ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் 2
பயிற்சித்தாள் - 6
கவிதைப்பேழை - புறநானூறு
1. கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகளுக்கு அடைப்புக்குறிக்குள் உள்ளசொற்களைக் கொண்டு நிரப்புக.
(பண்புத்தொகை, தொழிற்பெயர், வினையாலணையும் பெயர், வினைத்தொகை)
அ) நிறுத்தல் - தொழிற்பெயர்
ஆ) கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்
இ) அடுபோர் - வினைத்தொகை
ஈ ) நல்லிசை - பண்புத்தொகை
2. புறநானூற்றுப் பாடலடிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பொருளுடன் பொருத்திக்காட்டுக.
பாடலடிகள்
"நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;"
பொருள்
நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது;உணவையேமுதன்மையாகவும்உடையது. எனவே, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் - நீரின்றி அமையாத உடல் உணவால் அமைவது
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! - உணவு தந்தவர் உயிர் தந்தவர் ஆவர்.
உண்டி முதற்றே உணவின் பிண்டம் - உடல் உணவையே முதன்மையாகவும் உடையது.
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே - உணவெனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.
3. அடிக்கோடிட்ட சொற்களைக் கொண்டு தொடர்கள் அமைக்க.
அ) "மல்லல் மூதூர் வய வேந்தே!"
மதுரை மாநகர் விழாமலி மூதூர் எனப் புகழப்படுகிறது.
ஆ) "ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி"
ஞானம் பெற்ற மக்களால் ஞாலம் சிறக்கும்.
4. வறண்ட நிலமும் வளமான நிலமும் பேசுவதாக உரையாடல் உருவாக்குக.
வறண்ட நிலம் - நீயும் என்னைப் போன்ற நிலம்தானே ? நீ மட்டும் எப்படி வளமாக இருக்கிறாய் ?
வளமான நிலம் - ஆமாம் ! நானும் உன்னைப் போன்ற நிலம்தான். காடு வளர்த்துக் கரை உயர்த்தியதால் வளமானேன்.
வறண்ட நிலம் - வளம் என்பது பிறப்பில் இல்லை. வாய்ப்பில் இருக்கிறது என்கிறாய்? நானும் உன்னைப்போல் மாறுவேன்.
வளமான நிலம் - மகிழ்ச்சி. வளமான நிலமா வளரும் நாடு. நாமும் அதையே நாடுவோம்.நன்றி.
5. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
"நீரும் நிலமும் புணரியோர். ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!"
இடம் : குடபுலவியனார் , பாண்டிய நெடுஞ்செழியனைப் பாடிய புறநானூற்றுப் பாடல்.
பொருள் : நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.
விளக்கம் : நாட்டில் நீர்வளம் பெருக்க வேண்டி புலவர் மன்னனை விழைகிறார். உடம்பிற்கு உயிர் போன்று நிலத்திற்கு நீர் அவசியம் . எனவே நீர்நிலைகளைப் பெருக்க வேண்டும் என்கிறார்.
6. கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நான்கு தொடரை எழுதுக.
"நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்வது, பாண்டிய
நெடுஞ்செழியனின் புகழை நிலை நிறுத்தும் "-குடபுலவியனார்.
அ ) புதிய குளங்களை வெட்ட வேண்டும்.
ஆ) குளங்களில் மழை நீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும்.
இ ) மழை நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.
ஈ ) ஆட்சியாளர்களுக்கு அதுவே புகழைத் தரும்.
7."தண்ணீர் ...... கண்ணீர்" கவிதை உணர்த்தும் மையக்கருத்தை எழுதுக.
தண்ணீர் ...... கண்ணீர்
"கண்ணீர் மனிதனின் விழிகளில் எப்போதும்
தண்ணீர் கிடைக்காமல் போனதால் எப்போதும்
கண்ணீரோ வாழ்க்கையின் அங்கமாய் ஆயிற்று
தண்ணீரோ மனிதனின் கானல்நீர் ஆயிற்று
கண்ணீரைக் காண்பதற்குக் காத்திருக்கத் தேவையில்லை
தண்ணீரைப் பார்ப்பதற்கே இத்தனை நாள் காத்திருப்பு"
தண்ணீர் கிடைக்காமல் மக்கள் படும் துன்பம் பெரிது. கண்ணீரை நாம் எளிதாகக் காட்டி விடலாம். தண்ணீரை உண்டு பண்ண முடியாது.எனவே , தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
8. படத்தைப் பார்த்துக் கவிதை படைக்க.
பசுமையான மரம்- ஒரு வீடு
பச்சை மர நிழலே !
பாங்காய் அமைந்த வீட்டிடம்
பட்டமரம் தான் வாழ்ந்து கெட்ட
கதையைச் சொல்ல ,
வீடோ
தன்னில் வாழ்ந்து கெட்ட
மனிதர்களின் கதை கேள் என்றது.
********************** ********************
மேலே உள்ள பயிற்சித் தாள் 9 - வினாக்களின் விடைகளை இனிய , எளிய விளக்கத்துடன் காட்சிப் பதிவாகக் கண்டு மகிழலாம்.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
நன்றி - திரு.மணிமீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , மதுரை.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம்
உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
************************* ***************
0 Comments