நாடோடி வாழ்க்கை
-------------------------
ஒளிப்படம் நண்பர் , திரு. Franklin Kumar.
எங்கள் வயல்கள்
வளமையாக இருந்தபோது,
செங்கல் சுமக்கும்
சோகம் வரவில்லை.
சிறு துளி கண்ணீரும்
அவை தரவில்லை.
மண்ணை
அன்னையாய் மதித்தோம் முன்பு.
செங்கல் சூளை வந்தபின்பு
காலில் போட்டு மிதித்தோம்.
தண்ணீர் ஊற்றி
குழைக்கிறோம்.
கால நேரம் பாராது
உழைக்கிறோம்.
வேலைக்குப் போகிறோம்
அரக்கப் பறக்க ஓடோடி.
ஆயினும் எங்கள்
வாழ்க்கை நாடோடி.
ஒட்டிப் போய்
கிடக்குதையா வயிறு.
உருக்குலைஞ்சு
நடக்குதையா உயிரு.
வெயிலும் மழையும்
எங்களுக்கு ஒன்னுதான்.
நாள் முழுதும்
வேலையோ நின்னுதான்.
செக்கச் செவேர்
வெந்திருக்கு கல்லு.
எங்க ரத்தம்தான்
கலந்திருக்குனு சொல்லு.
அந்தரத்தில் கைக்கு கை
மாறுது கல்லு.
முதுமையில எங்க
உடம்பு வில்லு.
நாங்க அறுத்த கல்லுல
ஒசந்து நிக்குது ஒங்க வீடு.
எங்க வாழ்க்கையோ
வறண்டுபோன பொட்டல்காடு.
மாறுமா இந்த நில ?
வந்து ஊத்துமா
அட மழ ?
மு.மகேந்திர பாபு.
0 Comments