நண்பர்கள் தினம்

 


சேக்காளிகள் ( நண்பர்கள் ) தினம்

---------------====--------------------


காதறுந்த மஞ்சள் பையில் சிலேட்டையும் , புத்தகத்தையும் தோளில் போட்டு , நண்பன் கைப்பிடித்துச் சென்றதொரு காலம்.


ஒன்னுக்கா மணிக்கு வீட்டிற்கு  ஓடிச்சென்று , பருத்தியை டவுசர் பைக்குள் தினித்து , கடையில் டபுள் எடைக்குப் போட்டு அவித்த பலாக் கொட்டை வாங்கிச்  சேக்காளிகளோடு தின்று மகிழ்ந்ததொரு காலம்.


சவ்வு மிட்டாயை நூலாக்கி ,  அதிக நீளமாக்கி , பின் அதை உருட்டி கைக்கடிகாரமாக்கி , நண்பனோடு பாதிபாதியாய்த் தின்றதொரு காலம்.


சாப்பாட்டு மணி நேரத்தில் வாத்தியார் சாப்பிட்டுக் குட்டித் தூக்கம் போட, பக்கத்திலுள்ள பிஞ்சையில் பாசிப்பித்தான் காய் பிடுங்கி அகப்பட்டு , வாத்தியார் முன் பாவமாய் நின்றதொரு காலம்.


லீவு நாட்களில் நண்பர்களோடு தேன்தட்டு எடுக்க , வேலிப்புதருக்குள் செல்ல , கண்ணாம் பட்டையில் தேனீ கொட்ட , கண்ணே தெரியாமல் வீங்கிக் கிடந்ததொரு காலம்.


கள்ளிப் பழம் பிடுங்கி , தரையில் போட்டு தேய்த்து , நட்சத்திர முள்ளை எடுத்துவிட்டு , நாக்கைக் காளியாத்தா போல் நீட்டி , யாருக்கு அதிகம் சிவந்திருக்கு எனப் போட்டி போட்ட காலம்.


நண்பர்களோடு வாடகைச் சைக்கிள் எடுத்து, குரங்குப் பெடல் போட்டு வெயில் , மழை பாராதுஓட்டிய காலம்.


கண்மாயில் நண்பர்களோடு முங்கு நீச்சல் , நிலா நீச்சல் , எம்.ஜி.ஆர் நீச்சல் , சாதா நீச்சல் என சந்தோசமாய் அடித்து மகிழ்ந்த காலம்.


பள்ளி விட்டுப் பிரிகையில் , நண்பர்களின் ஏதோவொரு நோட்டில் கவிதையெழுதி கையெழுத்திட்டு , முகவரி எழுதி ,ஊரிலிருந்த ஒரே ஒரு போன் நம்பரையும் கொடுத்து போன் பண்ணுடா எனச்சொல்லி கண்ணீரோடு விடை பெற்றதொரு காலம்.


ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அரட்டை அடித்து , வாழ்வின்  நெளிவு சுழிவுகளை அறிந்து தன்னைத் தயார் படுத்திக் கொண்ட காலம்.


நட்புக் காலத்தைத் திரும்பிப் பார்க்கையில் அதன் முடிவெல்லை கண்ணுக்குத் தெரியவில்லை.நீண்டு கொண்டே செல்கிறது.


நட்பை ஒரு தினத்திற்குள் அடக்க முடியாது.தினம் தினம் நண்பர்கள் தினம்தானே ?!


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments