வகுப்பு - 11 - தமிழ்
இயல் - 1 - நம்மை அளப்போம்.
பாடப்பகுதி நெடுவினா
நன்னூல் பாயிரம்
************ **************** ************
2 ) நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.
முன்னுரை:
“முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்"
- நன்னூல்.
நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது. நன்னூலில் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் வாயிலாக அறியும் செய்திகளைப் பற்றி இங்கு காண்போம்.
பாயிரம்-அறிமுகம்:
நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொடுத்து நூல் முகப்பில் வைக்கும் முறைப்பற்றிப் பேசுவது பாயிரமாகும்.
பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்:
(1) முகவுரை - நூலுக்கு முன் சொல்லப்படுவது.
(ii) பதிகம் - ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.
(iii) அணிந்துரை, புனைந்துரை - நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது.
{iv) நூன்முகம் - நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது.
(v ) புறவுரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவைகளை நூலின் புறத்திலே சொல்வது.
( vi ) தந்துரை - நூலில் சொல்லிய பொருளல்லாதவைகளைத் தந்து சொல்வது.
(vii) பாயிரம் 1. பொதுப் பாயிரம், 2. சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.
பொதுப் பாயிரம்:
(i) நூலின் இயல்பு
(ii) ஆசிரியர் இயல்பு
(ii) கற்பிக்கும் முறை
(in) மாணவர் இயல்பு
(v) கற்கும்முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.
சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம்:
(i) நூலாசிரியர் பெயர்
(ii) நூல் பின்பற்றிய வழி
(ii) நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு
(iv) நூலின் பெயர்
(v) தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு.
(vi) நூலில் குறிப்பிடப்படும் கருத்து.
(vii) நூலைக் கேட்போர் (மாணவர் )
(viii ) நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது
சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமாகும்.
(ix) நூல் இயற்றப்பட்ட காலம், அது அரங்கேற்றப்பட்ட அவைக்களம், அது இயற்றப்பட்டதற்கான காரணம்
என்னும் இம்மூன்றையும் மேலே கூறப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும்
உள்ளனர். இப்பாடல் நூற்பா வகையைச் சார்ந்தது.
பாயிரத்தின் முக்கியத்துவம்:
(i) ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.
(ii ) மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக் கொண்ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும். அவை போன்று எல்லா வகை நூல்களுக்கு முன்னர்
அழகு தருவதாக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.
முடிவுரை:
நன்னூலில் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் பற்றி ஏழு நூற்பாக்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டதைக் கற்று பயன் பெறுவோம்.
************** ************ *************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
************** ************* ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments