பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 - குறுவினாக்கள் - பகுதி - 2
வினாக்களும் விடைகளும்.
*************** ************* ************
13. பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப் பெற்றார்?
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுக்கொரு புலவன்.
14. விரிச்சி - விளக்குக.
* ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய் தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்,
** அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழி கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
15. முல்லைப்பாட்டு குறிப்பு எழுதுக.
* முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இப்பாடலை இயற்றியவர் நப்பூதனார்.
* * இது 103 அடிகளைக் கொண்டது முல்லைப்பாட்டு.
*** ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்.
16. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது தொகைநிலைத் தொடர் எனப்படும்.
(எ.கா) கரும்பு தின்றான்
17. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் அவை யாவை?
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.
1 ) வேற்றுமைத் தொகை,
2 ) வினைத்தொகை
3 ) பண்புத்தொகை,
4 ) உவமைத்தொகை
5 ) உம்மைத்தொகை
6 ) அன்மொழித்தொகை.
18. வேற்றுமைத்தொகை விளக்குக.
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் ஐ , ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும். (எ. கா) மதுரை சென்றார்
19. வினைத்தொகை விளக்குக.
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது வினைத்தொகை எனப்படும்.
எ.கா : வீசுதென்றல், வருபுனல்.
20. பண்புத்தொகை விளக்குக.
நிறம், வடிவம், சுவை, அளவு ஆகியவற்றை உணர்த்தும் பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் மை என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
எ.கா : செங்காந்தள் (செம்மையாகிய காந்தள்)
21. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை - விளக்குக.
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
எ.கா : சாரைப் பாம்பு.
22. உவமைத்தொகை விளக்குக.
உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா : மலர்க்கை (மலர் போன்ற கை).
23. உம்மைத்தொகை - விளக்குக.
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.
எ.கா : அண்ணன் தம்பி.
24. உம்மைத்தொகை எவற்றைத் தொடர்ந்து வரும்?
உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வரும்.
25. அன்மொழித்தொகை - விளக்குக.
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
எ.கா : சிவப்புச் சட்டை பேசினார்.
************ ************ *************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ***********
0 Comments