ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 5
சிறுவினா - வினாக்களும் விடைகளும்
1.' சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் : ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார், வெண்ணிக் குயத்தியார், நக்கண்ணையார், மாறோக்கத்து நப்பசலையார், பொன்முடியார், பெருங்கோப்பெண்டு ஆகியோராவர்.
2. 'இன்றைய பெண்கல்வி' என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.
இன்றைய பெண் கல்வி
குழுத்தலைவர் : தந்தனத்தோம் என்று சொல்லியே, வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே!
குழுவினர் : ஆமாம்; வில்லினில் பாட...
குழுத்தலைவர் : இன்றைய பெண்கள், புதுமைப் பெண்களாக புரட்சிப் பெண்களாக, விண்வெளியின் வீராங்கனைகளாக நாளும் வளர்ந்து வலம் வருகிறார்கள்.
குழுவினர் : ஆமாம் நாளும் வளர்ந்து வலம் வருகிறார்கள்.
குழுத்தலைவர் : பெண்கள், ஆண்களைவிட நல்லாப் படிக்கிறாங்க! பட்டம் பதவி எல்லாம் பெறுகிறாங்க!
குழுவினர் : இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க அண்ணே!
குழுத்தலைவர் ! அறிவியல் துறையில் அறிஞர்களாக, ஆட்சித் துறையில் தலைவர்களாக, தொழில் துறையில் வல்லுநர்களாக, சட்டத்துறையில் மேதைகளாக, மண்ணகத்திலிருந்து விண்ணகம்வரை சகல துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார்கள்.
குழுவினர் : ஆமாம்; சாதனை புரிந்து வருகிறார்கள்!
3. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
* முத்துலெட்சுமி அம்மையார், தமிழகத்தில் டாக்டருக்குப் படித்த முதல் பெண்மணி ஆவார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணை மேயர்; சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
* இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
* தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
* இவர், 1930இல் அடையாற்றில் ஔவை இல்லம் தொடங்கினார். 1952இல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார். இவர்தம் சாதனைகளுக்காகப் பத்மவிபூஷண் விருது பெற்றவர்.
4 ) நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப்பணியின் சிறப்பை விளக்குக.
நீலாம்பிகை அம்மையார், 1903ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் மறைமலை அடிகளாருக்கும், சவுந்தரவல்லி அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தவர். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர். பல்லாவரம், 'வித்யோதயா மகளிர் கல்லூரியிலும், இராயபுரம் ‘நார்த்விக்' மகளிர் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
* தனித்தமிழ் பற்றிய கட்டுரைகள் எழுதியதோடு, சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல்-தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாடிய மூவர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 1942இல் சைவ மாதர் கழகம் தொடங்கித் தொண்டுகள் செய்து வந்தார். தமிழ்மொழி வளர்ச்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டவர்.
1 Comments
Nonsense
ReplyDelete