கரிசல் பூமி

 கரிசல் பூமி 


உலர்ந்த உதடுகள் 

இவ்வார்த்தையை 

உச்சரிக்கும்போது 

உள்ளம் பருத்திப் பூவாய்ச் சிரிக்கும் .


கோடையில் 

நிலத்தின் வயிறு 

கிழிசல் விரிசல்களால் 

வானம் பார்த்து 

வாய் பிளக்கும் .


மஞ்சனத்திப் பூ 

இங்கே மல்லிகைப் 

பூவாய் மணக்கும் .


காலம் எல்லாவற்றையும் 

மாற்றி விட்டதே  !


திலா கிணறு 

மண்ணோடு மண்ணாகி விட்டது.

கமலக் கிணறு  காணாமல்

போய்விட்டது .

பம்பு செட் படுத்து விட்டது .


வீட்டருகே இருக்கும் 

வயல் முட்புதராகி விட்டது .


அமைதிக்குப் பஞ்சமில்லை .

அவ்வப்போது வெட்டு குத்துக்களுக்கும்தான் .


கருத்திருக்கும் 

மக்களின் முகம் 

மேகங்கருக்கும் போது

பிரகாசமாகும் .


பரந்திருக்கும் மேகம் போல 

மக்களின் 

மனசும் இருக்கும் .


நல்ல தங்காள் காலத்தில் 

இருந்த பஞ்சம் 

இன்னும் இப்பூமியில் 

மிச்ச மிருக்கிறது .


வானம் வசப்பட வில்லையெனில்; 

பாலையாய் மாறும்  

கரிசல் பூமி .

வெம்மை விழிகளில் பட்டு 

கண்ணீருக்குப் பதில் 

ரத்தமே வரும் .


மு.மகேந்திர பாபு

Post a Comment

0 Comments