பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 - செயல்பாடு 2 , வினாச்சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல் / 10th TAMIL - REFRESHER COURSE - ACTIVITY - 2

 

                பத்தாம் வகுப்பு - தமிழ் 

                   தமிழ்நாடு அரசின் 

   புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022

             செப்டம்பர் 2021 - மாத 

கற்றல் - கற்பித்தல்  செயல்பாடுகள்

                  வணக்கம் அன்பு நண்பர்களே ! நம்முடைய பள்ளிக் கல்வித்துறை சார்பில் வந்துள்ள தமிழ்நாடு அரசின் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 10ஆம் வகுப்பு  தமிழில் மொத்தம் 20 தலைப்புகள் உள்ளன. இதில்  கற்றல் விளைவுகள் , ஆசிரியர் செயல்பாடு , கற்பித்தல் செயல்பாடுகள் , மாணவர் செயல்பாடு மற்றும் மதிப்பீடு என்று மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

         செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இக்கட்டகம் மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பையும் , அதிலுள்ள செயல்பாடுகளையும் , மதிப்பீடுகளுக்கான விடைகளையும் காண்போம். 


                    செயல்பாடு - 2

வினாச் சொற்களை அறிந்து

 வினாக்களை   உருவாக்குதல்

கற்றல் விளைவு:

தாம் பயன்படுத்தும் மொழியின் நுட்பமான கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

கணிப்பொறி எவ்விதம் வேலை செய்கிறது?

என்பவை வினாக்கள்.

                          இவ்வாறு ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள ஒருவர், மற்றவரிடம் வினவுவது வினா எனப்படும்.

சொற்களில் / தொடரில், வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.

விளக்கம்:

எ,யா,ஆ, ஓ,ஏ என்பவை வினா எழுத்துகள் என அறிவோம்.

பின்வரும் அட்டவணையைப் பாருங்கள். வினா எழுத்துகள் சொற்களின் எந்தெந்த இடங்களில் வந்து வினாப் பொருளைத் தருகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

                 இப்போது இவற்றைப் போன்ற வினாச்சொற்களை நாம் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதையும் வினாக்கள் உருவாவதற்குரிய காரணங்களையும் பார்க்கலாம்.

மாறன் தன் நண்பனிடம் "நாளை தேர்வு உண்டா?"என்று கேட்டான்.

              இந்த வினாவுக்கான காரணம் என்ன தெரியுமா? நாளை தேர்வு உண்டு எனில் இன்று பாடங்களைப் படிக்க வேண்டும், தேர்வுக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைக்க வேண்டும்; இல்லையெனில் எதுவும் செய்யவேண்டாம் என்பன போன்றவையாக இருக்கலாம். அல்லது இன்று மழை பெய்வதால் நாளை தேர்வு உண்டா என்ற ஐயம் காரணமாகவும் வினா எழுப்பி இருக்கலாம். எந்தெந்தக் காரண காரியங்களுக்காக வினாக்கள் கேட்கப்படுகின்றன என்று பார்ப்போம்.

                        கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப்படித்துக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை ஆராயவும்.

சட்டமேதை அம்பேத்கர்

             அம்பேத்கர் லண்டனில் சட்டப்படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போராடவேண்டும் என்றும் முடிவுசெய்தார். 1924ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக 'ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை' என்ற அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் போராடினார். 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படும்முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்" என்று கூறினார்.

வினாக்கள்:

1. அம்பேத்கர் எங்குப் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார்? (எங்கு)

2. அம்பேத்கர் இந்தியா திரும்பியபோது இந்தியாவில் யாருடைய ஆட்சி நடைபெற்றது?

(யாருடைய)

3. அம்பேத்கர் யாருக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்?

(யாருக்கு)

4. அம்பேத்கர் எதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்? (எதில்)

5. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்கப் போராட வேண்டும் என்று முடிவு செய்தார்? (என்ன)

6. எந்த ஆண்டு ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை நிறுவப்பட்டது? (எந்த)

7. எப்போது ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை நிறுவப்பட்டது? (எப்போது)

8. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவையை நிறுவியவர் யார்? (யார்)

9. அம்பேத்கர் எதற்காகப் போராட வேண்டும் என்று முடிவு செய்தார்? (எதற்காக?)

10. அம்பேத்கர் எந்த அமைப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் போராடினார்? (எந்த)

மேலும்,



1. மரக்கிளை எதனால் முறிந்தது? (முறிந்த காரணத்தை அறிய )

2. மரத்தை வளர்த்தது யார்? (செயல் செய்தவரை அறிய)

3. மரத்தில் உள்ளது குயிலா? காகமா? (ஐயத்தைத் தெளிவுபடுத்த)

4. மரத்தடியில் நிற்பவர் வேந்தனா? செழியனா? (ஐயம்)

5. நீ ஏன் மரத்தில் ஒளிந்தாய்? (காரணத்தை அறிய)

போன்ற வினாக்கள் எதன் பொருட்டுக் கேட்கப்பட்டிருக்கும் என்பதை அறியலாம்.

**************    ***************   ***********

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1.கொடுக்கப்பட்ட விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(எ.கா.)ஆய்வு என்பது அறிவின் வெளிப்பாடு.

வினா: அறிவின் வெளிப்பாடு எது?

1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

வினா: தமிழகத்தில் எங்கு நடந்த அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன ?

* அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்த மட்பாண்டங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை ?

* எந்நாட்டைச் சேர்ந்த மட்பாண்டங்கள் அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்தன ?

2 ) உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று இல்லை.

வினா: உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று உள்ளதா ?

3. தமிழக மக்கள்  பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக   மாற்றப்பட்டுள்ளன.

வினா: தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளன ?

4. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

வினா: உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறுபவர் யார் ?

***********   **********   **********   *********

2. பத்தியைப் படித்துக் காரண காரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக

               பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில் அமைந்தவை; மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக்  கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புரை செய்தார்; சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ    அரும்பாடுபட்டார்;அதற்காகப் பலமுறை சிறை சென்றார்;பலரின்கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தார்.

வினாக்கள்

1. பெரியாரின் சிந்தனைகள் எப்படிப்பட்டவை ?

2 . தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் யார் ?

3. பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த கருத்துகள் எவை ?

4. சமுதாயத்தை மூடப்பழக்கங்களில் இருந்து மீட்க அரும்பாடுபட்டவர் யார் ?

5. பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தப் போராளி என்பதை நிறுவுக.

***************     ***********    ************

விடைத்தயாரிப்பு

திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,

சருகுவலையபட்டி ,மேலூர் , மதுரை.

*************    *************  **************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************




Post a Comment

0 Comments