அம்மி

 அம்மி 


@     ஐந்தாறு  தெருவரை 

         காற்றில்  

         அசைந்தாடி  வரும் 

         அம்மாவின்  சமையல்  வாசம் .


@      கோழிக் குழம்பு ,

          மீன்  குழம்பு 

         கருவாட்டுக் குழம்பு  என்றில்லாமல் ,

         கத்தரிக்காய் குழம்பும் 

         கமகம என மணக்கும் .


@      காரணம்  அம்மிதான் .

         அம்மா அம்மியில்  அரைப்பதே 

         ஓர்  அழகுதான் .


@     வயலினை  மீட்டுவதைப் போல் 

         அம்மிக்கல்லை  

         முன்னும் பின்னுமாய் 

         இலாவகமாய் அரைப்பாள்.


@     இடது  காலை நீட்டி ,

        வலது  காலை  மடக்கி ,

        தேங்காய்  சில்லை 

        அம்மி நடுவில் வைத்து ,

        இடது  கைப்பிடியை  அழுத்தி ,

        வலது  கைப்பிடியை  தூக்கி ,


@    நச்சட்டி   நச்சட்டி என 

       அடிக்கும்  போது

       சில் விரிசல்  கண்டு    

       அன்பின்  வலியால் கண்ணீர் விடும் .


@    சில  வழுக்கைத் தேங்காய் 

        சில்லுகள்  

        போக்கு  காட்டும் 

        அம்மியில் அகப்படாமல் .


@     அப்போதுதான் 

         அம்மாவிற்கு கோபம்  கொஞ்சம் 

         தலை  தூக்கும் .


@      அம்மி  கொத்தரவனக்  கூப்பிட்டு 

          கொத்தினாத்தான்  என்ன ?

          தேங்காய்ச் சில்லும் வழுக்க,

          அம்மியும்  வழுக்க ....

          அரைப்பதும்  வழுக்க ...

          என  எப்போதாவது

          கோபம்  கொட்டுவாள் .


@       அரைத்து  முடித்துடன் ,

           அம்மியில் இருக்கும்  கூழினை 

           குழவிக்  கல்லிற்கு  கொண்டு வந்து ,

           செங்குத்தாய்  நிறுத்தி , 

           வலக்கையின்  ஆட்காட்டி  விரலால் 

           எடுத்து  ,தட்டில்  போடுவாள் .


@       அரைத்து  அரைத்து  அம்மியும் 

           நடுவில் பள்ளமாகி ,

           வில்லாகிப்   போனது .


@       இன்று  பல 

          மம்மிகள்   உடலளவில் 

          டம்மியானதற்குக்  காரணம் 

          அம்மியை  மறந்து  -வேலையை 

          கம்மியாக்கிக்  கொண்டதால்தான் .


@      அங்கும்  இங்கும் 

          இயந்திரங்கள்   வைத்து 

          அரைக்கையில்,

          அம்மாவின்  துணை  என்னவோ 

          அம்மி  மட்டும்தான் .


@       அதனால் ...

           ஐந்தாறு  தெருவரை 

           காற்றில்  அசைந்தாடி  வரும் 

           அம்மாவின்  சமையல்  வாசம் .


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments