7 - தமிழ் - இயல் 1 - உரைநடை - பேச்சுமொழியும் எழுத்து மொழியும் - பகுதி 2 / 7 TAMIL - TERM - 1 , EYAL 1 -PECHUMOZHIUM EZHUTHU MOZHIUM - PART - 2

 

           வகுப்பு - 7 , தமிழ்  - இயல் 1 

                     உரைநடை  உலகம் 

     பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 

                              பகுதி - 2

***************    *************    ***********

                   வணக்கம் நண்பர்களே !  நாம் ஏழாம் வகுப்பு தமிழ் இயல் ஒன்றில் உரைநடை உலகம் பகுதியில் பேச்சுமொழியும் எழுத்துமொழியும் பகுதி 1 முன்பு கண்டோம். அதன் தொடர்ச்சியை இன்றைய வகுப்பில் நாம் காண்போம்.

                  நம்முடைய பெரும்புலவர் .திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தை முதலில் காண்போம்.



காட்சிப் பதிவினைக் கண்டீர்களா ? மிகவும் எளிமையாகப் புரிந்ததா ? இப்போது பாடக்  கருத்துகளைக் காண்போம்.

எழுத்துமொழி 

                           பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால்தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது. எழுத்துமொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை. ஆனால் வரிவடிவம் மாறுபடும். எடுத்துக்காட்டாக முற்காலத்தில் அண்ணா, காலை என்று எழுதியவற்றை இக்காலத்தில் அண்ணா, காலை என்று எழுதுகிறோம்.

பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

         பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்துமொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர். பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும். எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக 'நல்லாச் சாப்ட்டான்' என்பது பேச்சு மொழி. 'நன்றாகச் சாப்பிட்டான்' என்பது  எழுத்துமொழி.

              பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்துமொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு. 'உம்', 'வந்து' போன்றவற்றைச் சொற்களுக்கு இடையே பொருளின்றிப் பேசுவது உண்டு. ஆனால் எழுத்து முறையில் இவை இடம் பெறுவதில்லை.

                   பேச்சு மொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இணைவதால் அஃது எழுத்துமொழியை விட எளிமையாகக் கருத்தை உணர்த்துகிறது. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்து மொழியில் இடமில்லை.

               எழுத்து மொழி  சிந்தித்து
எழுதப்படுவதாலும் பிழைகள் ஏற்பட்டால்
திருத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாலும்
திருத்தமான மொழிநடையில் அமைகிறது.
ஆனால் பேச்சு மொழியில் சிந்திப்பதற்கான
நேரம் குறைவு; திருத்திக்கொள்ள வாய்ப்பும்
இல்லை. எனவே பேச்சுமொழி திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை.


               பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து மாற்றமடைந்து
வருகிறது. எழுத்துமொழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும் பேச்சுமொழியில்
பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. ஆனால் எழுத்துமொழியில்
பெரும்பாலும் மொழித்தூய்மை பேணப்படுகிறது.


        பேச்சு மொழியில் எழுத்துகளை மாற்றி ஒலிப்பதும் உண்டு. 'இ' என்பதை 'எ' என்றும்
'உ' என்பதை 'ஓ' என்றும் மாற்றி ஒலிப்பர். எடுத்துக்காட்டாக 'இலை' என்பதை 'எல' என்றும் ' உலகம்' என்பதை 'ஒலகம்' என்றும் ஒலிப்பர். இம்மாறுபாடுகள் எழுத்து மொழியில் இல்லை.

           ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழியும் காலம் கடந்து வாழ்வதற்கு
எழுத்துமொழியும் தேவைப்படுகின்றன. இவ்விரு வடிவங்களையும் சரியாக அறிந்து
கொண்டால் மொழியின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

                        தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர். மேடைப்பேச்சிலும், வானொலி,  தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் எழுத்துமொழியாகிய இலக்கியத்தமிழே  பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில்  அந்நிலை பெரும்பாலும் மாறிவிட்டது;
பேச்சுத்தமிழ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

                      நாளேடுகள் மற்றும் பருவ இதழ்களில் இன்றும் எழுத்துத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேச்சுத்தமிழில் காலந்தோறும்
ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தவிர்க்க
இயலாது. ஆனால் ஊடகங்களிலும்
இலக்கியங்களிலும் திருத்தமான தமிழையே
பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்
தாய்மொழியைச் சிதையாமல் காக்க முடியும்.

**************    *****************   ***********

Post a Comment

0 Comments