ஒரு சிறுமியின் ஏக்கம்

 


ஒரு சிறுமியின் ஏக்கம்  -( ஒலிபரப்பு -மதுரை வானொலி )


@      பள்ளிக் கூடம் போகப்  போறேன்  !

         சாயங்  காலம் திரும்பி  வாரேன் !


@     ஏழை வயிற்றில்  பிறந்த எனக்கு 

         ஏழு வயசாச்சு 

         எழுதப் படிக்கத் தெரிவதென்பது

         எட்டக் கனியாச்சு 


@     எஞ்சோட்டுப்  பிள்ளைக  எல்லாம் 

        ஓசி  பஸ்ஸில போகுது  !

        எந்தம்பியப் பார்த்துக்கிறதே 

        என் வேலையா ஆகுது  ! 


@       எண்ணெய்  இல்லா தலையோட 

          நான்  கிடக்கேன்  !

          உடம்புல  தெம்பில்லாம 

          தினம்  நடக்கேன்  !


@      ரெட்டை  சடை  யுனிபார்ம் 

          பாக்க  பாக்க  ஆசைதான்  !

          படிக்கப்  போறேன்னு  சொன்னா 

          அப்பாட்ட  கிடைக்கும்  பூசைதான்  ! 


@      கிழிஞ்ச  சட்டை  போட்டு போட்டு 

          மனசு  இத்துப்  போச்சு  !

          தம்பியத்  தூக்கித்  தூக்கி 

          சட்டைப்  பட்டன்  அத்துப்  போச்சு  !  


@       பள்ளிக்  கூடம்  போற பிள்ளைகளுக்கு 

          வாங்கித் தின்ன துட்டு  !

          நான்  கேட்டா  எனக்கு விழும்  

          தலையில   குட்டு !

 

@     ரெண்டு  மூனு பிள்ளைக  சேர்ந்து 

         படிக்குது  பாட்டு  !

         எழுதிப்  படிக்க  அவுகளுக்கு 

         இலவச   நோட்டு  !


@      புதுசு  புதுசா  வாங்குறாக 

          பிள்ளைக   பென்சில்  பேனா !

          பீடி ,சிகரெட்  வாங்கத்தான் 

         அப்பா  அனுப்புறார்  வீணா  !


@      மத்த  பிள்ளைகளைப்  போல 

         நானும்  பள்ளிக்குப்  போவேனா  ?

         கலர்  கலராக்  கட்டிப்போற 

         டீச்சர் போல  ஒருநா  ஆவேனா ?


@     புதுசா  ஏதோ கணக்கு 

        ஒன்னு   எடுத்தாக  !

        அதுல  எம்பேரையும்  எழுதி 

        எஸ் .எஸ்  எ... ல  கொடுத்தாக !


@     எங்கப்பா  அம்மாகிட்ட  பிள்ளைய 

         படிக்க  வைங்கன்னு   சொன்னாக  !

         தம்பிய  யார்  பாத்துக்கிறதுன்னு   

         ஏக்கத்தோட   நின்னாக  !


@       தம்பியோட  பள்ளிக்கு  வரட்டுமுன்னு 

          சாருக  சொன்னாக  !

          சுகமான  சுமையாய் தோளில் பையும் 

          இடுப்புல  தம்பியும்  !


@       இனிமே  எனக்கு  சந்தோசம்தான் 

          தினமும்  பாடம் படிப்பேன் ...

          பாட்டுப்  படிப்பேன் ....

          பஸ்ஸில  வருவேன் ...


@       பள்ளிக் கூடம்  போகப் போறேன்  !

           சாயங்  காலம்  திரும்பி  வாரேன்  !  


   மு. மகேந்திர  பாபு . ( நன்றி -அ.இ .வானொலி -மதுரை -இளைய                பாரதம்  நிகழ்ச்சியில்  ஒலிபரப்பான என் கவிதை  )

Post a Comment

0 Comments