண்டல்.

ரேகையாக மாறியது

பூவான தேங்காய்.


69 ) முதிர்ந்த கனி விழுந்தது.

மீண்டும் எழுந்தது.

மண்முட்டும் செடி.


70 ) முத்தமிட்டு வேண்டுகிறது

துளையிட அனுமதிக்க

மரத்திடம் மரங்கொத்தி.


71 ) தலை சாய்ந்தன நெற்கதிர்கள்.

தலை நிமிர்ந்தான் விவசாயி.

வயல் முழுதும் பணம்.


72 ) ஆடிப்பட்டம் தேடி விதை.

விதைத்தான் விவசாயி.

மகிழ்வாய்த் தின்றன எறும்புகள்.


73 ) வருட முடிவு.

உடல் முழுமையும் வற்றியது.

தினசரி நாட்காட்டி.


74 ) நலம் குறைந்தான் மனிதன்.

வளம் குறைந்தது மண்

நாட்டு மாடுகள் இழப்பு.


75 ) விளையாத காடு

வராத பறவைகள்.

வருத்தத்தில் சோளக்காட்டுப் பொம்மை.


76 ) மரங்கள் நிறைந்த வனம்

ஒலிக்கும் கீதம்.

பறவைகளின் அழைப்பொலி.


77 ) பள்ளி விடுமுறை நாள்கள்.

ஏக்கத்தில் காக்கைகள்

வெறுமையில் உணவுக்கூடம்.


78 ) நதிநீர்ப் பங்கீடு

இருமாநில இடர்.

அமைதியாய் ஓடுகிறது நதி.


79 ) விட்டுவிட்டுப் பொழியும் மழை.

மழைநீரைச் சேமிக்கின்றன

கிராமத்துச் சாலைகள்.


80 ) பயணத்தில் பன்னீர் தெளிக்கிறது.

மழை நின்றபின்

வீசும் காற்று.


81 ) கிராமங்களில் உயிருடன்

விளை நிலங்கள்.

கிடைமாடுகள்.








Post a Comment

0 Comments