வகுப்பு : 12 - தமிழ்
இயல் 2 - கவிதைப்பேழை
பிறகொருநாள் கோடை
- அய்யப்ப மாதவன்
************** ************* ************
வணக்கம் நண்பர்களே ! இன்று இயல் 2 ல் கவிதைப் பேழையாக அமைந்துள்ள பிறகொரு நாள் கோடை என்ற கவிதையைக் காண்போம்.
கவிதை சொல்லும் செய்தி என்ன என்பதை நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவில் காண்போம்.
முதலில் நூல்வெளி பகுதியில் உள்ள செய்தியைப் பார்ப்போமா ?
நூல்வெளி
இக்கவிதை 'அய்யப்ப மாதவன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டள்ளது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன்; இதழியல் துறை , திரைத்துறை சார்ந்து இயங்கி வருபவர்: ' இன்று' என்ற கவிதைக் குறும்படத்தையும் மழைக்குப் பிறகம் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியீட்டுள்ளார்
நுழையும்முன்
மாறுபட்ட இரண்டு இணைகிறபோது புது அழகு புலப்படுகிறது. பகலும் இரவும் சந்திக்கும் அந்தி அழகு. கரையும் கடலும் சேரும் ஓரம் அழகு, மழையினூடே வெயில் வரும் வேளை வெளிப்படும் அழகுகள் பார்க்கத் திகட்டாதவை. நீரில் நனைந்து வெயிலில் காயும் நகரத்தில் பளபளக்கும் மரக்கிளைகள் சொட்டும் நீர்த்துளிகளும் வெயில் கண்டு மகிழ்ந்த பறவைகளின் இசைப்பும் நெஞ்சில் தடமாய் வழிகின்றன. வெயில் கண்டு மகிழ்ந்தாலும் மீண்டும் மழைக்காக நெஞ்சம் ஏங்கத்தான் செய்கிறது.
கவிதை
மழைக்காலத்தில் சூரியனின் திடீர்ப் பயணம்
காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம்
நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்
சுவரெங்குமிருந்த நீர்ச்சுவடுகள்
அழிந்த மாயத்தில் வருத்தம் தோய்கிறது
தலையசைத்து உதறுகிறது
மீதமான சொட்டுக்களை ஈரமான மரங்கள்
வெயில் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட
சங்கீதம் இசைக்கின்றன
மழைக்கனவிலிருந்து விடுபடுகிறது இவ்வூர்
இன்னும் நான் வீட்டுச்சுவரில்
செங்குத்தாய் இறங்கிய மழையை இதயத்தினுள்
வழியவிட்டுக் கொண்டிருக்கிறேன்
கை ஏந்தி வாங்கிய துளிகள்
நரம்புகளுக்குள் வீணை
மீட்டிக் கொண்டிருக்கிறது
போன மழை திரும்பவும் வருமென்று
மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன்
பிறகொரு நாள் கோடை வந்துவிட்டது.
**************** ************* **********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments