ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
செயல்பாடு - 4
உரையாடலை அமைத்தல்
( வினாக்களும் விடைகளும் )
************ ************* **************
வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்.
இங்கே , நான்காவது செயல்பாடாக உள்ள உரையாடலை அமைத்தல் முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.
உரையாடலை அமைத்தல்
கற்றல் விளைவு:
தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல்.
மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் கூறிய சொற்களைப் பிறிதொரு சூழலில் தமது மொழிநடையில் பயன்படுத்துதல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
வணக்கம். குழந்தைகளே!
உரையாடல் என்பது இருவரிடையே நடைபெறும் செய்திப்பரிமாற்றம் அல்லது கருத்துப்பரிமாற்றம் எனலாம். இது பேச்சு வழியாகவோ எழுத்து வழியாகவோ அமையும். உரையாடல் வழியாக ஒரு கருத்தை அல்லது செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ளும்பொழுது அது எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக அமைகிறது அல்லவா?
எடுத்துக்காட்டாக வானொலி உரையாடல்கள், நாடக உரையாடல்கள், திரைப்பட உரையாடல்கள், நேர்காணல்கள், விளம்பரங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
உரையாடலை எளிமையான சொற்கள், சொற்றொடர்களால் அமைக்க வேண்டும். படிப்பவருக்கு கருத்து எளிதில் புரியும் வகையில் அமைத்தல் வேண்டும்.
உரையாடல்
(எ.கா.)
(சூழல் : பேருந்து நிலையத்தில் நிற்கும் பேருந்தில் ஏறி அமர்ந்த முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே நடைபெறும் உரையாடல். பேருந்து கிளம்பும் முன்....)
நடத்துநர் : எல்லாரும் பயணச்சீட்டைச் சரியான சில்லறை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்
முதியவர் : ஐயா! எனக்கு ஈரோட்டிற்கு ஒரு பயணச்சீட்டுகொடுங்கள்.
நடத்துநர் : ---------- ---------- -------- -------------
முதியவர் : --------- ----------- --------- -----------
உரையாடலை நிறைவு செய்வோமா?
நடத்துநர் : இந்தப் பேருந்து ஈரோடு செல்லாது பெரியவரே!
முதியவர் : அப்படியா! எனக்குத் தெரியாமல் ஏறிவிட்டேன். என்னை மன்னியுங்கள்.
நடத்துநர் : பரவாயில்லை. பெரியவரே!
முதியவர் : தயவுசெய்து எனக்கு உதவுங்கள்! எனக்குப் படிக்கத் தெரியாது.
நடத்துநர் : அதோ! அங்கே பாருங்கள். அங்குச் சிவப்புநிற பேருந்து நிற்கிறது அல்லவா?
அதில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.
முதியவர் : சரி,அப்பா!அதுதான் ஈரோடு போகுமோ? எத்தனை மணிக்குக் கிளம்பும்?
நடத்துநர் : பெரியவரே! இன்னும் ஐந்து நிமிடத்தில் புறப்பட்டுவிடும்.
முதியவர் : நன்றி ஐயா! படிக்கத் தெரியாமல் இருப்பதன் சிக்கலை இப்போதுதான்
உணர்கிறேன். என்ன செய்வது? சிறுவயதில் படிக்காமல் இருந்துவிட்டேன்.
நான் வருகிறேன் தம்பி! நன்றி.
************* ************** *************
மதிப்பீட்டுச் செயல்பாடு
உரையாடலை நிறைவுசெய்க.
(சூழல்: வகுப்பறை- தமிழ்ப் பாடவேளை)
மாணவர்கள் : வணக்கம் அம்மா!
ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! மித்திரன் கையில் ஏதோ வைத்துள்ளாய்.
என்ன அது?
மித்திரன் : அம்மா! இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இன்று எனக்குப் பிறந்தநாள்.
ஆசிரியர் : அப்படியா! மகிழ்ச்சி! அனைவரும் மித்திரனுக்கு கைதட்டிப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள்.
மாணவர்கள் : பிறந்தநாள் வாழ்த்துகள் மித்திரன்!
மித்திரன் : நன்றி அம்மா!நன்றி நண்பர்களே!
ஆசிரியர் : வாழ்த்துகள் மித்திரன்! இந்தப் பிறந்தநாளில் ஏதேனும் சிறப்பு உண்டா?
மித்திரன் : நான் இன்றுமுதல் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப் போகிறேன், அம்மா!
ஆசிரியர் : அப்படியா!அது என்ன உறுதிமொழி?
மித்திரன் : என் பிறந்த நாளில் இனி ஆண்டுதோறும் ஐந்து மரக்கன்றுகள் நடுவேன் அம்மா
ஆசிரியர் : அப்படியா மிக்க மகிழ்ச்சி. நல்ல உறுதிமொழி.
மித்திரன் : மிக்க நன்றி அம்மா
5. உரையாடலை நிறைவுசெய்க.
கலைமகள் : வணக்கம் அத்தை!
மங்களம் : வணக்கம் கலை! உள்ளே வா. உட்கார். என்ன வேண்டும்?
கலைமகள் : எங்கள் பள்ளியில் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சில
செயல்பாடுகள் வழங்கி உள்ளார்கள். அவற்றுள் எனக்குக் கொடுக்கப்பட்ட செயல்பாடு- தகவல்கள் சேகரித்தல் அத்தை!
மங்களம் : அப்படியா, நல்லது. என்ன தகவல் வேண்டும்? கேள். சொல்கிறேன்.
கலைமகள் : அத்தை, உங்கள் குடும்பத்தைச் சார்ந்து நான் கேட்கும் விவரங்களை நீங்கள் எனக்குச் சொல்வீர்களா?
மங்களம் : ம்.. உறுதியாக, கேள் கலை!
கலைமகள் : உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பெரியவர்கள் உள்ளனர் ?
மங்களம் : 5 பெரியவர்கள் உள்ளனர்.
கலைமகள் : யாரெல்லாம் கொரனா தடுப்பூசி போட்டுள்ளீர்கள் ?
மங்களம் : அனைவருமே போட்டுள்ளோம்.
கலைமகள் : அப்படியா அத்தை ? விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள். வாழ்த்துகள் அத்தை.
மங்களம் : நன்றி கலைமகள்
************* ************* *************
0 Comments