பாட்டிக்கு ஒரு பாட்டு - பாட்டி இருக்கும் வீடு ! அது பாசம் நிறைந்த வீடு - இசைப்பாடல் - மு.மகேந்திர பாபு.

 


பாட்டிக்கு ஒரு பாட்டு - இசைப்பாடல்

             மு.மகேந்திர பாபு 


          பல்லவி


பாட்டி இருக்கும் வீடு  - அது

பாசம் நிறைந்த வீடு

பாட்டியில்லா வீடு - அது

பட்டுப்போன காடு 


         சரணங்கள்


கதை கதையாய்ச் சொல்லி - நம்ம

கவலை போக்குவாள் !

கருத்துடனே வளர்த்து  - நம்ம

வீரன் ஆக்குவாள்  !


வெற்றிக் கதை வீரக்கதை 

சொல்லித் தருகுவாள் !

பேரன் பேத்தி பேச்சினிலே

உள்ளம் உருகுவாள் !


பள்ளிக்கூடப் படிப்பு எல்லாம்

ரொம்பக் கம்மிதான் !

அனுபவத்தைச் சொல்லுதுங்க

வீட்டு அம்மிதான் !


தலைவலியா உடல் வலியா 

பாட்டியப் பாரு !

கைவச்சதுமே ஓடுது பார்

நோயெனக் கூறு !


முந்தானையில் முடிஞ்சிருப்பா

முந்நூறு காசு !

முத்தம் கொடுக்கும் பேரனுக்கு

காலணா காசு !


தலையை ஆட்டிப் பேசும்போது

ஆடிடுமே பாம்படம் !

தலையினிலும் இடுப்பினிலும்

தூக்கிடுவாள் நீர்க்குடம் !


மீன் குழம்பு வச்சுப்புட்டா

ஊரே மணக்கும் !

தேன் போன்ற பேச்சினிலே

உள்ளம் மிதக்கும் !


கம்மங்கஞ்சி கேப்பக்கூழு

கரைச்சுக் கொடுப்பா !

பேத்திக்கு துன்பம் வந்தா

உள்ளம் துடிப்பா !


தலைமுறையைக் கண்டவளாம்

தங்கப் பாட்டி !

தன்னலத்தை விட்டவளாம் 

எங்க பாட்டி !


பாட்டிகளைப் பக்கத்தில

வெச்சுக் கோங்க !

பாசத்தில ஈடில்லையென

மெச்சிக் கோங்க !


பசுமைக்கவிஞர்.

மு.மகேந்திர பாபு , இளமனூர் , மதுரை.

Post a Comment

0 Comments