கேப்பக்கருது
சுத்தும் முத்தும் பாத்தான் சுப்ரமணி. விருட்டென்று நுழைந்து , கோழி கழுத்தத் திருகுவதைப்போல படார் படார்னு திருகினான்.
யார்லெ அவன் ?
சத்தம் கேட்டு வெலவெலத்துப் போனான். ஒரு சுடுகுஞ்சியும் இல்லாத இந்த மத்தியான வெயிலுல எப்படிச் சத்தம் வருது ?
யார்ல களவாணி நாயி ? கோவமா கத்தினான் குருசாமி . பிஞ்சயின் நடுவிலிருந்து எந்திரிச்சபடியே.
மாமா , நான்தான் சுப்ரமணி.
உனக்கென்னலே பிஞ்சக்குள்ள மயிருபுடுங்கற வேல ?
ஒன்னுமில்லெ மாமா.கருது வெளஞ்சுருச்சானு பாத்தேன். இன்னும் பால்கருதாதான் இருக்கு.
அது எனக்குத்தெரியும். எத்தன கருதுல புடுங்குன ?
ஒன்னுதான் மாமா.
எலேய் ...
மூனு மாமா.
சாரத்துக்குள்ள என்னலெ ?
அதுவா ? வேல பாத்த பிஞ்சயில மொலாளி கொடுத்தது ?
இனி பிஞ்சக்குள்ள நொழஞ்ச காலத்தரிச்சுப்புடுவோன்.
இனிமே கேப்பக்கருத களவாங்கக்கூடாது. காட்டிக்கொடுத்துலுது.கம்மங்கருதுதான் களவாங்கனும்னு மொனங்கிக்கிட்டே வீடுவந்தான்.
பனோலயப் போட்டு கோழிய வாட்ற மாதிரி வாட்டினான். சொளக எடுத்து தரயில வச்சான். வாட்ன கருத சொளகுல வச்சு உள்ளங்கையால அழுத்தி தேச்சான். கேப்ப உதிர உதிர எச்சி வடிஞ்சது. கேப்ப கருது மணம் தெருவெங்கும் மணந்தது.
மு.மகேந்திர பாபு.
0 Comments