பம்புசெட்
ஊருக்குப் பக்கத்தில
பம்பு செட்டு !
ஓடுதையா மனம்
துள்ளிக் கிட்டு !
வெள்ளி அருவிபோல
விழுகுது தண்ணீர் !
அது விவசாயத்தக்
காக்க வந்த பன்னீர் !
உருக்கிவிட்ட கண்ணாடி போல
வரப்புலதான் ஓடுது !
புத்தம்புது தம்பதி போல
வயலுலதான் கூடுது !
வாண்டுக கூட்டம் வந்து
தலயத்தான் காட்டுது !
சர்ருனு விழும் தண்ணீ
மேலும் கீழும் ஆட்டுது !
அத்தை மக அறிவழகி
ஓரப் பார்வ பாக்குறா !
கண்ணடிச்சு நின்னா
களக்கொத்தியத் தூக்குறா !
பாத்தி கட்டி வளருதையா
பருத்திச் செடி !
பாவி மக பார்வயில
படபடக்குது மடி !
வெத வெதச்சு
நாத்து நட்டி
நாலா மாசம் வந்திடுமே
நெல்லு எனும் தங்கக் கட்டி !
பருவ மழ பெஞ்சாதான்
உருவமே மாறிப்போகும் !
பம்புசெட் தண்ணி வந்தா
பட்ட கடனும் ஆறிப்போகும் !
உள்ளத்துக் காதல் போல
ஊறுதையா ஊத்து !
ஊருசனம் கெக்களிக்கும்
தண்ணிவரத்தப் பாத்து !
கிராமத்து வாழ்க்கையில
பம்புசெட்டு ஆதாரம் !
பம்புசெட்டு இல்லையினா
வாழ்வே சேதாரம் !
தேங்காய்த் தண்ணிபோல
இனிக்குது பாரு !
எங்க ஊரு வாழ்க்க போல
வேறென்ன வேணும் கூறு !
பசுமைக்கவிஞர்.
மு.மகேந்திர பாபு.
5 Comments
பம்பு செட்டு.....மனசுக்குள்ள பாயுது......
ReplyDeleteஅருமை
ReplyDeleteபம்பு செட்டு மிகவும் அருமை ஐயா
ReplyDeleteநவரசங்களும் தங்கள் கவிதையில் நடனம் புரிகின்றன ஐயா!!!!! பம்பு செட்டு கவிதை பரதம் ஆடுகிறது !!! மிகவும் அருமை!!!!!!
Deleteமிக்க நன்றி ஐயா.
Delete