திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம் - 25 . 08 . 2021 / வாரியார் சொன்ன நகைச்சுவைக் கதைகள்

 

     வாரியார் சுவாமிகள் பிறந்த தினம் 

                     25 : 08 : 2021 

வாரியார் சுவாமிகள் சொன்ன கதைகள் 



அந்த ஊரில் செய்தாற்போல்.

               ஓர் அறிவாளியான ஆளு. ரொம்ப சாதுர்யமான மனுசன். ராத்திரி எட்டு மணிக்கு ஒரு வீட்டுத் திண்ணையிலே போய் உட்கார்ந்தான்.

வீட்டுக்காரர் வெளியே வந்தார். 

" யாரையா நீர் ? " 

" வெளியூர்க்காரன் , கொஞ்சம் சாப்பாடு ".

" சாப்பாடு கீப்பாடு எதுவும் இலலே. எழுந்து போ "

    இவன் கெஞ்சி கெஞ்சிப் பாத்தான். கேட்கல. " சரி , சரி." கொஞ்சம் சத்தம் போட்டுத் திண்ணையில் துண்டை விரிச்சிப் போட்டான்.  பிறகு , " அந்த ஊர்லே செய்தாப்பல செஞ்சாத்தான் இந்த ஆளுக்குத் தெரியும் . அந்த ஊர்ல செஞ்சாப்பல செய்யணும் " என்றான்.

வீட்டுக்காரம்மா பயந்துட்டா.

   மந்திரக்காரனோ சூனியக்காரனோ, என்னபண்ணுவானோ, ஏது பண்ணுவானோ? "என்னங்க இங்க வாங்க. அந்த மனுஷனைப் பகைச்சுக்காதீங்க" என்று சொல்லிவிட்டு அந்த மனிதனை அழைக்கிறா.

“ஐயா, உள்ளே வாங்க.”

இவன் பிகு பண்ற மாதிரி, “அந்த ஊர்ல பண்றாப்ல பண்ணனும். அப்பத்தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்” என்று கூறிக் கொண்டிருந்தான்.

    இரவு நேரம் சாப்பாடு போட்டா மனுஷன் சமாதானம் ஆயிடுவான் என்று எண்ணினர். "ஐயா கோவிச்சிக்காதீங்க. சாப்பிடறீங்களா?

“ஹூம்”

இலையைப் போட்டு சாப்பாடு போட்டனர்.

“சாப்பாடா. சரி போடுங்க. ஆனா, அன்னசுத்தி வரலையே. (அன்னசுத்தி என்பது நெய்) இல்லேன்னா அந்த ஊர்ல பண்ற மாதிரி பண்ணிடுவேன்.”

சாம்பார்....... வடை...... ரசம்..... வரிசையா வருது.

“இம்... அந்த ஊர்லே செய்யறாப்பல.”

கட்டித் தயிரை வெட்டிப் போட்டாங்க.

எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சவுடனே திண்ணைக்கு வந்தாங்க. வெற்றிலைப்பாக்கு தந்தாங்க. சாவகாசமாக தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கிறான்.

வீட்டுக்கார அம்மா தன் புருஷனைத் தொளைக்கிறா. அந்தாளு அந்த ஊர்லே செஞ்சேன்னுசொல்றானே. எதிர்வீட்டுக்காரன். உங்க பங்காளி. எப்பவும் உங்களையே பகைக்கிறான். இந்தாளுகிட்ட சொல்லி ஏதாவது செஞ்சிட்டீங்கன்னா எதிர்வீட்டுக்காரன் தொலைஞ்சிடுவான்” என்றாள்.

கணவன் மெல்ல அவன் பக்கமாக வந்து, “அந்த வூர்ல செஞ்சாப்பல செஞ்சிடுவேண்ணு சொல்றியே.
எதிர்வீட்டுக்காரன் பங்காளி. அவனைக்
கெடுக்கணும். ஏதாவது செய்யறயாய்யா..."

“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது.”

“பின்னே அந்த ஊர்லே...”

“அதுவா, சாப்பாடு கேட்டேன். இல்லைன்னாங்க, துண்டை உதறிப் போட்டுத் திண்ணையிலே படுத்துட்டேன். அதைத்தான் நீங்க சாப்பாடு போடலைன்னா
அந்த ஊர்ல செஞ்ச மாதிரி செய்யலாம்னு சொன்னேன்” என்றான்.

வீட்டுக்காரருக்கு எப்படியிருக்கும்?

***********    *************    *********   ******

கடிதம் எழுதினால் கால் நோகும்

            ஒருத்தனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனாலே பக்கத்து வீட்டிலே இருந்த ஒரு சிநேகிதனிடம் போய் ஒரு தபால் எழுதித் தரச் சொன்னான்.

சினேகிதன், “எனக்கு இன்னிக்குக் கால் வலிக்குது அதனாலே எழுத முடியாது”ன்னான்,

“கைதானே கடிதாசி எழுதுது. காலு ஏன் வலிக்கும்”னு கேட்டான்.

“நான் தபால் எழுதினா என் எழுத்து மத்தவங் களுக்குப் புரியாது. நான்தான் போய் படிச்சிக் காட்டணும்”னான்.

***********    ************  ***********  *******

நன்றி : தாத்தா சொன்ன குட்டிக் கதைகள் என்ற நூலிலிருந்து.
வாரியார் பதிப்பகம் - சென்னை.

************    ************    *********   *******

Post a Comment

1 Comments

  1. அருமையான பதிவு.வாழ்த்துகள்

    ReplyDelete