உலக நீரிழிவு நோய் தினம் - WORLD DIABETES DAY - 14 : 11 : 2021


                உலக நீரிழிவு நோய் தினம்

                      ( WORLD  DIABETES  DAY )

                                 14 • 11 • 2021


மனித குல ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பல நோய்களில், உலகை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் நோய் நீரிழிவு . இது ஒரு நீடித்த நோயாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த நோய் அறியப்பட்டாலும் , அதற்கான உறுதியான சிகிச்சை முறை 20- ஆம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டது. அதாவது 20 - ம் நூற்றாண்டில்தான் இன்சுலின் கண்டறியப் பட்டது. இன்சுலினை கண்டுபிடித்த " பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் " என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14 -ம் நாள் " உலக நீரிழிவு நோய் " தினமான  1991- ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி கொண்டாடி வருகிறது.


நீரிழிவு என்பதன் விளக்கம் :


நீரிழிவு என்பது ஒரு நீட்டிக்கப்பட்ட நோய்.ஒருவரது உடல் போதுமான கணைய நீரை ( இன்சுலின் ) உற்பத்தி செய்ய முடியாமை அல்லது அவரது உடல் கணைய நீருக்குத் தகுந்த முறையில் பதில்வினை ஆற்ற முடியாமை  ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.இந்நீர் கணையத்தில் உற்பத்திசெய்யப் படுகிறது. இன்சுலின் சர்க்கரையை  உடல் செல்கள் பயன்படுத்தி ஆற்றல் உண்டாக்கத் துணைபுரிகிறது. நீரிழிவு என்பது தனிப்பட்ட நோயல்ல, இது வாழ்வியல் மாற்றம் காரணமாக ஏற்படும் குறைபாடு ஆகும்.உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த  கணையம் இன்சுலினைச் சுரக்கும். இந்தச் சுரப்பியின் அளவில் உண்டாகும் குறைபாடே நீரிழிவு நோய் என அழைக்கப்படுகின்றன. இன்சுலின் சுரப்பில் ஏற்படும்  மாறுபாடு , உடலில் பலநோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

இன்சுலின் :

இன்சுலின் என்ற மிக முக்கியமான ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் இந்தியாதான் நீரிழிவுநோயிலமுதல் இடத்தில் உள்ளது. பொதுவாக நீரிழிவு நோய் என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது ,அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒன்று. பெற்றோர் நோய் பாதிப்படைந்திருந்தால் 80 % பிள்ளைகளுக்கும் நோய் வரும் அபாயம் உள்ளதாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டிலும் நீரிழிவு நோயாளிகள் விகிதம் அதிகமாக உள்ளது.

உலக  சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி , உலக அளவில் 450 - மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதே போல் நீரிழிவு நோய்க் காரணமாக இறப்பு விகிதமும் மில்லியன் கணக்கில் இருந்து வருகிறது. நோய்க்கான தடுப்பு முறைகளை ஊக்குவித்து,சிகிச்சை முறை‌களை வலுப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம் .


நீரிழிவு நோய் பாதிப்பு:

நீரிழிவுக்கு  தகுந்த முறையில் சிகிச்சை எடுக்காவிட்டால், விழித்திரை நோய் , இதயக்குழல் நோய் , கர்ப்பச் சிக்கல்கள், நீரிழிவுப் பாதம் , பற்சுற்றுத்திசு அழற்சி , சிறுநீரக நோய் நரம்பு மண்டல நோய்  மற்றும் அகால மரணம் போன்றவை உண்டாகும்.


நீரிழிவைத் தடுக்கும் முறைகள் :


நீரிழிவு நோயைத் தடுக்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றி நீரிழிவை தடுத்து தற்காத்துக் கொள்ளலாம். அவை...

* ஆரோக்கியமான  உணவை உண்ணுதல்.

* புகை மற்றும் மது போன்ற போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்தல். 

* ஆரோக்கியமான  உடல் எடையை பராமரித்தல்.

* நீரிழிவு நோய்க்கான முறையான பரிசோதனையை மேற்கொள்ளுதல். 

* மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை தொடர்ந்து உட்கொள்ளுதல்  போன்ற வற்றைப் பயன்படுத்தி நோயின் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

பெண்களை பாதிக்கும் நீரிழிவு நோய் :

தற்காலத்தில்  பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

    அதன் காரணங்கள்:

                     கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு உடல் எடை அதிகரித்து இருப்பதாலும் ,கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், அவர்களுக்கு கூடுதல் இன்சுலின் தேவைப்படுகின்றது . அதன் காரணமாக  இரத்தத்திலுள்ள  குளுக்கோசின் அளவு அதிகரித்து  இது நீரிழிவு நோயாக மாறுகிறது.சிலருக்கு பிரசவத்திற்குப் பின்பு நீரிழிவு நோய் குணமடைய  வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கொடிய நோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்க, பூப்பெய்தும் காலம் முதலே முறையான மற்றும் சரியான உணவுப் பழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கடைபிடித்து நீரிழிவு நோயை வருமுன் காப்போம்.

நீரிழிவு நோய்க்கான அடையாள  சினம் :

நீரிழிவு நோய்க்கான அடையாளச் சின்னம் அமைத்து அவற்றில் விழிப்பை ஏற்படுத்துகின்றனர். ஐக்கிய நாட்டுச் சபை  நீல நிற த்திலான வளையத்தை அடையாளச் சின்னமாக வெளியிட்டு  இந்த  நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றது. இந்த நோய் வயது , இனம் பேதம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இப்பிரச்சாரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், உலக நீரிழிவு நோய் அமைப்புன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பைத் தருகிறது.வானொலி , தொலைக்காட்சி  போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கின்றன. 

இக்கொடிய நீரிழிவு நோயை வருமுன் காப்பதே சிறந்தது.நீரிழிவை குணப்படுத்த முடியாது ; கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்பதை அறிந்து வரும்முன்னும் , வந்தபின்னும்  தக்க மருத்துவ சிகிச்சையையும், தடுப்பு முறைகளையும்  பின்பற்றி நீரிழிவு நோயை வென்று , ஆரோக்கிய உலகை படைத்து மகிழ அனைவரும்  ஒத்துழைப்போம்.! நோய்களற்ற உலகை படைப்போம்.!

Post a Comment

0 Comments