கறிச்சோறு
யார்ரா இவன் கூறு கெட்ட பய ? கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடா ? சாப்புடும் போது இப்டியாடா அடிக்கடி தண்ணிய குடிக்கிறது ? இப்பவே ஏழாட்டி குடிச்சிட்ட. பிறகு எப்படிடா கறிச்சோற திம்ப ? அப்பாவப் பாத்தியா , தண்ணி குடிக்கிறேனா ? சும்மா அவக்கு அவக்குனு அள்ளிப் போடனும்டா சோற...
தன் மகனுக்கு புத்தி சொன்னார் பொன்னையா.
ஏ ... சின்னையா , பள்ளிக்கொடத்துப் பயலப் போயி பயங்காட்டிக்கிட்டு இருக்க.ஆட்டுக்கறி நமக்கே உரைக்குதே ! அதான் தண்ணிய குடிக்கிறான் .இதுக்குப் போயி ...
எலேய் ... பேசாம சாப்புடுறா. சும்மா நசநசனுக்கிட்டு ...
வாடா தம்பி. எப்ப வந்த ? மதுரயிலதான் இருக்கியா ?
ஆமா சித்தப்பா.
சாப்புடுப்பா.
நீங்கலாம் சாப்புட்டபிறகு , இருந்தா சாப்புடுவம்பா.
அட கோட்டிக்காரப் பயல.அங்ன போயிப் பாரு. ஒலப்பாய விரிச்சு சோறு மழ மாதிரி குமிச்சு இருக்கறத.நம்ம ஊர்த்திருவிழாவுல எத்தன கெடா வெட்டி சோறு போடுறோம். இல்லாமப் போகுமா சோறு ?
நாஞ்சும்மா சொன்னே சித்தப்பா. சாப்புடுறேன்.
எலே ... வாளில என்னடா ?
உனக்கு என்ன வேணும் ?
எலும்ப போடுடா.
அப்படிக் கேளு.போடுறேன்.
கூட்டத்தில அப்டி கேக்கப்புடாதுடா. நாள பின்ன எலும்பெல்லாம் நானே தின்னேனு சொல்றதுக்கா ? சரி சரி , கொஞ்சம் அரிச்சுப் போடுறா.
போதுமா ?
இப்ப போதும்.பிறகு கூப்டுதேன் வா.
ஏப்பா ... இதென்னா வயிறா ? கம்மா விருவுக்குள்ள தண்ணி போற மாதிரி போய்க்கிட்டே இருக்கு.
தம்பி கண்ணு வைக்காதே ! பெறகு ஓன் தடத்து மண்ணத்தான் சுத்திப் போடணும்.கேள்வி கேட்டவனை மடக்கினான் பொன்னையா.
ஒரு எலும்பெடுத்து , இலையில் ஒரு தட்டு தட்டி வாயில் வச்சு , தம்பிடிச்சு உள்ளிழுத்து , இப்டித்தான்டா எலும்ப உறியணும்னு மகனுக்கு சொன்னான்.
மகன் தலயாட்டிக் கொண்டிருந்தான் பலியாடாக.
எலும்புகளை உறிஞ்சு ஓரங்கட்டிவிட்டு , எலே மாப்ள அந்த வாளில என்னடா என்றான் பொன்னையா.
மு.மகேந்திர பாபு.
0 Comments