வகுப்பு - 11 , தமிழ்
இயல் - 1 , மொழி
கவிதைப்பேழை - நன்னூல் பாயிரம்
பவணந்தி முனிவர்.
*************** ************ ************
வணக்கம் மாணவ நண்பர்களே ! நாம் 10 & 12 ஆம் வகுப்பைத் தொடர்ந்து மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 11 ஆம் வகுப்பு தமிழ் பாடப்பகுதிகளைப் பதிவிட்டு வருவிறோம். அந்த வகையில் முன்பு யுகத்தின் பாடல் என்ற தலைப்பிலான கவிதைப்பேழையைப் படித்து மகிழ்ந்தோம். இன்று நாம் கவிதைப்பேழை பகுதியில் அமைந்துள்ள நன்னூல் - பாயிரம் கண்டு மகிழ்வோம்.
முதலில் நுழையும் முன் பகுதியில் உள்ள செய்திகளைக் காண்போம்.
நுழையும்முன்
நூலைப் புரிந்துகொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அமைப்பினைக் காணலாம். தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் பின்பற்றி எழுதப்பட்ட நூலான நன்னூலில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் ஆகியன குறித்து விளக்கப்பட்டுள்ளது.அவற்றுள் ஏழு நூற்பாக்களை நம் பாடப்பகுதியில் பார்ப்போம்,
ஆசிரியர் பற்றிய செய்திகளைக் காண்போம்.
நூல்வெளி
நன்னூல், தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும். இது, பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என 5 பகுதிகளாகவும் சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதிகளாகவும் அமைந்துள்ளன. சீயகங்கள் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது.
ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரப்பிரபாவின் கோவில் உள்ளது. இங்கே பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.
நண்பர்களே ! பாயிரத்திற்குள் செல்லும்முன் நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் பாயிரம் குறித்து விளக்கியுள்ள காட்சிப்பதிவினை முதலில் காண்போம்,அப்போதுதான் உங்களுக்கு மிக எளிமையாகப் புரியும்.
நண்பர்களே ! காட்சிப் பதிவு முழுமையும் பார்த்தீர்களா ? இப்போது நாம் பாயிரத்திற்குள் புகுவோம்.
பாயிரம் இல்லது பனுவல் அன்றே
1. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்
2. பாயிரம் பொது சிறப்பு எனஇரு பாற்றே
3. நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவையொதுப் பாயிரம்
4. ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் பாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய்எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே
5. காலம் களனே காரணம் என்று இம்
மூவகை ஏற்றி மொழிநரும் உளரே"
6. ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே
7. மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது.
- பவணந்தி முனிவர்
பாயிரத்திற்கான பொருளைக் காண்போமா ?
பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்
அ ) முகவுரை - நூலுக்குமுன்
சொல்லப்படுவது.
ஆ) பதிகம் - ஐந்து பொதுவும்பதினொரு சிறப்புமாகிய பலவகைப்பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.
இ) அணிந்துரை
ஈ) புனைந்துரை - நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது.
உ) நூன்முகம் - நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.
ஊ ) புறவுரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.
எ) தந்துரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது
2. பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.
3. நூலின் இயல்பு ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை , மாணவர் இயல்பு , கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.
4. சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம்
நூலாசிரியர் பெயர்
நூல் பின்பற்றிய வழி
நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு
நூலின் பெயர்
தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு
நூலில் குறிப்பிடப்படும் கருத்து
நூலைக் கேட்போர் (மானவரி
நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்
ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம் ஆகும். இப்பாடல் நூற்பா வகையைச் சார்ந்தது.
5. நூல் இயற்றப்பட்ட காலம் , அது அரங்கேற்றப்பாட் அவைக்களம், அது இயற்றப்பட்டதற்கான காரணம் என்னும் இம்மூன்றையும் மேலே கூறுப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும் உள்ளனர்.
6. ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.
7. மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக்கொண்ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும். அவை போன்று எல்லாவகை நூல்களுக்கும் முன்னர் அழகு தருவதற்காக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.
இலக்கணக்குறிப்பு
காட்டல், கோடல் - தொழிற்பெயர்கள்
ஐந்தும் - முற்றும்மை
கேட்போர் - வினையாலணையும் பெயர்
மாநகர் - உரிச்சொற்றொடர்
பகுபத உறுப்பிலக்கணம்
வைத்தார் - வை + த் + த் + ஆர்
வை - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
*************** ************* **********
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *******
0 Comments