ஆனந்த விகடன் - சொல்வனம் - உயிரோட்டம் கவிதை - மு.மகேந்திர பாபு

 

ஆனந்த விகடன் - சொல்வனம்

03-07-2024

உயிரோட்டம் 



ஒருவாய்ச்சோறு

தொண்டைக்குழிக்குள் இறங்கியதும்

முகம் பார்க்கிறாள் மனைவி

என்ன பின்னூட்டம் வருமென்று!


வீட்டுப்பாடத்தைச்

சரியாக எழுதிவந்த மாணவன்

உற்றுநோக்குகிறான்

ஏட்டில் 'நன்று'

எழுதுவேனா என்று!


வருடம் முழுமையும்

நாளிதழ் போட்ட இளைஞன்

திருவிழா நேரத்தில்

'சார்' என அழைத்து

பதிலுக்காகக் காத்திருக்கிறான்.


மாதக்கடைசியில் எதிர்பாரா

மருத்துவச்செலவிற்காக

மனங்கலங்கி நிற்கிறார் நண்பர்.

நாம் உதிர்க்கும் வார்த்தைகளில்

ஓடிக்கொண்டிருக்கிறது 

பலரின் உயிரோட்டம்.


மு.மகேந்திர பாபு, மதுரை.


Post a Comment

0 Comments