விவசாயி !

அழியும் விவசாயம்

ஆடையில்லா தேகம்
விவசாயியை அழிக்க
பாடைகட்டும் தேசம்.

முப்போகம் கண்டவன்தான் போராடுகிறான் 
முப்பது நாளாய் !
செவி கொடுக்காமல்
விஷ வார்த்தைகளைக் கொட்டுகிறதோ அரசு தேளாய் !

எலிகளுக்கு உணவிட்டவன்
தன் உணவாய் எலி தின்றும்
போராட்டம் செய்தான்.
தலைகீழாய் நின்றும்
கருணை காட்டவில்லையே
அரசாங்கம் ஒன்றும் !

அய்யா ! கண்ணுகளா !
சோறு போட்டவன
கூறு போடலாமா உங்க சட்டம் !
விவசாயி கையேந்துனா
நாடுதான் நாளை என்ன தின்னும் ?
உங்க வருங்கால சந்ததி
சோத்துக்கு என்ன பண்ணும் ?

வானம் பாத்த பூமியிலே
மழை போன பின்னால
மானம் மருவாதியும் 
போகனுமா மகராசங்களா ?

கோடிகோடியா கடன் வாங்கும்
கேடிகளின் கடன்கள்தான் தள்ளுபடி யாகுது !
வயலை நம்பி வயித்துப்பசிக்கு
கடன் வாங்கும் ஏழ சனம்
தள்ளாடி சாகுது !

இடுப்புத் துண்டோட
காடுகர தினம் நடந்து போகுறான்.
வெள்ளாம வீடுவந்து சேரலன்னா
துக்கம் தாங்காம
தூக்குப் போட்டுச் சாகுறான் !

டிஜிட்டல் இந்தியானு
ஏதோதோ சொல்றிங்க.
திங்கறதுக்கு சோறு தண்ணி இல்லனு
போராடுனா கண்டுக்காம கொல்றிங்க !

வண்ணத்திரையும் சின்னத்திரையும்
பாத்துப்புட்டு நாம சிரிக்கிறோம் !
விவசாய காப்பாத்துங்கனு 
டெல்லியில  ரெண்டு கைய விரிக்கிறோம் !

கிளீன் இந்தியாதான் இனி !
விவசாயி இல்லனா 
நாட்டுக்குப் 
பிடிக்கும்  சனி !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments