வில்லுப்பாட்டில் மதுரையின் சிறப்பு

 




வில்லுப்பாட்டு - மதுரையின் சிறப்பு


தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினிலெ பாட - ஆமா 

வில்லினில் பாட 

வந்தருள்வாய் கலைமகளே 

கலை மகளே   !


அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்னிக்கு வில்லிசையில பாக்கப் போறது என்னன்னா 


என்னன்னா 


நம்ம மதுர மாநகரத்தின் பெருமைகளைப் பத்தித்தான்.


மதுரையின் பெருமை ஒன்னா ? ரெண்டா ? எத்தன எத்தன இருக்கு தெரியுமா ?  அதையெல்லாம் சொன்னா நேரம் போதுமா ? 


போதாதே ! 


அதனால ஒரு சில பெருமைகளப் பத்தி மட்டும் சொல்றோம் . கேளுங்க 


( பாடல் )


நாலு பக்கம் மலையாலே சூழ்ந்து நிற்கும்

நாலு பக்கம் கல்விக்கூடம் உயர்ந்து நிற்கும் 

நம்மைப்  போல நட்புக்கூட்டம்

நன்கு கற்கும் !

நாடு போற்றும் நல்லவரா உயர்ந்து நிற்கும் !


ஆமா !  ஆமா ! மலைகளாலும் கலைகளாலும் சூழப்பட்டதுதானே நம்ம மதுர.



மதுரன்னா நம்ம நினைவுக்கு என்னவெல்லாம் நினைவுக்குவரும் ?


மதுரனா சங்கம் வச்சுத் தமிழ் வளர்த்த ஊரு


மதுரன்னா மனம் மயக்கும் மல்லி


மதுரனா - வைகை ஆறு



மதுரனா - மீனாட்சியம்மன் கோவிலு


மதுரன்னா- சித்திரைத் திருவிழா


மதுரனா - தெற்குவாசல் சர்ச்


மதுரனா - கோரிப்பாளையம் மசூதி


மதுரனா -  காந்தி மியூசியம்


மதுரனா - அழகர் மலை , தெப்பக்குளம்


மதுரனா - திருப்பரங்குன்றம் , யானை மலை , நாக மலை , பசுமலை , மகால் 


மதுரனா - கல்விக்கண் திறந்த காமராசர் பெயரில் உள்ள பல்கலைக் கழகம்


மதுரனா - மீனாட்சி கல்லூரி 


மதுரனா - அமெரிக்கன் கல்லூரி 


மதுரனா - தியாகராசர் கல்லூரி , வக்ப்போர்டு கல்லூரி அப்படினு சொல்லிக்கிட்டே போகலாம்.


போகலாம் போகலாம். இதுல ஒன்ன விட்டுட்டோமே ? 


அப்படியா ? அது என்ன ?


மத்தியான வெயிலு மண்டயப் பொளக்கும் போது இதைக்குடிச்சா எப்படி குளிர்ச்சியா இருக்கும் ?


ஓ ! ஆமா ஆமா ! மதுர ஜிகர்தண்டா 


( பாடல் )


தமிழகத்தின் பெருமையே நம்ம மதுர தான்டா !

தலையைச் சுத்தும் வெயிலுக்கு இதமான ஜிகருதண்டா !

இதுபோல குளிர்பானம் எங்கும் உண்டா ?

சொல்லுங்கய்யா உங்க ஊர்ல நீங்க கண்டா !


ஆமா ! ஆமா ! மதுரையின் மகத்தான அடையாளங்களில் ஒன்னு நம்ம ஜிகர்தண்டா ! இது மத்த ஊர்ல கிடையாதே !


ஆமா ! இப்படி மதுரயின் பெருமைகள் எத்தனையோ இருக்குதுங்க.


சங்கம் வச்சுத் தமிழ் வளர்த்த நம்ம மதுரயில மாபெரும் உலகத் தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்கு. அதன் முகப்புல வான்புகழ் வள்ளுவன் சிலையும் இருக்கு. அதுமட்டுமில்ல. நம்ம கீழடி அகழாய்வுப் பொருள்கள் எல்லாம் காட்சிக்கூடமாகவும் இங்க இருக்கு.


ஓ ! அப்படியா ? அருமை அருமை.


அது பக்கத்தில இருக்கற அரண்மனையையும் சொல்லனும் .


அப்படியா ? அது என்ன அரண்மனை ?


அதுவா ? நம்ம தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின்  பெயரைத் தாங்கி இருக்குதே !


ஓ ! நம்ம காந்தி மியுசியமா? 


ஆமா ! இப்ப காந்தி நினைவு அருங்காட்சியகமா இருக்குற இந்த கட்டடம்தான் நம்ம இராணி மங்கம்மா இருந்த கட்டிடடம். 300 வருசம் தாண்டியும் இன்றும் நம்ம மதுரயின் பெருமையைச் சொல்லுது.


ஓ அப்படியா ? 


ஆமா ! இங்கதான் இராணி மங்கம்மா யானைச்சண்டைய அமர்ந்து பாப்பாங்களாம். 


ஓ! அப்படியா ? அருமை அருமை.


நம்ம தேசத்தந்தை மகாத்மா அவர்கள் மதுரக்கு வரும் முன்ன எப்படி இருந்தார் தெரியுமா ?


எப்படி இருந்தார் ?


கோட் , சூட் போட்டு இருந்தார்.

மதுரக்கி ரயில்ல வரும்போதுதான் நம்ம விவசாய மக்களைப் பாத்து , இனிமே நானும் அரையாடைதான் உடுத்துவேன் எனச்சொல்லி அரையாடைதான் கடைசிவரை உடுத்துனார்.


அப்படியா ? 


ஆமா ! ( பாடல் )

கோட்டு சூட்டுப் போட்ட வந்த கோமானையும்

ஒரு குடிமகனா மாத்தியது  நம்ம மதுர !

அகிம்சை என்ற அன்பின் ஆயுதத்தை

அடக்குமுறை என்ற வன்மத்தை அடக்கியதும் அண்ணல் காந்திதானே !


ஓ ! மதுரைக்கு எவ்வளவு பெரிய சிறப்பு ?


அது மட்டுமல்ல , நம்ம மதுரயிலதான் வான் புகழ் வள்ளுவரின் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டதுனும் சொல்வாங்க. 


அடேயப்பா ! உண்மையிலேயே பெருமைமிக்க ஊருதான் நம்ம மதுரை. 


அது மட்டுமல்ல. இராத்திரி 12 மணிக்கு வந்தாலும் சுடச்சுட சாப்பாடு கிடைப்பதும் நம்ம ஊர்லதான். மல்லிகைப்பூ மணத்தப்போலதான் நம்ம மதுரக்காரங்க மனசும். 


அவ்வளவு நல்லவங்க. 


இன்னும் எவ்வளவோ அருமையும் பெருமையும் இருக்கு. சொன்னா சொல்லிக்கிட்டே போகலாம். அதனால நம்ம மதுரயின் பெருமையை இத்தோட நிறுத்திக்குவமா ?


சரி சரி ! நண்பர்களே ! மண்மணக்கும் மதுரயைப் பத்தி நாங்க கொஞ்சம்தான் சொன்னோம். இன்னும் எவ்வளவோ பெருமை இருக்கு. அத இன்னொருநாள்ல சொல்றோம்.


தந்தனத்தோம் என்று சொல்லியே ! ( பாடல் )

வில்லினில் பாடினோம்  !

மண்மணக்கும் மதுரையை - நல்ல 

மனம் நிறைந்த மதுரையை

சொல்லினில் பாடினோம் !

பாசத்திலும் பண்பாட்டிலும் 

எங்க  மதுர  - இது

பாண்டியரின் பேர் சொல்லும் தங்க மதுர !

மலை போல உயர்ந்து நிற்கும் நம்ம மதுர !

மனதார பாடினோமே உங்க உள்ளம் குளிர !


வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.



Post a Comment

0 Comments