பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 - மொழி
கவிதைப் பேழை
இரட்டுற மொழிதல்
சந்தக்கவிமணி தமிழழகனார்
வணக்கம் மாணவ நண்பர்களே ! ஆசிரியத் தோழர்களே ! இன்று நாம் இரட்டுற மொழிதல் பாடத்தில் உள்ள பாடப்பகுதி வினாக்கள் & கூடுதல் வினாக்களுக்கான விடைகளைக் காண்போம் . முதல் பகுதியில் பாடலையும் அதற்கான விளக்கத்தையும் வரிவடிவிலும்பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தைக் காட்சிப் பதிவிலும் கண்டோம். தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.
************************* **************
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
[விடை: அ வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
குறுவினா
1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
வெளியூர் சென்று வந்த பாவாணரிடம் அவரது நண்பர் பகலுணவும் இராவுணவும் எப்படி இருந்தது என்று கேட்டார். அதற்கு பாவாணர் பகலுணவு 'பகல்' உணவாகவும், இராவுணவு ‘இராஉணவாகவும் இருந்தது என்றார்.
பொருள்:
பகல் என்பதன் பொருள் - பகர்தல்
பகல் உணவை அனைவரும் பகர்ந்து உண்டோம்.
இரா என்பதன் பொருள் - இல்லை
இரவு உணவு இன்றி அனைவரும் உறங்கினோம்
- என சிலேடை விளங்கக் கூறினார்.
சிறுவினா
1 ) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கு :
(i) முத்தமிழ் :
கடல் - முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது. தமிழ் - இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் விளங்குகிறது. .
(ii) முச்சங்கம் :
கடல் - வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத்தருகிறது. தமிழ் - முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
(ii) மெத்தவணிகலன் (மெத்த + அணிகலன்) :
தமிழ், ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றுள்ளது. கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.
(iv) சங்கத்தவர் காக்க :
தமிழ், சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.
கடல், தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்.
கூடுதல் வினாக்கள் :
பலவுள் தெரிக
1. 'தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான' - இரட்டுற மொழியணி அமைய பாடிய
ஆசிரியர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
[விடை இ தமிழழகனார்
2. 'மெத்த வணிகலன்' பிரிக்கும் முறை
அ) மெத்த + வணிகலன்
ஆ) மெத்த + அணி + கலன்
இ) மெத்த + அணிகலன்
ஈ) மெத்த + அணிகள் + அன்
[விடை: இ) மெத்த + அணிகலன்
3. சிலேடைகள் எதில் பயன்படுத்தப்படுகின்றன ?
அ) இன்று சிலேடை அணி செய்யுளில் மட்டும் பயன்படுத்தப் படுகின்றன.
ஆ) உரைநடையிலும், பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப் படுகின்றன.
இ) செய்யுளிலும், உரைநடையிலும், மேடைப் பேச்சிலும் சிலேடைகள் பயன் படுத்தப்படுகின்றன.
விடை: இ) செய்யுளிலும், உரைநடையிலும், மேடைப் பேச்சிலும் சிலேடைகள் பயன் படுத்தப்படுகின்றன.
4. முத்தமிழில் பொருந்தாதது எது?
அ) இயல்
ஆ) இசை
இ) நாடகம்
ஈ) அறிவியல்
[விடை: ஈ] அறிவியல்
5. கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை: ஆ] மூன்று
6. கடல் தன் அலையால் எதை தடுத்து நிறுத்திக் காக்கிறது?
அ) மணல்
ஆ) சங்கு
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
விடை: ஆ சங்கு
7. முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
விடை: ஆ கடல்
8. தமிழையும் கடலையும் ஒப்பிட்டுக் கவி பாடியவர் யார்?
அ) சந்தக்கவிமணி தமிழழகனார்
ஆ) இரட்டைப் புலவர்கள்
இ) பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
ஈ) ஒட்டக்கூத்தர்
விடை ; அ) சந்தக்கவிமணி தமிழழகனார்
9. தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
(விடை: ஆ ஐம்பெருங்காப்பியங்கள்
10. இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) சிலேடை அணி
விடை : ஈ ) சிலேடை அணி
11. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
அ) இரட்டுற மொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
விடை : அ ) இரட்டுற.மொழிதல் அணி
12. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
விடை: ஆ] சண்முகசுந்தரம்
13. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
விடை: ஆ பன்னிரண்டு
14. முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு
விடை: ஈ தனிப்பாடல் திரட்டு
குறுவினா
1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
.
2. கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் யாவை?
• முத்தும், அமிழ்தமும் கிடைக்கிறது.
வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகள் கிடைக்கின்றன.
4. தமிழ்மொழி குறித்து தமிழழகனார் கூறிய செய்தி யாது?
• தமிழ் இயல், இசை, நாடகம் முத்தமிழாய் வளர்ந்தது.
முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
ஐம்பெருங் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
5. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன? அதன் வேறுபெயர் என்ன?
* ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.
* வேறுபெயர் - சிலேடை.
6. சிலேடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சிலேடை இரண்டு வகைப்படும். அவை:
• செம்மொழிச் சிலேடை
* பிரிமொழிச் சிலேடை
கற்பவை கற்றபின்
அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர்கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., “அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே” என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின்
சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.
ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒருமுறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் போது அவர்
குறிப்பிட்டது: “அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.”
இ) தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார். இவைபோன்ற பல சிலேடைப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றைத் தொகுத்துச்
சொல்நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக.
********************** **********************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
6 முதல் 12 வகுப்பு வரையிலான தமிழ்ப்பாட காட்சிப் பதிவினை GREEN TAMIL என்ற YoubTube சேனலில் நீங்கள் பார்த்து மகிழலாம்.
போட்டித்தேர்விற்குத் தயார் செய்பவர்கள் TAMIL INBAM.IN என்ற இணைய தளத்தில் தங்கள் தேர்விற்கான பாடப்பகுதிகளைப் பெற்றுப் படிக்கலாம்.
வெற்றி நமதே !
0 Comments