கும்பா - இந்தப் பெயராவது இன்று தெரியுமா ?


 கும்பா


 இரண்டு, மூன்று 

தலை முறையின் 

நினைவுச் சின்னமாய் 

பரணில் படுத்துக்  கிடக்கிறது 

கும்பாவும்,இணை லோட்டாவும்,


தாத்தாவின் இறப்பிற்குப் பின் 

கும்பாவைத் தேடுவாரில்லை  வீட்டில் !

சில கரப்பான் பூச்சிகளுக்கு

வீடாகவும் ,

சில சிலந்திகளுக்கு 

ஒரு சிப்பந்தியாகவும் 

தன்னை அடக்கிக் கொண்டு விட்டது கும்பா.


இரு தலைமுறைக்கு முன் 

இருந்த தாத்தாவின்  

வலிமைக்கு 

அது ஓர் உதாரணம் .


கம்மங் கஞ்சியை கரைத்து 

கருவாடோடு சாப்பிடுகையில் 

தாத்தா கும்பா கும்பாவாய் 

சாப்பிடுவாராம் .


தட்டுக்களில் 

சாப்பாடு என்றால் 

தத்தாவிற்குப் பிடிக்காது .

சாப்பிட்ட மாதிரியே 

இல்லையே என்பாராம்.


கும்பாவை புளி கொண்டு 

கழுவுவார்கள் போலும் .

இன்றும் கூட 

அதன் பளபளப்பு தெரிகிறது .


நவ நாகரிக காலமான இன்று 

காலை,இரவு டிபன் 

என்றாகிவிட்ட சூழலில் 

கும்பாவைத் தேடுவாரில்லை .


ரம்பாவைத் தெரிந்திருக்கும்

இளைஞர்களுக்கு

கும்பாவைத் தெரியுமா ?



பரணில் படுத்திருக்கும் கும்பா 

தாத்தாவின் நூறுவயது 

வாழ்க்கையை அவ்வப்போது 

சத்தமில்லாமல் எனக்கு 

அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது 

தாத்தாவின் புகைப்படத்தைப் போல கம்பீரமாய் !


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments