12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 5 - திணை
மதிப்பீடு - வினாக்களும் விடைகளும்
5 திணை
கற்றல் விளைவுகள்
* திணை என்றால் என்ன என்பதை அறிதல்.
* உச்சரிப்பு முறைகளை அறிந்து பொருள் உணர்தல்.
* வாழ்வியலில் ஒழுக்க நெறி முறைகளைப் பற்றி அறியச் செய்தல்
* அகப்பொருள், புறப்பொருள் பற்றிய திணைகளை அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களே ! திணை என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ஒரு வகை தானியம் என்பீர்கள். ஆனால் நான் குறிப்பிடுவது 'ற' னகரத்தில் உள்ள தினைப்பற்றி அல்ல, 'ட' ணகரத்தில் உள்ள திணை பற்றிக் கூறுகிறேன் என மாணவர்களுடன் கலந்துரையாடி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும்.
திணையைச் சொல் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம், இதனைக் கீழ் வகுப்பில் படித்து இருப்பீர்கள். அவை உயர்திணை, அஃறிணை.
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
(நன்னூல் -261)
திணை பொருள் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம்
* அகத்திணை (வாழ்வியல்)
* புறத்திணை (உலகியல்)
அகத்திணை ( வாழ்வியல்):
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை 6. கைக்கிளை 7. பெருந்திணை
புறத்திணை (உலகியல்):
11. வெட்சி 2. கரந்தை 3. வஞ்சி 4. காஞ்சி 5. நொச்சி 6. உழிஞை7. தும்பை8. வாகை 9. பாடாண் 10. பொதுவியல் 11. கைக்கிளை 12. பெருந்திணை
* தொல்காப்பியம் குறிப்பிடும் திணைகள் -7
* புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள் - 12
* புறநானூற்றில் பாடப்பட்டுள்ள புறத்திணைகள் - 11 (உழிஞை நீங்கலாக)
செயல்பாடு:2
குறிப்பிட்ட சில திணைகளை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.
பொதுவியல் திணை
திணைவிளக்கம்: வெட்சிமுதல்பாடாண்வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் கூறுவது.
சான்று
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்"
(புறம் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி)
சான்று விளக்கம்
தமக்காக உழைக்காமல் பிறர்க்காக உழைப்பவர் அமிழ்தமே கிடைத்தாலும் தனித்து உண்ணாமலும், யாரையும் வெறுக்காமலும், சோம்பல் இன்றியும் அஞ்சுவதற்கு அஞ்சுவர், புகழ் வரும்
எனில் உயிரையும் கொடுப்பர். உலகம் முழுவதும் கிடைத்தாலும் பழிவரும் செயல்களைச் செய்யார். எனவே தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
திணை பொருத்தம்
பிறர் நலத்தைத் தன்னலமாகக் கருதும் பொதுவான செய்தியைக் கூறுவதால் இது பொதுவியல் திணை ஆகும்.
செயல்பாடு: 3
பாடாண் திணை
திணை விளக்கம்
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணை.
சான்று
"வாயி லோயே! வாயி லோயே!
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே"
(புறம் - ஔவையார்)
சான்று விளக்கம்
வாயில் காவலனே ! புலவர்களாகிய நாங்கள் வள்ளல்களை அணுகி அறிவார்ந்த சொற்களை விதைத்துத் தான் எண்ணியதை முடிக்கும் வலிமை உடையவர்கள். அதியமான் தன் தகுதி அறியானோ? இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து விடவில்லை. தச்சனின் பிள்ளைக்குக்
காட்டில் ஒரு மரம் கூடவா கிடைக்காமல் போகும். கலைத் தொழில்வல்ல எங்களுக்கும் எத்திசைகளில் சென்றாலும் தவறாமல் உணவு கிட்டும்.
திணை பொருத்தம்
இதில் அதியமானின் அறிவார்ந்த சொற்களும், எண்ணியதை முடிக்கும் வலிமையும், வள்ளல்களின் சிறப்பை அறிந்து கொடையளிக்கும் தன்மையும் கூறப்பட்டதால் இப்பாடல் பாடாண் திணையைச் சார்ந்ததாகும்.
மாணவர் செயல்பாடு
தனி மாணவர் செயல்பாடு
தினை - திணை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினைக் கரும்பலகையில் எழுதி விளக்குதல்
குழுச்செயல்பாடு
மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தல்.
முதல் குழு அகத்திணைகள் பற்றியும் இரண்டாவது குழு புறத்திணைகள் பற்றியும் கேட்டறிதல்.
(இரு குழுக்களும் மாறி மாறி கேட்டல்)
*************** *********** ***********
மதிப்பீடு
1. திணை என்றால் என்ன? அவற்றின் வகைகள் ?
திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும்.
திணையைச் சொல் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம், இதனைக் கீழ் வகுப்பில் படித்து இருப்பீர்கள். அவை உயர்திணை, அஃறிணை.
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
(நன்னூல் -261)
திணை பொருள் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம்
* அகத்திணை (வாழ்வியல்)
* புறத்திணை (உலகியல்)
அகத்திணை ( வாழ்வியல்):
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல் 5. பாலை 6. கைக்கிளை 7. பெருந்திணை
புறத்திணை (உலகியல்):
11. வெட்சி 2. கரந்தை 3. வஞ்சி 4. காஞ்சி 5. நொச்சி 6. உழிஞை7. தும்பை8. வாகை 9. பாடாண் 10. பொதுவியல் 11. கைக்கிளை 12. பெருந்திணை
* தொல்காப்பியம் குறிப்பிடும் திணைகள் -7
* புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள் - 12
* புறநானூற்றில் பாடப்பட்டுள்ள புறத்திணைகள் - 11 (உழிஞை நீங்கலாக)
2. தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?
தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் 7.
அவை ,
1 ) வெட்சி
2 ) வஞ்சி
3 ) உழிஞை
4 ) தும்பை
5 ) வாகை
6 ) காஞ்சி
7 ) பாடாண்
3. புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?
புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் 11.
அவை ,
1 ) வெட்சி
2 ) கரந்தை
3 ) வஞ்சி
4 ) காஞ்சி
5 ) நொச்சி
6 ) தும்பை
7 ) வாகை
8 ) பாடாண்
9 ) பொதுவியல்
10 ) கைக்கிளை
11 ) பெருந்திணை
************** ************** ***********
0 Comments